கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5/4/20

புதுமைப்பித்தனின் "நியாயம்" சிறுகதைக் குறித்த ஒரு வாதம்- கட்டுரை

(புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சிறுகதைக் குறித்தும் பிரத்தியேகமான, சமூகவியல், அரசியல்-இயங்கியல், வளர்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் விவாதிப்பதென சிறு விழைவு. அதற்கான முதல் முயற்சி).



                     சிறுகதைக்கான இணைப்பு 


இந்த பதிவை எழுதுவதற்கு முன் சற்றேறக்குறைய ஒரு மணி நேரமாக இந்தியாவில் நடந்த முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சுபகுணராஜன் எழுதிய பழைய வலைப்பதிவை தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்தப்பாடில்லை. நினைவில் இருந்ததிலிருந்து குறிப்பிட வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் ஜாதிய படிநிலை சார்ந்து மக்கள் பெரும்பிரிவாக முதன்முதலாக வகுக்கப்பட்டதை குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டின் அரசியல் பண்பாட்டு தனித்தன்மைக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஒரு சிறிய நிலப்பரப்பில்- வரலாறு, பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் சின்னங்களுக்கு அப்பாற்பட்டு- பல்வேறு சமூக குழுக்கள் "ஆண்ட பரம்பரை" பதாகையை கோருவதையும், சிலர் அதற்கு ஏகபோகம் கோருவதையும் எப்படி புரிந்துகொள்வது? சமூக குழுக்களின் அரசியல் கோரலால், போட்டியால், அதிகாரம் தமிழகத்தில் சமூகப் பரவலாக்கம் கண்டுள்ளது. வன்னியர்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை ஆட்சியில் இருந்த மு.கருணாநிதி ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் போது, பிரத்யேக ஒதுக்கீடாக இல்லாமல் "மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்" எனும் புதிய வகைப்பாட்டில் பிற சமூகங்களையும் இணைத்தே அமலாக்கினார். ஒரு சமூகம் மற்ற சமூகங்கள் மீது நிகழ்த்தும் "சமூக நீதி சூறையாடல்" எனும் சம கால சொல்லாடல்கள் எதுவும் எழுவதற்கு  முன்பாகவே கருணாநிதியின் தேர்ந்த அரசியல் பிரக்ஞை அவரை மேற்சொன்ன விஷயத்தில் வழிநடத்தியுள்ளதாக புரிந்து கொள்ளலாம். இந்த சமூக நீதி சார்ந்த செயல்முறை அரசியல் லாவகம் (Dexterity), களத்தில் இருந்து அல்லாது வேறு எங்கிருந்து அவர் கிடைக்கப் பெற்றிருக்க முடியும்? சமூகத்தின் விளிம்புநிலையில் வைக்கப்பட்டு இருந்த இசை வேளாளர் சமூகத்தில் இருந்து வந்த கருணாநிதியின் செயல்திறன் இவ்வகையான நுணுக்கங்களுடன் அணுகக்கூடியதென்றால், தமிழகத்தில் பரந்து விரிந்த, ஆனால் பிற்படுத்தப்பட்ட நாடார் சமூகத்தில் இருந்து வந்த காமராஜரின் அரசியல் அதிகார பரவலாக்க சாத்தியப்பாடு என்னவாக இருந்தது?       






கடந்த ஒரு நூற்றாண்டில் நாடார்கள் குறித்த (அதிகாரப்பூர்வ அல்லது வேறு ஏதேனும்) பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த எனது அறிவின் போதாமையோடே புதுமைப்பித்தனின் "நியாயம்" சிறுகதையை அணுக வேண்டியுள்ளது. மிகச் சிறியதாக கதை அமைந்திருப்பினும், நீதிக்கதை வடிவில், அது வைக்கும் விமர்சனம் கூரியது. கதையின் ஆரம்பத்திலேயே "கர்த்தருடைய நீதி வழங்கப் பெறுவதற்காக பாடு பட்டதனால், உலகத்தின் பென்ஷனை எதிர்பார்த்து இருக்கும்", தேவ இறக்க நாடார் அறிமுகமாகிறார். மேஜிஸ்ட்ரேட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அவர் தன்முன் கூன்றிலேற்றப்படும் நபர்மீது திட்டவட்டமாக கட்டமைக்கப்பட்ட நீதியமைப்பின் சார்பில்  தீர்ப்பளிப்பவராக உள்ளார். நீதி, பங்கேர்ப்பின் வழியே வழங்குதல் மற்றும் பகிருதல், குறித்த முழுமையான சிந்தனை உதிக்காத, குறுகியே கருதுகோள்களின் வழியே "நீதி அளிக்கப்பட்டு" வந்த காலமது. நீதி என்பது பெற்றுக்கொள்வோரைக் கவனத்தில் எடுத்து கொள்ளாது,  வழங்குவோரின் அற-நிலைப் பாடுகளிலிருந்தே பாவிக்கப்பட்டு வந்த காலம் அது. அந்தக் காலகட்ட சமூகத்தின், மேனிலையாக்கதின் குறுஞ்சித்தரிப்பாக நிகழ்கிறது கதையில் வரும் தேவநாடாரின் பகுதி. 







நாடார்கள் என்றவுடன் பின்னிணைப்பாக கிறிஸ்தவம் என்ற பிம்பம் எப்போது உருவானது என தெரியவில்லை. ஆனால் நான் முதல் முதலாக நாடார்கள் குறித்து சமூகவியல் தளத்தில் தெரிந்து கொண்டது தமிழ் நாட்டில் கிறிஸ்துவ மதத்தினர் மத்தியில் தலித் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு குறித்த ஆய்விலிருந்து தான். கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியவர்களில் தமிழகத்தில் கணிசமான பகுதியினர் நாடார்கள். கேரளத்தில்- ஒரு சில பத்தாண்டுகள் முன்வரையிலும்- இன்னும் மோசமான நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அங்கே கிறிஸ்துவமும் வாய்ப்புக்களுக்கான வாயிற்கதவாக அவர்களுக்கு இருக்கவில்லை. ஒரு மதத்தில் இருந்து -படிநிலை பாகுபாடு, ஒடுக்குமுறை, வாய்ப்பு மறுக்கப்படுதல் ஆகிய காரணங்களால்- இன்னொரு மதத்திற்கு இடம் பெயர்வதால் எத்தகைய நேர்மறை விளைவுகளை, வளர்ச்சியை எதிர்கொள்ளலாம் எனும் வாதத்திற்கு நாடார்களின் தரப்பு வலு சேர்க்கிறது. சமூக-பண்பாட்டு மூலதனத்தின் (social capital) வளர்ச்சியும், பெருக்கமும், பகிர்தலும் ஒட்டுமொத்த சமூகத்தையும் (community) பெருமளவில் சென்று சேர்ந்துள்ளதை கவனிக்க முடிகிறது. இந்திய சமூகத்தின் அடிப்படை பண்பான குறுகிய-வட்ட விசுவாசத்தை விட்டு வெளியேறி பரந்துபட்ட அடையாளத்தினுள் பொருத்திக்கொள்ளும் போக்கு நாடார்களின் சமூக விரிவாக்கம் குறித்த விவாதத்திலும் காண முடிகிறது. ஆனால் இத்தருணத்தில் தமிழகதின் முக்கியமான அரசியல் பங்கேற்ப்பாளரான தொ.திருமாவளவன் 2016ம் ஆண்டு, தலித் மக்களின் அரசியல் போராட்டம் குறித்து ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. தலித் மக்களின் பெரும் எண்ணிக்கையிலான மதமாறுதலால், நம்நாட்டின் வாக்கு அரசியல் பிரதிநிதித்துவ அமைப்பின் பின்னணியில், எவ்வாறு தங்களது அதிகார பேரத்தைக் குறைத்துக் கொண்டார்கள் எனப் பேசினார். அதே வேளையில், மதம் மாறிய தலித் மக்கள் போதிய சமூக அங்கீகாரத்தை பெற முடியாது "சிறுபான்மை" எனும் வட்டத்தினுள் சுருங்கி விடுவதைக் குறித்தும், தற்போதைய ஒன்றிய அரசின் வெறுப்பு அரசியலுக்கு இலக்காகுவதைக் குறித்தும் அங்கலாய்த்துக் கொண்டது பல காலம் நடைபெற்று வந்த இந்த விவாதத்தில் முக்கியமான இடையீடு.     







கதையின் மையத்தில் பால்ராஜின் விளித்தலான "விரியன் பாம்பு குட்டிகளே" என்பது கேலிக்குரிய உருவகமாக தெரிந்தாலும், அக்காலக்கட்டத்தில் ஆழ பதிந்து இருக்கும் ஒரு சாராரைக் குறித்த தப்பெண்ணத்தை (prejudice) வெளிப்படுத்துவதாகவே  உள்ளன. சுதந்திரத்திற்குமுன்பான காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் (கோட்டை- கொத்தளம் எனும் ஸ்தூல நிலை தாண்டி)  மட்டுமின்றி அவர்களது மதிப்பீடுகளும்  ஆளுமை செலுத்தி வந்தன. குதிரை என்பது இங்கே ஆடம்பரத்தின், ஆளுகையின் சின்னமாக மட்டுமல்லாது சாதாரண மக்களின் மாண்பை விடவும் ஒரு படி மேலானதெனும் படிமமாக  கதையினுள் உருக்கொள்கிறது. மேனிலையாக்கம் எனும் ஏணியில் ஏறி அமர்ந்திருப்பினும், போலச்செய்தல் எனும் சமூக கடமையின் பாற்பட்டு கடுமையான தண்டனையை குற்றவாளிக்கு விதித்து, வீடு திரும்பியதும் "பரலோகத்தின் தேவ பிதாவை அனைவருக்குமான மன்னிப்பிற்காக" யாசிக்கிறார் தேவ இறக்கம் நாடார். எளிமையான உருவக சித்தரிப்புகளுடன், விமர்சன சுளிப்புடன் கதையை, சமூகத்தின் இருவேறு தளத்தின் நிகழ்வை ஒப்பீட்டு முடிக்கிறார் புதுமைப்பித்தன்.    

27/3/20

புதுமைப்பித்தனின் "ஆற்றங்கரைப் பிள்ளையார்" குறித்த ஒரு வாதம்

(புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சிறுகதைக் குறித்தும் பிரத்தியேகமான, சமூகவியல், அரசியல்-இயங்கியல், வளர்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் விவாதிப்பதென சிறு விழைவு. அதற்கான முதல் முயற்சி).  

                 சிறுகதையை வாசிக்க தொடுக  



ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் சதுர்த்தியன்று சமூக வலைத்தளத்தில் அதன் பரவலாக்கம் குறித்த அழகியல் பூர்வமான காரணத்தை நான் பகிர்ந்ததால், நண்பர்கள் சிலர் கடிந்து கொண்டனர். பிள்ளையார், அதன் வடிவிலாகட்டும், உருவகமாகட்டும் சிறந்த படைப்பிற்குரிய பல அம்சங்களை கொண்டுள்ளது. ஏனோ அதன் மீதான வசீகரம் சிறு வயது முதல் இருந்து வந்ததற்கான காரணம் மெல்ல மெல்ல சமீப காலங்களில் தான் புலப்படுகிறது. யானைத் தலையும், மனித உடலும், சில இடங்களில் விகார தோற்றமும் பல இடங்களில் காட்சிபடுத்தப்படும் பாலகன் தோற்றமும் என கற்பனை வளமும் மரபின் வலிமையையும் ஒரு சேரத்தக்க இயங்கும் வகையில் அவ்வுருவம் தக்கவைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் விசாலத்தின், மாண்பின், அதன் வலிமையின் சான்றாக பொருட் கொள்ளத்தக்கதாக உள்ளது, யானை. ஒரு சமூகமாக கூட்டாக இயங்குவதிலும், அடிப்படை தேவைகளுக்காக பல தொலைவு பயணம் செய்வத்திலுமென ஆதி மனிதனுக்கான பல படிப்பினைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சுருக்கமாக, இயற்கையின், அதன் படைபாக்கத்தின் அதிசயிக்கத்தக்க பிரம்மாண்ட உருவகம். மனிதனுக்கு விளங்கிக்கொள்ள முடியாத வியப்பாக இயற்கை எப்படி இருந்ததோ அதே போன்றதொரு விளைவை தான் யானையும் உண்டாக்கி இருக்கும் என விழைகிறேன். அதனைக் கைகொண்டால் இயற்கையின் ஒரு பேருருவை கைகொண்டதன் மகிழ்வை, பெரும் ஆற்றலை ஆட்கொண்டதன் உணர்வை மனிதன் அடையப்பெருவதோடு, தனது ஆதிக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதிலும் ஆர்வம் பெறுவான். அவ்வாறான கைகொள்ளளின் ஆதார உருவகச் சான்று தான் பிள்ளையாரா? இன்றுவரை கோயில்களில் பல்வேறு காரணங்களுக்காக யானைகளை இருத்தி வைத்து இருக்கும் வழக்கத்தை மேலே குறிபிட்ட வாதத்தின் அடிப்படையில் விளக்கத் துணியலாமா?  





ஒரு விஷயத்தில் இருந்து அதன் இயல்பான அடுத்த படிநிலையை கடப்பதை "இயற்கை" என பெயர்க்காரணம் கொள்வதும் மனிதனின் இன்னொரு வகை ஆதிக்கம் தானா என ஐயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இந்த அர்த்தப்படுத்திகொள்ளுதலின் சிக்கலே  "வளர்ச்சி" எனும் கருத்தாக்கத்தை இயற்கையுடன் ஐக்கியபடுத்திக் கொள்வதுதான். இந்த சிந்தனை, பொருளியல் வாதத்திற்கு பிறகான, சமீபத்திய வரவாக இருந்தாலும் இத்தகைய பொருளியல் அடிப்படியிலான படிநிலை வாதம் சமூகத்தை எந்தளவுக்கு வழிநடத்தியுள்ளது என்பதை ஆராய ஆர்வம் கூடாமல் இல்லை. தொடர்ந்து நகர்வது தான் "இயற்கை" எனில் ஏன் இயற்கைக்கு மீள் வருகை புரிய வேண்டுமென உலகம் முழுவதுமுள்ள சூழலியல் செயல்பாட்டாளர்கள் அறை கூவுகிறார்கள்? இயற்கை குறித்த இருமைவாதங்களான ஸ்தூலத் தன்மை மற்றும் நெகிழ்வுப்போக்கில் எது பொருட்கொள்ளத்தக்கது? ஏனெனில், ஒரு கணம் சிந்தித்து பார்த்தால் சற்றேறக்குறைய கடந்த ஒரு நூற்றாண்டில், உலகத்தை மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது, "மாற்றம் ஒன்றே மாறாதது" எனும் இயங்கியல் வாதம் தான். இயற்கை மீதான இதன் தாக்கம் சொல்லில் அடங்காதெனினும் அதேவேளையில் மானிட சமூகத்தை ஆற்றுப்படுத்தும் நோக்கில் மனித நம்பிக்கைகள் ஸ்தூல உருவம் கொண்டனவா? இல்லையெனில் நகரத்தை தாண்டியுள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அழித்து கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில், நகர விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் பங்கேற்ப்புடன், கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தியை எப்படி புரிந்துகொள்வது?   




புதுமைப்பித்தனை படிப்பது ஒரேநேரத்தில் உற்சாகமிக்க செயல்பாடாகவும், தீவிர பயிற்சியாகவும் இருக்கிறது. "ஆற்றங்கரை பிள்ளையார்" எனும் கதை, உள்ளபடியே சிறார்க்கதை தோற்றத்துடன்(Parable) கவனத்தில் கொள்ள வேண்டிய மிகப்பெரும் கேள்விகளை தன்னுள் கொண்டுள்ளது. தத்துவ தேடலுக்குரியதாகவும், சமகால நடப்புகள் தொடர்பான விவாதப் புள்ளிகளுடனும் அமைந்துள்ளது.  தமிழ் சிறுகதை உலகை வடிவமைத்தவரும், தீர்மானித்தவருமான புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையும், சிந்தனைமரபின் நீட்சியையும் பூண்டுள்ளன.




காலம் குறித்த தரநிர்ணயப் படுத்துதலை எள்ளிநகையாடி, "கி.மு.'க்கள் எட்டாத சரித்திர அடிவானம்" என தொடங்கும் கதை, பிள்ளையார் உருவகத்தை முன்வைத்து சரித்திர பிரக்ஞையுடன் சமயம்-அரசு-ஆதிக்கம்-பன்முக பண்பாட்டுச்சூழல்-படிநிலை மாற்றம் குறித்த பெரும் விவாதத்தை நடத்த முன்வருகிறது, அதுவும் எளிமையான சிறார் கதைக்கே உரிய மொழியுடன். சமயச் சார்பான மொழி அவர் வாழ்ந்த காலத்தில் வழமையானதொரு போக்குதான் என "சந்தேகத்தின் பலனை" அளிக்க முன்வந்து வாசிக்க துவங்கினாலும், அப்படியானதொரு சார்பின்றி கதையை நகர்த்தி மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறார். நாகரீகத்தை நதியுடன் ஒப்பிடுவது, சமயத்தை மரத்தோடு ஒப்பிடுவது, சமூகத்தை மேடையாக விழைவது(நாமனைவரும் நடிகர்கள் எனும் விளக்கத்திற்காகவா?), பெரும் மாற்றங்களை, படையெடுப்புகளை இயற்கை பேரிடருடன் ஒப்பிடுவது, இஸ்லாமிய, ஆங்கிலேய படையெடுப்பை முறையே ரோஜா மற்றும் விவிலியத்துடன் ஒப்பிடுவது என ஆர்வத்தை தூண்டும் விவாதப் புள்ளிகள் ஆங்காங்கே விரவி கிடக்கின்றன. சில தரப்புகளை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில், நேரடியாக கதையை படிப்பதனால் மட்டுமே முழுமையுணர்வை சென்று சேரவும், இவ்விவாதத்தில் பங்களிக்கவும் முடியும் எனக் கருதுகிறேன். (கதைக்கான இணைய சுட்டி






அரச மரம் என்பது "ராஜ தர்மம்" எனவும், வேப்ப மரம் "சமய தர்மம்" எனக் கதையின் ஆரம்பத்தில் வரும் கூற்று விளக்கத்திற்கான தேவையின்றியே அமைந்திருகிறது. குறிப்பாக நம் நாட்டில், ஆரம்பத்தில் இருந்தே  இவ்விரண்டுக்குமிடையே நிலவும் இறுக்கமான பிடிப்பு அனைவரும் அறிந்ததே. சமூகத்தின் மீதான, அதன் பிரதிநிதியான தனிமனிதன் மீதான இவற்றின் சுமையே புதுமைப்பித்தனின் பிரதான கவலையாக தொனிக்கிறது. வேப்ப மரத்தின் வேர்கள் பிள்ளையாரின் வயிற்றை சுற்றியும், கால்கள் எங்கும் நகரமுடியா வண்ணம் பற்றிக்கொண்ட அரச மரத்தின் வேர்களும், இவ்விரண்டிற்கும் இடையே மாட்டிக் கொண்ட பிள்ளையாரின் தலையுமென அதை வெளிப்படுத்திச் செல்கிறார். இத்தகைய "கஷ்ட காலம்" வருவதற்கு முன் இரு மரங்களின் செழிப்பான வளர்ச்சியினால், அதன் நிழலின் குளிர்ச்சியில் பிள்ளையார் இன்பித்து இருந்துள்ளதாக கதை குறிப்பிடும் காலகட்டம் எதுவாக இருக்கும் எனும் கேள்விக்கு ஒரு தெளிவு கிடைத்தபாடில்லை. நவீனத்துவரான புதுமைப்பித்தன், மதங்களற்ற சமூகத்திலும், தனி மனித முதன்மை வாதத்திலும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்திருக்க கூடும் என்னும் அதே வேளையில் சமயங்களின் தாக்கத்திலும் தெளிவு கொண்டவராகவே இருக்கிறார். 




கதையில் நிகழும் இஸ்லாமிய வருகையை, "தாடி வைத்த, உடைவாள் தரித்த கைலிக் கட்டிய கிழட்டு மனிதன்" வருகையுடன் கட்டியம் கொள்கிறார். இறந்த பசுமாட்டின் தோலும், சேமித்து வைக்கப்பட்ட இறைச்சியுமென, மாற்று பண்பாட்டு "வெறித்தலுக்குறிய" கூறுகளுடன் சித்தரிப்புகள் கதையில் வெளிப்படுகின்றன.  எதிர்மறை எண்ணங்களினால் வெளிப்பட்ட படிமங்கள் என இவற்றை புறந்தள்ளிவிட எந்த நியாயமும் இருப்பதாக தெரியவில்லை. "உடைவாள்" குறித்த பிம்பம், வன்முறை வெறியாட்டத்தையும், படையெடுப்புகளையும் சுட்டுவதாகவே உள்ளன. ஒவ்வொரு குழுமத்துக்கும் இடையே உள்ள தனித்தன்மையைச் சுட்டும் அதே தருணத்தில் வகைமாதிரிகளை கட்டமைக்கும் எந்த முயற்சியும் கதையில் நிகழவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் நிலவிய அரசியல் சரிகளுக்கு (Political Correctness) ஏற்ப அத்தகைய சித்தரிப்புகள் ஒற்றுப்போய் இருப்பதற்கு வாய்ப்பிருந்தும் புதுமைப்பித்தன் அவ்வாறு முயலவில்லை என்பது வியப்பிற்குரியது. முகலாய, துருக்கிய இஸ்லாமியர்களின் வருகையை மட்டுமின்றி "மேற்கு சமுத்திரத்தின் இடரால்" ஏற்பட்ட வெள்ளையர்களின் வருகையையும் எளிமையான படிமங்களோடே அணுகுகிறார். எ.கா: "வெண்மையான, தங்க கம்பிகள் போன்ற தலைமுடியுடன், தாடியும், நீண்ட அங்கியுமாய், தோல் பையினுள் வாளும், கருப்பு அட்டை போட்ட ஒரு பெரிய புத்தகமும், சிலுவையும் வைத்திருந்தான்".  




மேற்குறிப்பிட்ட உருவகங்களை தாண்டி பண்பாட்டுக் குறிப்புகளே பெரும் ஆர்வத்தை மூட்டுகின்றன. திடீரென ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் மேடையை வந்தடைந்த "தாடிவைத்த கைலி உடுத்தியக் கிழவன்" மாமிசத்தை மட்டும் கொண்டு வரவில்லை, ஒரு ரோஜா மலரையும் கொண்டு வருகிறான். மாட்டு தோலை "பிள்ளையாருக்கு" போற்றியதோடு நில்லாமல் அருகிலேயே கொண்டு வந்த ரோஜாவை நட்டு இருபெரும் மரங்களுக்கு இடையே ஒரு சிறு செடியையும் வளர்க்கிறான். மேடையில், மரங்களுக்கிடையில் அழகாக வளர்கிறது ரோஜா செடி. 




சிறுவயதில் என் வீட்டின் அருகாமையில் வசித்துவந்த சாமிகிரி சித்தர் என்பவர், ஒவ்வொரு மாலையும் விளையாட்டு திடலில் எங்களைக் கடந்து போகும்போது பத்தடி தூரத்திலிருந்தே சுண்டி இழுக்கும் விதமாக அத்தர் அணிந்து இருந்ததை நினைவிற்கு கொண்டு வராமல் கதையின் இந்த பகுதியைக் கடந்து வர முடியவில்லை.  கதையில் வரும் ஒரு வரி, "மரக் கன்றுகள், செடியின் பரப்பை தாண்டி வேறு புல்பூண்டுகளும் முளைத்தன",ஒட்டுமொத்த சாரத்தையும் விவரித்து விடுகின்றது.       




புத்தரும், ஜீனரும் மற்றும் சங்கரன், ராமானுஜன், மத்வன் என பிள்ளையாரின் நிலை கண்டு "மேடைக்கு" பலரும் உதவ முன்வந்தும் நிலைமை சீரான பாடில்லை. அதிலும் பிள்ளையாரின் வருத்தத்திற்கும், கடும் சொற்களுக்கும் ஆளான புத்தரின் நிலையோ சோகத்திற்கு இடமானது. நிலைப் பெற்று இருக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும் போது அது "ரோஜாக்களை" மற்றுமல்ல "முட்களையும்" சேர்த்தே வாரி வரும். சமகால வாதக்களங்கள் பல இத்தகைய நுணுக்கங்களுக்கு இடமளிப்பது இல்லை. பண்பாடு எப்போதும் இருமைவாதங்களின் கொதிகலனாகவே இருந்து வந்திருக்கின்றன. எவர் நல்லவர், யார் தீயவர், எது நல்லது, எது கெட்டது, நல்ல இஸ்லாமியர், தீய/தவறான இஸ்லாமியர் என வரையறைகளை விதிக்கும் கருவியாக பண்பாடு இருப்பதை புதுமைப்பித்தனும் கவனத்தில் கொண்டு இருப்பது அவரது மேதமையைக் காட்டுகிறது. 




இறுதியாக சமகாலத் தன்மையுடன் விளங்கும் சில விவாதப் புள்ளிகளுடன் என் தரப்பை நிறைவு செய்கிறேன். ஆங்கிலேயர்கள் குறித்த பல்வேறு விமர்சன சொல்லாடல்கள் நம்மிடையே புழங்கிவந்தாலும், சிறு அளவிலேனும் ஆக்கப்பூர்வ அணிந்துரைகள், ஆதரவு மொழிகள் இல்லாமல் இல்லை. "கருப்பு தோல் அட்டைப் போட்ட ஒரு பெரிய புத்தகம்" எனும் உருவகத்தின் ஊடே புதுமைப்பித்தன் மேற்குறிப்பிட்ட இரண்டாம் தரப்பின்பால் கவனத்தைக் கோருகிறாரா என ஐயப்பட தோன்றுகிறது. ஏனெனில் காலனிய அரசாங்கத்தின் கல்வி பரவலாக்கத்தால் மிகப்பெரும் பலனை, அறிவு விரிவாக்கத்தை தமிழகம் அடைந்தது.  இன-மைய-தேசியம், அரசியல் தளத்தில் வலுப்பெற்று வரும் இக்காலத்தில் அக்குழுமச் சார்பினர் காலனிய அரசாங்கத்தின் நேர்மறை விளைவுகளை முன்வைப்பவர்களை சிறுமைப் படுத்தும் போக்கு வளர்ந்து வருவதும் இத்தைகைய விவாதத்திற்கு நியாயம் சேர்க்கிறது. கதையின் இறுதி அத்தியாத்தில், பல தரப்பட்ட மக்கள் குழுமி "மேடையில்" எது, எப்படி இருக்க வேண்டும் எனும் சச்சரவுகளில் ஈடுபட்டு வரும் தருணத்தில்,  நாம்- இனி வரும் காலங்களில்- வாழ்நாள் தோறும் முட்டி மோதி ஒருமித்த, இணக்கமான புரிதலுக்கு வழிகோல தவிக்கக் கூடிய ஒரு கேள்வியை கேட்கிறார் புதுமைப்பித்தன், "மரத்திற்கு பிள்ளையாரா, பிள்ளையாருக்கு மரமா?".                   

23/3/17

மீண்டெழட்டும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் –யோகேந்திர யாதவ்



இந்த தேசம் நிச்சயமற்ற உருவில் “கருப்பு பணத்திற்கு எதிரான போரில்” ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஊழலுக்கு எதிரான நிலையில் இருந்தே விடுபட்டு விடும் அபாயத்தில் இருக்கிறோம் நாம். உண்மையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாம் பின்னோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அனைவரும் விவாதித்துக் கொண்டு இருக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தை(PCA),1988 திருத்துவதற்கு தயாராகி விட்டது பாராளுமன்றம். கொடுமை என்னவென்றால், பெரும்பாலான அரசியல் அமைப்புகளுக்கும் சாதகமாக அமைவதால், பல கட்சிகளின் ஆதரவையும் இத்திருத்தம் பெட்டறுள்ளது. ஆம், எல்லாம் கருப்பு பணத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தான்.
நாடாளுமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் ஊழல் தடுப்பு (திருத்தம்) மசோதா 2013, சில திருத்தங்களை ஊழல் தடுப்பு சட்டத்திற்கு(PCA) முன்மொழிகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின் போது ஏற்பட்ட மிகப் பரவாலான ஊழல் எதிர்ப்பு போராட்டங்களின் போது, 2013ம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த மசோதா முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. சட்டரீதியாக ஊழலுக்கு கிடுக்கு பிடி போடுவதே அதன் நோக்கம். ஆனால் வருந்தத்தக்க சில அம்சங்கள் அதிலும் இருந்தன. எனினும் அதன் ஒட்டுமொத்த சீர்குலைவு என்பது தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்க முனைந்த திருத்தங்களால் தான் ஆனது. கேபினெட் உட்பட, பல்வேறு கட்சிகளையும் உள்ளடக்கிய மாநிலங்களவையின் தேர்வு குழுவும் இந்த மாற்றங்களை ஏற்று கொண்டுள்ளது. இந்த பிற்போக்குத்தனமான சட்டம் இந்த குளிர் கால கூட்ட தொடரில் நிறைவேற்ற முடியாததால் தள்ளி போகும் நிலையிலுள்ளது. 


யோகேந்திர யாதவ்





சீர்குலைக்கும் திருத்தங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு குழுவால் அங்கீரிக்கப்பட்ட இந்த மசோதாவின் வடிவம், ஒரு வழியில் மட்டுமன்றி பல்வேறு வழிகளிலும் ஊழல் தடுப்பு என்னும் அதன் அடிப்படையையே மழுங்கடிப்பதாக உள்ளது. ஊழலின் தற்போதைய வரையறையை குறுக்குவதோடு அல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரத்தையும் அதை நிருபிப்பதற்கான தேவையையும் அதிகமாக வலியுறுத்துகிறது, இது “தகவல் தெரிவிப்பாளர்களின” (whistleblowers) நிலையை இன்னும் சிரமம் ஆக்குவதோடு, அதிகாரிகள் தங்களை மேலும் காத்துக் கொள்வதற்கும், ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் எந்த ஒரு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கும் உள்ளகாதவாரு பார்த்து கொள்ளவுமே பயன்படும். இந்த மசோதா சட்டமானால், ஏற்கனவே ஊழலுக்கு எதிராக பலவீனமாக உள்ள நமது அமைப்பு மேலும் பலத்த அடி வாங்கும்.
  
இப்போது மசோதாவின் முக்கியமான ஒவ்வொரு சரத்தும் ஊழலுக்கு எப்படி பக்கபலமாக இருக்கிறது என பாப்போம் 

மசோதாவில் முதல் அம்சமான ஊழலின் வரையறையும் பொருளும், அரசு (அ) பொதுப் பனியாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் குறுக்கப் பட்டுளள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 13(1)(d), ஊழலின் பல்வேறு மறைமுக அம்சங்களை கருத்தில் கொண்டுள்ளது, முறையற்ற உதவியாக “எந்த விலை மதிப்புள்ள பொருளோ அதற்கான முகாந்திரத்தை நிறுவும் செயலோ” அல்லது “பொது பணியாளராக தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தல்’ என்பது உட்பட. ஆனால் இப்போது கொண்டு வந்துள்ள மசோதாவோ இந்த பிரிவையே நீக்க்கிவிட்டு அதற்கு பதிலாக மிகவும் மேலோட்டமான ஒரு வரையறையாக, பொது பணியாளர் குற்றச் செயலில் ஈடுபடுதல்: முறையற்ற வழியில் ஒருவர் கட்டுபாட்டில் சொத்துகளை வைத்து இருப்பது மற்றும் உள்நோக்கத்தோடு முறையற்ற வகையில் வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை குவிப்பது என மாற்றப் பட்டுள்ளது. இந்த புது வரையறையின் படி , எந்த ஒரு பலனும் பொருளாதார ரீதியாயானதாக இல்லாமலோ அல்லது மறைமுகமாகவோ இருந்தால் அதை குற்றமாக கருதவோ தண்டிக்கவோ முடியாது. முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தை கவனமாக ஆராய்ந்த சட்ட ஆணையம் இந்த புது வரையறையை நிராகரித்துள்ளது. இன்னும் விரவானதொரு வரையறையை அது முன்மொழிந்தது. பொதுப் பணியாளரின் “ஒழுங்கற்ற பொதுச் செயல் மற்றும் நடவடிக்கை”, “முறையற்ற ஆதாயத்துக்கு வழி வகுத்தால்” அதை தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டும் என சட்ட ஆணையம் கோரியது. இத்தனைக்கு பிறகும், அரசும் பாராளுமன்ற குழுவும் இந்த கோரிக்கையை புறக்கணித்துவிட்டு ஊழல் கூட்டாளிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் மேஜை-அடியிலான பரிவர்த்தனை என ஏதும் இப்போது உயர்மட்ட அளவில் நடப்பதில்லை இருப்பினும், இப்போது இருக்கும் சட்டத்தில் 13(1)(d) பிரிவு மட்டுமே உயர்மட்ட இடங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிரானதாக இருக்கிறது. இதற்கு சற்றும் பொருந்தாத வகையிலேயே ஊழல் புரிந்த அரசு பணியாளர் பெரும் பலனானது, கடல் தாண்டிய பரிவர்தனையாகவும் நேரடி பணவடிவில் இல்லாமலும் இருக்கிறது உதரணத்திற்கு, பனி ஓய்வுக்கு பிந்தைய பலன்கள். போபர்ஸ் ஊழலில் இருந்து 2G வரை, காமன் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல் என அனைத்து மாபெரும் ஊழலும் குற்றங்களாக கருதப்பட்டது இந்த பிரிவின் உபாயத்தால் தான். அரசு அதிகாரிகளில் ஒரு சாரார் தொடர்ந்து இந்த பிரிவை மட்டும் நீக்க வலியுறுத்துவதும் இதனால் தான். அதற்கு அவர்களது வாதமாக அவர்கள் கூறுவது, நேர்மையான அதிகாரிகளின் நன்மதிப்பை இது பாதிக்க வாய்ப்புள்ளது என்பதே. ஆனால் இந்த வாதம் உண்மை அல்ல. நேர்மைக்கு பெயர்போன ஓய்வு பெற்ற கேபிநெட் செயலாளரான டி.எஸ்.சுப்பிரமணியம், நேர்மையான அதிகாரிகளுக்கு போதுமான வகையில் இப்போது இருக்கும் சட்டமே பாதுகாப்பை வழங்குகிறது என தொடர்ச்சியாக கூறி வருகிறார். பதவியை தவறான வழியில் நிதி சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தியது உறுதியாக நிரூபனமாகாத வரையில் பணியாளர்களின் நன்மதிப்பு எவ்வகையிலும் பாதிப்பு அடையாது. 


ஆரம்பநிலை அழுத்தம் 

இரண்டாவது, இந்த மசோதா தொடக்க நிலையிலேயே ஆதாரம் இல்லையென்றால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்போரை குற்றவாளியாக கருத முடியாததாக ஆக்குகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி பொதுப் பணியாளர் ஒருவரின் அறியப்பட்ட வருவாய்க்கு மீறிய சொத்து அல்லது பணமே அவர் செய்த ஊழலை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது. ஆனால் இப்போது வழக்கு தொடுப்பவரேதான், தவறான வழியில் அரசு அலுவலர் பெற்ற பணமே முறையற்ற ரீதியில் அவர் சொத்து குவிக்க பயன்பட்டது என்பதையும் நிரூபித்தாக வேண்டியதாக இருக்கும். மாநிலங்களவையின் தேர்வு குழு இவ்வாறு நோக்கம் கற்பிப்பது தேவையற்றது என கூறி இருந்தாலும் அரசாங்கத்தின் இறுதி முடிவு நமக்கு இன்னும் தெரியவில்லை. அதிலும் இப்போதைய சட்டத்தில் இருக்கும் “அறியப்பட்ட வருவாய்” என்பதற்க்கு “அரசு அல்லது பொதுப் பணியாளர் சட்டரீதியான அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு தான் பணியாற்றும் காலத்தில் மட்டும் பெறப்படும்” என வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திருத்தம் 1988ம் ஆண்டு அதன் முந்தைய சட்ட வடிவத்தில் இருந்த ஓட்டைகளை அடைக்க கொண்டுவரப் பட்டது. ஆனால் சமூக தரப்பில் யாரிடமும் இருந்து எந்த பரிந்துரையும் பெறாது, மத்திய அரசு இப்போது இந்த சரத்தையே தூக்க இருக்கிறது. இது பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தப்பிக்கவைக்கும் செயலே ஆகும்.

மூன்றாவது, இந்த மசோதா லஞ்சம் கொடுப்பவரை லஞ்சம் வாங்கியவருக்கு எதிரான சாட்சியாக நிறுத்துவதை சிக்கலாகி உள்ளது. இப்போதிருக்கும் சட்ட படி, ஒரு நபர் தன்னிடம் இருந்து லஞ்சம் பெற்றார் என ஒருவர் மீது புகார் அளித்தார் என்றால், புகார் அளித்தவரே லஞ்சம் வாங்க தூண்டினார் என குற்றம் சாட்ட முடியாது. லஞ்சம் வாங்குவோரையும் கொடுப்பவரையும் ஒரே விதத்தில் நடத்தக் கூடாது. ஆனால் வரவிருக்கும் மசோதா அதை செய்கிறது. இது லஞ்சம் கொடுக்கும் நிலையில் இருப்பவர்களை அரசு அதிகாரிகளுக்கு எதிரான சாட்சியமாக மாறாமல் இருக்கவே செய்யும். மறைமுகமாக இது லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேறு வழி இல்லாமல் செய்துவிடும். 

இப்படி முழுவதும் சிக்கலாக்குவதற்கு, வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பவருக்கு முழு விளக்கு அளிக்காமல் குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்கலாம். அரசுக்கு சிறப்பான வாய்ப்புக்கள் இருந்தன. இரண்டாம் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கை லஞ்சத்தை “தர விளைவது” மற்றும் “ரகசியமாக தருவது” என இருவகையாக பார்க்க பரிந்துரைத்தது. ஒருவர் லஞ்சம் லஞ்சம் தர முனைந்து, தந்த பின்பு உடனடியாக புகார் அளித்தார் எனில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் இந்த யோசனைகளை எல்லாம் அரசு உதாசினப்படுத்தியதன்- அனைவரயும் தண்டிக்கும் யோசனயின்- மூலம் லஞ்சம் பெறக் கூடியவர்களுக்கே துணை புரிந்து உள்ளது என்பது உறுதி.

நான்காவது திருத்தம், ஊழல் புரிந்தவரை தண்டிக்கும் வாய்ப்பை குறைத்து உள்ளது. இப்போதிருக்கும் சட்டப் படி, பணியிலிருக்கும் ஒருவரை தண்டிக்க அவரது மூத்த அதிகாரி ஒருவரின் ஒப்புதல் தேவை. இதற்கான காரணம் எளிமையானது. அது நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கப் படுவதில் இருந்தும், துன்புறுத்தப் படுவதில் இருந்தும் காப்பது தான். இப்போது கொண்டு வந்திருக்கும் மசோதா, பனி ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டித்து உள்ளது. அவர்கள் பணி ஆற்றிய காலத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் இந்த நீட்டிப்பு பொருந்தும். இது ஒரு வகையில் நியாமானதாக தோன்றினாலும், தேவையற்ற ஒரு சில சேர்க்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அது என்னவெனில், ஒரு தனி நபர் ஊழல் குற்றச்சாட்டில் அரசு பணியாளர் ஒருவரை தண்டிப்பதற்கான ஒப்புதலை பெற அரசாங்கத்தை அணுகினால், அவர் இனி நீதி மன்றத்தை தான் நாட வேண்டி இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட அரசு பணியாளருக்கு வழங்கப்படும் இந்த மேலதிகமான பாதுகாப்பு, ஊழலால் பாதிக்கபட்டவர்களையும், ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர்களையும் கை விடக் கூடிய ஒரு செயலாகவே இருக்கும். ஊழல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை காப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது இதில் தெளிவாகவே தெரிகிறது. 



முதலில் அனுமதி

இறுதியாக, மிக மோசமானதும் கொடுரமானதுமான இந்த திருத்தம் பொது மக்களின் எந்த ஒரு கருத்தையும் கேட்காது செய்யப்படுள்ளது. இந்த மசோதா பிரிவு 17A என்னும் புதுப் பிரிவை சேர்க்க கோருகிறது. அதன் சாராம்சம் இது தான்: இனி எந்த ஒரு விசாரணை அமைப்பும் குற்றம் சாட்டபட்ட பணியாளர் ஒருவரை விசாரிக்க அதிகாரபூர்வ அனுமதி முதலில் பெறுவது அவசியம். அந்த அனுமதி லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா மூலம் வழங்குவது அரசின் முடிவு. பாராளுமன்ற தேர்வுக் குழுவோ இதை இன்னும் மோசமாக்கி, குற்றம் சாட்டப்பட்டவரை நீக்க கூடிய உரிமை “தகுந்த உரிமை படைத்த ஒருவர் அல்லது அமைப்புக்கு தான்” உண்டு என முன்மொழிந்துள்ளது. எனவே இனி அரசியல் முதலாளிகளே ஊழல் தடுப்பு விசாராணையை அரசு பணியாளர் மீது நடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்பவர்களாக இருப்பர். 

இது அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. முன்னமே குறிப்பிட்ட படி இப்போதிருக்கும் சட்டப் பிரிவு 19, அனைத்துவித போலி குற்றச்சாட்டுகளில் இருந்தும் அதிகாரிகளை காக்கும் விதமாக ஏற்கனவே ஏற்படுத்த பட்டுள்ளது. நேர்மையான, குற்றமற்ற அதிகாரியின் மீது புகார் வருமானால் விசாரித்து பார்த்து அரசாங்கம் அதற்கான ஒப்புதல் வழங்காது அந்த புகாரை நிராகரிக்கலாம். இந்த வசதி ஏற்கனவே இருக்கையில் எதற்கு இப்போது இதில் புதிய திருத்தம்? அதுவும் ஆரம்பகட்ட விசாரணைக்கே எதற்கு ஒப்புதல்? அனைவருக்கும் தெரிந்த எளிமையான விஷயம், விசாரணை இல்லை என்றால் நம்பகமான ஆதாரமும் கிடைக்க போவது இல்லை. பிறகு எந்த அடிப்படையில் அரசாங்கம் ஒரு புகாருக்கு ஒப்புதல் வழங்கும்? அல்லது ஆரம்பகட்ட விசாரணை கூட இல்லாது ஒருவரால் எப்படி ஆதாரங்களை சமர்பித்து ஒப்புதலை பெற முடியும்? அப்படியே ஒப்புதலும் வழங்கபட்டாலும், அது தெரியவந்தால் விசாரணை நடப்பதற்கு முன்னரே அந்த ஊழல் புரிந்தவர் தனது ஆதாரங்களை மறைக்க உதவாதா? இந்த மோசமான திருத்தம் ஊழல் புரிந்த அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் தப்பிக்க வைக்கவே பயன்பட போகிறது. ஒரு அரசியல்வாதி நினைத்தால் ஊழவாதி ஒருவரை தண்டனையில் இருந்து மாத்திரம் அல்ல ஆதாரங்கள் சேகரிப்பதில் இருந்தும் விசாரணையில் இருந்தும்கூட பாதுகாக்க முடியும். 



மீளட்டும் ஊழல் எதிர்ப்பு 

அரசின் இந்த முடிவு பழைய “ஒற்றை வழிமுறையை” மீண்டும் கொண்டு வந்துள்ளது. அந்த பழைய அரசாணையின் படி எந்த ஒரு மூத்த அதிகாரியையும் அரசின் அனுமதி இன்றி விசாரிக்க முடியாது. 1997ம் ஆண்டு புகழ் பெற்ற வினீத் நாராயண் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் இந்த அரசாணையை சட்ட விரோதம் என அறிவித்தது. அரசாங்கம் அதையே திருத்த சட்டமாக 2003ம் ஆண்டு மீண்டும் கொண்டு வந்தது. கடைசியாக சமீபத்தில் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்த சட்ட பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து, “சமத்துவத்திற்கான உரிமையை” மீறுவதாக கூறி அதை நீக்கி தீர்ப்பளித்தது. ஆளும் வர்க்கத்தில் அதிகாரிகளின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை இப்போது மூன்றாவது முறையாக அரசு கொண்டு வந்திருக்கும் அதே கவச சட்டமே நிரூபிக்கிறது. 
குளிர் கால கூட்ட தொடர் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதால், பட்ஜெட் கூட்டதொடருக்கு இந்த மசோதா தள்ளிபோகும் என தெரிகிறது. இது அக்கறையுள்ள பொதுமக்களுக்கு, ஊழலை பாதுகாக்கும் அரசின் இந்த மோசமான முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கும், அனைவரிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதற்குமான வாய்ப்பாக ஓரிரு மாதங்கள் கிடைத்துள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

The original article released in The Hindu Dec12,2016 - http://www.thehindu.com/opinion/lead/Time-to-blow-the-whistle/article16793830.ece

3/2/17

ப்ரிகால் போராட்டமும்; தாமதமான நீதியும்.







நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி டெல்லி முதல் நாட்டின் மூலை முடுக்கு வரை விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் நடைபெற்று வரும் பிற விஷயங்களில் நம் கவனங்கள் செல்வதில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படையான விஷயங்கள் என்றும் விவாதிக்க பட வேண்டியவை. அதிலும் நமது நீதி துறை அத்தைகைய விவாதங்களில் முக்கியத்துவம் பெற வேண்டிய ஒன்று. கவனிக்க தவறிய அந்த விஷயம் வேறொன்றுமில்லை, ஒரு தொழிற்சங்கத்துக்கும் நீதி துறைக்கும் இடையே நம்காலத்தில் நடைபெற்று முடிந்த “நீண்ட” உரையாடலை தான் நாம் பார்க்க தவறியது.



ஜனவரி 17ம் தேதி, கோவை ப்ரிகால் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களில் ஆறு பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கான காரணமாக நிதிமன்றம் கூறியது “குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இல்லை” என. 


முன்னதாக 2012ம் ஆண்டு கோவை செஷன்ஸ் நீதி மன்றம் இபிகோ பிரிவு 302 மற்றும் 449 (கொலை குற்றம் மற்றும் குற்றம் புரிய முனைதல்) படி தொழிலார்கள் எட்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது இங்கு குறிப்பிட தக்கது.



                          ப்ரிகால்


கோவை- தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்”. 25,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்களை கொண்ட நாட்டின் பிரதான வர்த்தக நகரங்களில் ஒன்று. வாகனங்களுக்கான துணை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பல்வேறு பொரியியல் தொழிநுட்ப கருவி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான ப்ரிகால், கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு உற்பத்தி நிர்வனம். 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏழு உற்பத்தி பிரிவுகளாக- உத்தரக்கண்டில் இரண்டு, புனே மற்றும் குர்கானில் தலா ஒன்று என- செயல்பட்டு வரும் ‘ப்ரிகால்’ வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்க முயன்று வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன உற்பத்தி பெரு நிறுவனங்களுக்கு இந்நிறுவனமே தொழில் நுட்ப சாதனங்களான வேக கணிப்புக் கருவி, உணர் திறன் கருவி ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. கோவையில் இரு உற்பத்தி பிரிவுகளாக (பிளான்ட் 1 மற்றும் பிளான்ட்3,4) இயங்கி வரும் இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் முதல்முறையாக ஒட்டு மொத்த வருவாயாக 1000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக அறிவித்து உள்ளது.





          ஊதிய உயர்வு – போராட்டம்


5100 ஊழியர்களை கொண்ட ப்ரிகால் நிறுவனத்தில் 650 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி புரிகின்றனர். 2007ம் ஆண்டு, நியாமான ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை முன்வைத்து ப்ரிகால் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து “கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்” என்னும் பெயரில் தொழிற்சங்கம் ஒன்றை அமைத்தனர். ஆனால் அந்நிறுவன மனித வளப் பிரிவு மேலாளரான ராய் ஜார்ஜ் கொலை செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2012ம் ஆண்டு தான், இச்சங்கம் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப் பட்டது. தொழிற் சங்கத்தை ஆரம்பித்த நபர்களில் 6 பேர் உத்தரகண்டிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. 

தொழிற் சங்க தலைவரான குமாரசாமி கூறுகையில்,
 “ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமான இடர்களை தாண்டி தான் வந்துள்ளோம். போராட்டம் ஆரம்பமாகிய காலத்திலும் எங்கள் மீது பல்வேறு அவதூறுகள் சுமத்தப்பட்டே வந்தன. மாவோயிஸ்ட்களும், தீவிரவாதிகளும் யூனியனை கைபற்றி தொழிற்சாலைக்கு ஆபத்து ஏற்படுத்துக் கின்றனர் என்றே நிர்வாகம் எங்கள் மீது பழி கூறியது” என்றார்.



           என்ன கோரிக்கைகள்



சங்கம் துவங்கிய 2007ம் ஆண்டு பணியாளர்களின் மாத ஊதியமாக இருந்த தொகை 8,522 ரூபாய். ஓய்வு தொகை 1,00,000 ரூபாய். 25 ஆண்டுகள் வேலை செய்து பணி ஓய்வு பெற்றாலும் இதே தொகை தான். வேலை பளு மிக அதிகம். வேலை நேரத்தில் இடைவேளை கூட அதிக நேரம் இல்லை. எனவே பணியாளர்கள் தங்கள் கால்கள் பக்கத்திலேயே தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். உற்பத்தி தேவை அதிகமாக இருக்கிற படியால், கிடைக்கிற குறைந்த இடைவேளையில் எழுந்து செல்லக் கூட நேரம் இருப்பதில்லை என தெரிவித்தனர். இதில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண் பணியாளர்கள் ஆவர். எனவே அடிப்படை உரிமைகளான நியாமான வேலை சூழலை வழங்க கோரியும், குறைவான ஊதியத்தை எதிர்த்தும், தற்காலிக பணி அல்லாது நிரந்தர பணி வழங்க கோரியும் 2009ம் ஆண்டு, கால வரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கினர் தொழிலாளர்கள். 



             ராய் ஜார்ஜ் கொலை



இப்படியான ஒரு சூழலில், இரும்பு தடிகளோடு நுழைந்த ஆட்களால் மூர்க்கமாக தனது அலுவலக அறையிலேயே அடித்து கொல்லப் பட்டார் ராய். கேரளம், எர்னாகுளத்தை சேர்ந்தவரான ராய் ஜார்ஜ் கோவை பெரியநாயக்கன்பாளையம் ப்ரிகால் மனிதவளப் பிரிவு துணை தலைவராக பணி புரிந்து வந்தார். அரசின் தலையீட்டால், நடைபெற்று வந்த போராட்டம் சமரச தீர்வை நோக்கி சென்று கொண்டு இருக்கும் வேளையில் தான் இத்தைகைய கோர சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி காலை 11.40மணி அளவில் ராய் ஜார்ஜ் தாக்கப்பட்டு சரிந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அப்போது அவருடன் அலுவலக அறையில் இருந்த நான்கு பேரும் தாக்குதலுக்கு ஆளாயினர். உடன் மாலை 4.30மணிக்கு மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாலை 6.30க்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இரவு 10 மணிக்கு தொழிலாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அன்றிரவே அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டது.



             முதல் கோணல்


குற்றம் சாட்டபட்ட அத்துனை பேரும் அடுத்த நாள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டதுடன், வழக்கில் மேலும் சிலர் இணைக்கப் பட்டனர். வழக்கின் ஆரம்பத்தில் தொழிற்சங்க தலைவர் குமாரசாமி உட்பட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்ற அறிக்கையில் நிறைய “இடைசெருகல்கள்” இருப்பதாக நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. 42தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தொடர்ச்சியான போலிஸ் விசாரணைக்கு உள்ளாகப் பட்டனர். நான்கு பெண்கள் உட்பட 27 பேர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு 2009ம் ஆண்டு ஜாமின் கிடைக்கும் வரை 130 நாட்கள் சிறையில் வைக்கப் பட்டனர். 2012ம் ஆண்டு வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், எட்டு பேரை குற்றவாளிகளாக அறிவித்து மற்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. தொழிலார்கள் எட்டு பேருக்கும் கடுங்காவலுடன் கூடிய இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முக்கியமான வாதமாக அப்போது முன்வைக்கப் பட்டது,  ‘நடந்த கொலையை குற்றம் சாட்டப்பட்ட தொழிலார்கள் தான் செய்தார்களா’ என்பது.

தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது 

“கொலை நடந்த சமயம் ராயின் கேபினில் இருந்த சிசிடிவி அந்த நாள் மட்டும் வேலை செய்யவில்லை. ஏன் சிசிடிவி கேமரா அன்று மட்டும் பழுதாகி போனது? ஆனால் கொலைக்கான சாட்சியமாக அவரது அறைக்கு வெளிய இருந்த சிசிடிவி’யில் பதிவான காணொளி சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதில் கொலை நடந்த அறையில் ஆட்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளது, ஆனால் அது இந்த தொழிலாளர்கள் தான் என எப்படி சொல்ல முடியும்? நடந்தது கொலை என்பதை நிருபிக்க வேண்டுமானால் அந்த காணொளி பொருந்தலாம், ஆனால் யார் கொன்றார்கள் என அதை வைத்து எப்படி நிரூபிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்”.



                  இரண்டாம் திருப்பம்


இந்த கொலை பற்றியும் அதற்கு முன்பிருந்தே நடந்து வந்த போராட்டங்கள் பற்றியும் தி-வயர் தளத்தில் எழுதிய செய்தியாளர் மதுமிதா தத்தா, இந்த ஒட்டுமொத்த ‘ப்ரிகால் நிகழ்வுகளையும்’ மாருதி நிறுவனத்தின் மானசர் தொழிற்சாலை சம்பவங்களுடன் ஒப்பிடுகிறார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ப்ரிகால் கொலை பற்றி பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் கொலை சம்பவம் 11.40க்கு நடந்ததாக குறிப்பிடப் படும் அதே வேளையில் “எதிர்பாரா விதமாக” வழக்கின் விசாரணை அதிகாரியான போலிஸ் ஒருவரும் 11.41 முதல் 11.46 வரை அதே தொழிற்சாலையினுள் இருந்ததாகவும் அதில் குறிப்பிடுகிறது. ‘சாதாரண உடையில்’ கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக தெரிவித்த அதிகாரியிடம் கொலையை ஏன் தடுக்கவில்லை என கேட்டபோது, “தனக்கு நிர்வாகம் கொலை நடக்கிறதென எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று வாய்மொழியாக நீதிமன்றத்தில் கூறினார். போராட்டம் நடைபெற்று வந்த காலம் என்பதால் பந்தோபஸ்த்துகாக ப்ரிகால் ஆலைக்கு வெளியுலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இருந்தும் கொலை நடக்கவிருந்தது எப்படி போலீசிற்கு தெரியாமல் போயிற்று என டிபன்ஸ் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை.

மாருதி மானசர் ஆலை சம்பவம் ஒத்துப் போவது இங்கேதான். மானசர் தொழிற்சாலை மேலாளர் அவ்னிஷ் தேவ் ஆலை உள்ளேயே வைத்து கொடூரமான முறையில் எரித்து கொல்லப் படுகிறார். தொழிற்சாலை முழுவதும் தீ வைக்கபடுகிறது. அடுத்த நாள் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நூற்று கணக்கில் தொழிலாளர்களை கைது செய்கின்றனர். ஏனெனில் அங்கும் வன்முறைக்கு முன்னர் ஊதிய உயர்வுக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்துள்ளது. மனாசர் தொழிற்சாலை தீக்கு இரையாக்கப்பட்ட அன்று 148க்கும் மேலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, பலரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, போலிஸ் கஸ்டடியில் வைக்கப் பட்டனர். ஆனால் இறுதி வரை பதிலளிக்க முடியாத கேள்வியாக இருந்தது “யார் தீ வைத்தார்” என்பது தான். முதல் நாள் போலிஸ் பரிசோதனை போது எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், அடுத்த நாள் தடயவியல் அதிகாரிகள் தீப்பெட்டி ஒன்றை கண்டு எடுத்தாக தெரிவித்தனர். 

அப்போது தொழிலாளர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் க்ரோவர் வைத்த கேள்வி 
“எரிந்த நெருப்பில் மொத்த தொழிற்சாலையே சாம்பலாகி இருக்கும் நிலையில் ஒரே ஒரு தீப்பெட்டி மட்டும் எரியாமல், எந்த வித சேதமும் இல்லாமல் எப்படி ‘கண்டு எடுக்கப் பட்டது’?”




                    முற்றும் கோணல்




கடந்த 2015ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் அறுவரை விடுதலை செய்து, இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து ஒற்றை ஆயுள் தணடனையாக தண்டனை குறைப்பு செய்துள்ளது. காரணம், ப்ரிகால் நிர்வாக தரப்பில் உதவி மேலாளர் அளித்த சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க வில்லை. மேலும் பலரது சாட்சியங்கள் ஆட்சேபனைக்கு உரியதாய் இருந்துள்ளது, பிறகு வழக்கின் ஆரம்பம் முதலே நீடித்து வந்த குழப்பங்களும் ஒரு காரணம். சாட்சியங்கள் யாவும் நம்பத்தகுந்தாக இல்லை என்றதோடு ‘பொய் சாட்சியங்களை’ கண்டித்த நீதிமன்றம், அதன் அடிப்படியிலேயே விடுதலையையும் பிறபித்து உத்தரவிட்டது.


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். இந்தியாவில் நீதி துறை மூலம் எளியவர்கள் நடத்திய சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. எனினும் முற்றும் முழுதாக முடியவும் இல்லை. இன்னும் இரு தொழிலாளர்கள் சிறை கம்பிகளுள் இருகிறார்கள். அவர்களுக்கான மேல் முறையீடு முயற்சியகள் முன்னெடுக்கப் படலாம். ‘கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்’ முன்னெடுத்த இந்த போராட்டம் துவங்கிய காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் 8,522ரூபாய், ஓய்வு ஊதியம் 1 லட்சம், இப்போது வழங்கப்படும் மாத ஊதியம் 24,500 ரூபாய், ஓய்வு ஊதியம் 3.5 லட்சம் ரூபாய். 

சிறையில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நால்வரும் தங்களுக்காக அதுவரையிலும் போராடிய தொழிற்சங்க தோழர்களை ஆரத் தழுவி அழுத புகைப்படம் அடுத்த நாள் ஓரிரு நாளிதழ்களின் மாவட்ட செய்தி பிரிவில் ஒரு சிறு பெட்டி செய்தியாக இடம் பெற்று இருந்தது. ஆம், மாபெரும் பட்ஜெட் பற்றிய செய்திகளுக்கு இடம் வேண்டும் அல்லவா? 







- கபிலன். இல



***

24/1/17

சமூக வலைதளமும் மனித உளவியல் தேய்வும்



இது சமூக வலைதங்களின் காலம். தேசம், எல்லை என்றெல்லாம் ஒன்று கிடையாது. யாரும் யாருடனும் பேசலாம், பழகலாம், நட்பாகலாம். கண்ணனுக்கு புலப்படாத ஒரு இணைப்பை ஏற்படுத்தியதில் இருக்கிறது சமூக வளைத் தளங்களின் சக்தி. யாரென தெரியாத புதிய நபர்களிடம் உறவு ஏற்படவும் ஒற்ற ரசனை கொண்ட புதிய நண்பர்களை கண்டடையும் சாத்தியத்தையும் சமூக வலைதளங்களே தந்துள்ளது.

இவை தான் சமூக வலைத்தளங்கள் பற்றிய நமது பொதுவான அபிப்ராயம்.



இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களை நாம் பார்க்கவே விரும்ப மாட்டோம். அதுவும் அதன் சாதக பாதகங்களை பற்றி பேசுவதெல்லாம் அலுப்பூட்டக்கூடிய விஷயம்.

ஆனால் வெளியாகி வரும் ஆய்வுகளானது, இதை பற்றியும் பேசி ஆக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.

பிரிட்டன் கொலம்பியா பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்வானது, ஐந்தில் ஒருவர் தனது நண்பர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினருடைய முக நூல் {facebook} கணக்கை அவர்களுக்கு தெரியாமல் அவர்களது திறன் பேசி {smartphone} வழியாகவோ, கணினி வழியாகவோ ரகசியமாக ஊடுருவி பார்கின்றனர் என்கிறது.

சமூக வலைதளங்களில் அதிகமாக பயனாளர்களை கொண்டுள்ளது பேஸ் புக். 2012ம் ஆண்டே 100 கோடி பயனாளர்களை தாண்டிவிட்ட பேஸ்புக் தளம், 2016ம் ஆண்டு இறுதி கணக்கின்படி 176 கோடி பயனாளர்களை தான் கொண்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்படி சமூக வலைதளங்களில் முதன்மையான பேஸ் புக்கில் தான் அந்தரங்க தகவல்களுக்கான பாதுகாப்பின்மையும் அதிகரித்து வருகிறது. அதுவும் நெருங்கிய நண்பர்களிடம் இருந்தே வெளியாகும் இந்த அத்துமீறல் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வு குறித்து பேசிய வாஹ்லி அஹ்மத் உஸ்மானி “இது தொடர்ந்து அதிகரித்து வரும் ஒரு செயல்பாடு தான். தங்களது மொபைல் போனிலோ அல்லது கணினியிலோ பேஸ் புக் பயன்படுத்தி விட்டு, வெளி வராமல் அப்படியே விட்டு செல்கின்றனர். அப்படியான சமயத்தில் உடன் இருப்பவர்களின் மூலமாக முதலில் இலக்காவது அவர்களின் தனி செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளே ஆகும்”.



இதற்கான கணக்கெடுப்பு அமெரிக்க இளைஞர்கள் 1308 பேரிடம் எடுக்கப் பட்டுள்ளது. தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்தும் அவர்கள் யாவரும் தங்களது User ID, password எனப்படும் வருகை பதிவு மற்றும் கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றியும் கூட பலன் இல்லை என்பதையும் சுட்டி காட்டுகின்றனர்.



பொறமை உணர்வு தான் இதில் முக்கிய பங்கு வகிக்கறது”, என்கிறார் ஆய்வில் முக்கிய பங்காற்றிய கணினி அறிவியல் பேராசியரர் இவான் பெஸட்னிக். அவர் மேலும் கூறுகையில் “அடிப்படையில் இந்த பொறமை தான் நெருங்கியவர்கள் என்று கூட பாராமல், அவர்களது அக்கவுன்ட்டை ஹேக் செய்யவும், ஊடுருவி பார்க்கவும் தூண்டுகிறது, சில சமயம் அந்த அக்கவுண்டையே பயன்படுத்தி அதன் உரிமையாளரை தொடர்ந்து கண்காணிக்கும் நிலைமை வரை இட்டுச் செல்கிறது” என்றார்.



இந்த ஆய்வில் பங்கெடுத்த சிலர், தங்களது குடும்பத்தினர் அல்லது விருப்பமானவர்களின் பேஸ்புக் பக்கங்களை கண்காணிக்கவும், அவர்களது நிலைத் தகவலை அல்லது புகைப்படத்தை நகைப்புக்குரியதாக மாற்றி கலாட்டா செய்யவே இப்படியெல்லாம் செய்கிறோம் என ஒற்றுக்கொள்ளவும் செய்கின்றனர். ஆனால் வெறுப்புணர்வினாலும், பகை உணர்வினாலும் இதை செய்பவர்களின் எண்ணிகையும் சம அளவில் உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று.



மிகவும் முன்னேறிய, தொழில்நுட்பங்களை நமக்கு முன்னரே பயன்படுத்தி வரும் மேற்கத்திய நாடுகளிலேயே சமூக வலைத்தளங்களை அதிலும் குறிப்பாக பேஸ்புக்கை, கையாள்வதில் இவ்வளவு உளவியல் பூர்வ சிக்கல் இருக்கிற தென்றால், நம்முடைய நிலைமை சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்று சமூக வலைதளத்தின் மூலம் இணையும் காதல், நாளை அதன் மூலமே முடிவும் பெறுகிறது. தன் காதலி யாருடன் பேசுகிறாள், யாருடைய நிலை தகவலுக்கு லைக் செய்கிறாள் என்பதை கவனிப்பதே இன்றைய ‘ஆண்’மகனின் பெருங் கவலைகளில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரம் ஆண்களிடம் இதே கட்டுப்பெட்டி தனத்தை பெண்கள் காட்டுவதில்லை. மேற்கூறிய இந்த கூற்றுக்கு, இன்று பேஸ்புக்கில் காதலனின் “அன்பு” கட்டளையால் முகப்பு படம் வைக்க முடியாத பெண்களும், தனது பேஸ்புக் கடவுச்சொல்லை காதலனிடம் ஒப்படைத்து இருக்கும் பெண்களே சாட்சி.

**

18/11/16

திருப்பூரின் உலக திரைப்பட விழா

5 நாட்கள், 23 படங்கள்

உற்சாகமாக தொடங்கியது திருப்பூர் உலகத் திரைப் பட விழா.






18 ஆம் தேதி முதல் 22ஆம தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவை 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர்' நடத்துகின்றனர்.

5'வது ஆண்டாக இன்று தொடங்கப் போகும் திரைப்பட விழா, திருப்பூரில் நடப்பது இதுவே முதல்முறை.

முதல் இரண்டாண்டுகள் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோ'வுடன் இணைந்து நடத்தப் பட்டது. பின்பு நகரங்களை தாண்டியும் உலக திரைப்படங்களை கொண்டு செல்லும் நோக்கில் அடுத்த இரண்டு ஆண்டுகள் பட்டுக் கோட்டையிலும், கம்பத்திலும் முறையே நடத்தப் பட்டது.

இப்போது இந்த ஆண்டு தொழில் நகரமான திருப்பூருக்கு வந்துள்ளது.
மாவட்ட அளவில் மட்டுமல்லாது தமிழ்நாடு அளவிலும் முக்கியமான எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் வருவார்கள் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவின் முக்கிய ஒருங்கினைப்பாளரும், தமுஎகச தலைவருமான எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் விழா பற்றி கூறுகையில், "தொடர்ந்து ஐந்நாவது வருடமாக திருப்பூரில் இன்று திரைப்பட விழா தொடங்குகிறது. சினிமா நமது சித்நனைத் தளத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருந்தும் அது தமிழ் வாழ்வை பிரதிபலிக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். முதலில் நல்ல சினிமா என்றாலே இங்கே யாருக்கும் தெரியாது. வாழ்வை பேசும் படங்களே நல்ல சினிமா. மேலும் இங்கு சினிமா என்பது தொடர்ந்து நம் சிந்தனைத் தளத்தை பாதிக்கக் கூடிய ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது. இப்படியான சூழலில் நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதே இந்த விழாவின் நோக்கம்" என்றார்.

திரைப்பட விழாவின் முதல் நாளான இன்றைய நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு ஆளுமையான எடிட்டர் லெனின் துவக்கி வைக்கிறார்.

முதல் படமாக "ஸ்பார்டகஸ்" திரைப்படம் காலை 10 மணிக்கு திரையிடப் படுகிறது. உலக திரைப்பட இயக்குனர்களில் தன் திரைவாழ்கையில் அனைத்து விதமான உச்சங்களையும் தொட்டுவரென புகழப்படும் ஸ்டான்லி குப்ரிக் இயக்கியிருக்கும் இந்தப் படம் "உலக சினிமா வரலாற்றில் முதல் காவியப் படம்"என அடையாளப்படுத்தப் படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் என 12 நாடுகளை சேர்ந்த 23 படங்கள் திரையிடப் படுகிறது.
நுழைவு கட்டணமாக ஒரு நாளுக்கு 200₹ என்றும், ஐந்து நாளுக்கும் சேர்த்து 1000₹ என தெரிவிக்கப் பட்டுள்ளது.


- கபிலன்


**

15/11/16

C"க்கு பின்னால் இருக்கும் A மற்றும் B"யின் கதை







கணிணியின் பிரதான இயக்கியாக(drive) ஏன் C இருக்கிறது என என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? 


ஏன் A, B அல்லாமல் C'ல் இருந்து ஆரம்பிக்கிறது? 

கணிணியின் ஆரம்ப காலகட்ட வளர்ச்சியிலிருந்து அதன் தீவிர ஆர்வலர்களாக இருப்பவர்களுக்கு இதற்கான விடை எளிமையாக கிடைத்திருக்கும். ஆனால் கணிணி-பிரியர் அல்லாதவர்களின் மனத்திரையில் சரீர் சரீரென அடிக்கடியாவது இந்தக் கேள்வி வந்து போயிருக்கும். 

ஏன் மைக்ரோ சாஃப்ட்'டின் விண்டோஸ் கணிணியின் பிரதான இயக்கியாக (default drive) C இருக்கிறது? அதற்கு அடுத்தடுத்த இயக்கிகளாக D, E மற்றும் என தொடர்கிறது. எனில் USB இயக்கியை சொருவினால் அது கணிணியில் F, G இயக்கியாக தொடரும். 
சரி இதற்கெல்லாம் முன்னால் உள்ள அந்த A'க்கும் B'க்கும் என்ன தான் ஆனது? 



பதற வேண்டாம். பதில் எளிமையானது தான். ஆம். கணிணியின் வளர்ச்சியை ஒவ்வொரு தலைமுறையாக (Generations) நாம் கணக்கிடுவோம் இல்லையா. அப்படியாக உருவாக்கப்பட்ட ஆரம்பகாலகட்ட கணிணிகளில் போதுமான அளவில் பெரிய சேமிப்பு உபகரணத் திறன் (internal storage capacity) இல்லை. அப்போது அதற்கு பதிலாக Floppy disk drive என்னும் சாதனம் பயன்படுத்தப்பட்டது. தமிழில் நெகிழ் வட்டு இயக்கி என இதைச் சொல்லலாம். அந்த இயக்கியே ஆரம்பத்தில் A என அழைக்கப்பட்டது. அது 5¼ என்றும் 3½ என்றும் இரு அளவைகளில் வெளியானது. இந்த இரு இயக்கிகளையும் பொருத்தக்கூடிய வசதியுடன் வெளியான கணிணியின் பிரதான இயக்கியாக தான் முறையே A மற்றும் B செயல்பட்டது.






1980களின் பிந்தைய காலகட்டத்தில் தான் Hard drive இயக்கிகள் நிலையான அம்சமாக கணிணியில் மாறியது. எனவே இயல்பாக, முந்தைய இயக்கியின் தொடர்ச்சியாக அது C என பெயரிடப்பட்டது. கணிணி இயங்குதளம் சாரந்த அனைத்தும் C'ல் தான் சேமிக்கப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட கணிணி தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நெகிழ் வட்டு இயக்கிகளின் (Floppy disks) தேவை இல்லாமல் போனது. எனவே A, B மறைந்தது, அதன் தொடர்ச்சியாக C மட்டும் இருந்து வருகிறது. 


**

விகடனில் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சிறு கட்டுரை.


3/11/16

மவுலின்னாங்கும், "ஸ்வச் பாரத்தும்


           





மவுலின்னாங். "ஸ்வச் பாரத் ஸ்வச் பாரத்" என சுத்தம் குறித்த பிரக்ஞை கடந்த இரண்டு ஆண்டுகளாக திடுதிப்பென்று நம்மிடையே கிளர்ந்தெழும் முன்னரே, அதை செயலளவில் யதார்த்தத்தில் நிகழ்த்தி காட்டியது மவுலின்னாங். 


மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலைத்தொடரில் அமைந்துள்ளது மவுலின்னாங். ஷில்லாங்கிலிருந்து 90 கிமி தொலைவில் அமைந்துள்ள வெறும் 500 பேர் கொண்ட சின்னஞ்சிறு கிராமம். முழுக்க காசி பழங்குடியின மக்கள் வாழும் இந்த கிராமம் உலக அளவில் ஒரு பெரும் கவனத்தை இந்தியாவிற்கு ஈட்டித் தந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? 


அதுவும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முனனரே. ஊர் கூடி தேர் இழுப்பதை போல சிறுகச் சிறுக அனைவரது பங்களிப்புடனும் அதை சாதித்திருக்கிறது. ஆம், "ஆசியாவின் சுத்தமான நகரம்" என டிஸ்கவர் இந்தியா இதழால் 2003ம் ஆண்டு அறிவிக்கப் பட்டுள்ளது மவுலின்னாங். ஆனால் உலக மக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்த இந்நிகழ்வு பெருவாரியான இந்திய மக்களை சென்று சேராதது ஏனோ துரதிர்ஷ்டம் தான். 





அப்படி என்னதான் இருக்கிறது மவுலின்னாங்கில் ?




                             
               




2003 ஆம் ஆண்டிலிருந்தே உலக அளவில் சுற்றுலா பயணிகள் மவுலின்னாங்கிற்கு அணி வகுக்க தொடங்கிவிட்டனர். வந்த பயணிகளின் மூலம் தெரிந்து கொண்டு மேலும் பலர் வரத் துவங்கினர். 2005ம் ஆண்டு உலகத் தொலைக்காட்சிகளின் மூலம் மேலும் பிரபலமானது மவுலின்னாங். இப்படியாக பயணிகளின் வரத்து அதிகரித்து இன்று மாநிலத்தின் மொத்த வருவாயில் சுற்றுலா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 


மவுலின்னாஙை பொறுத்தவரை விஷயம் மிக எளிமையானது, "சுத்தம் பேணுதல் பிறப்புரிமை". கிராமவாசிகளின் முக்கிய கடமையாக காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதென்றால், வீட்டை சுத்தம் செய்வது மட்டுமல்ல ஒட்டுமொத்த கிராமத்தையும் தத்தம் பங்கிற்கு சுத்தம் செய்வதும். நீங்கள் மவுலின்னாங்கில் வசிக்கும் ஒரு சிறுவன் என்றால், உங்களது முதல் கடமை ரோட்டைக் கூட்டுவதாகத்தான் இருக்கும் பிறகுதான் பள்ளி, படிப்பெல்லாம். இயல்பாகவே மவுலின்னாங் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பிற்கு வந்தவுடன் சுத்தம் செய்யும் கடமையும் அளிக்கப்பட்டு விடுகிறது. "சுத்தம் செய், இல்லையெனில் உணவு கிடையாது" என்பதே எழுதப்படாத விதியாகிப் போனது. இது தலைமுறைகள் கடந்து நீடிக்கும் ஓர் வழக்கமாகவே அமைந்து விட்டது. 





                          "வாழும் பாலம்"


                  
                  


இந்த வார்த்தையை இதற்கு முன்பு கேள்விப் பட்டிருக்கிறிர்களா? உயிரற்ற கான்கிரீட் கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் நமக்கு வாழும் (வேர்) பாலம் என்ற சொல் சற்று அந்நியமாக இருப்பதில் வியப்பில்லை தான். ஆனால் அது உண்மை. ஆலமரத்தின் விழுதுகளை பின்னி பிணைந்து உருவாகியுள்ள ஓர் இயற்கை ஆச்சரியம் ரிவாய் கிராமத்தில் உள்ள இந்த வாழும் பாலம். ஆரம்பத்தில் ஆலமரங்களின் விழுதுகளை பயன்படுத்தியே பாதையை கடந்துள்ளனர். பின்னாட்களில் இயற்கையாக மரங்களின் பிணைப்பால் உருவான பாலம், மனிதனுக்கும் இயற்கைக்குமான பந்தத்தை காட்சிப்படுத்துவதாக உள்ளது. சீரற்ற நகரத் தெருக்களின் இறுக்கமான கட்டடங்களுக்கு இடையே மூச்சு விடவும் சிரமப்படும் சூழலை ஒப்பிடும் போது, உயிரோட்டமான இந்த பாலத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெரும் பரவசத்தை அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். 





                    உயர விரியும் வானம் 



landscape of Bangladesh





மவுலின்னாங் மக்களை பொறுத்தவரை ரசாயனம், பிளாஸ்டிக் என எதையும் தங்கள் ஊரில் அனுமதிப்பதில்லை. ஊரினுள் நுழையும் பிரதான சாலையைத் தவிர ஏனைய சாலைகள் அனைத்தையும் மண் சாலைகளாகவே இன்றுவரை பராமரித்து வருகின்றனர். இவையனைத்தையும் கடந்து மற்றுமொரு அதிசயம், ஸ்கை வ்யூ (Sky view). ஆம், மூங்கிலால் ஆன சிறிய வீடு மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. வங்கதேசத்தின் எல்லையோரம் உள்ள கிராமம் என்பதால் ஒட்டுமொத்த மவுலின்னாங் மட்டுமல்லாது வங்கதேச நிலப்பரப்பையும் இந்த "ஆகாய இல்லம்" மூலம் ரசிக்கலாம். வாழும் பாலத்திற்கு அடுத்து அதிக பயணிகளை கவரும் இடமாக உள்ளது "ஸ்கை வ்யூ". 







                                                

     மவுலின்னாங்வாசிகளின் கவலை 


            




2003ல் உலகின் கண்களில் மவுலின்னாங் கவனம் பெறத் துவங்கியதிலிருந்தே மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. ஆனால் கிராம மக்களின் தலையாய கவலை, சுற்றுலா பயணிகளால் ஊருக்குள் பெருகும் பிளாஸ்டிக் குப்பைகள். ஆரம்பத்தில் இது ஓரளவிற்கே இருந்தது. ஆனால் நாட்கள் போகப் போக நிலைமை மோசமாகத் தொடங்கியது. முடிந்தளவு இதை கட்டுபடுத்த முயன்று இப்போது இந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காகவே ஐந்து பெண்களை நியமித்துள்ளனர் ஊர் பொதுமக்கள். வெறும் பிளாஸ்டிக் மட்டுமல்லாது கான்கிரிட், சிமென்ட் வீடுகளையும் மக்கள் விரும்புவதில்லை. இப்போதும் பாரம்பரியமான குடிசைகளையே இருப்பிடமாக கொள்கின்றனர் காசியினர். தங்களுக்கான தனித்துவம், பிரத்யேக மரபு ஆகியவற்றை அதிகரித்து வரும் சுற்றுலா வாசிகளால் இழந்து விடுவோமோ என்கிற அச்சம் தான் அதற்கு காரணம். இயற்கையோடு இணைந்து வாழ்வதையே உண்மையான வாழ்கையாக காசி பழங்குடியினர் கருதுகின்றனர். 






                    நமக்கான முன்னோடி 


                     





"கடவுளின் பூந்தோட்டம்" என டேஜ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் அலக்ஸான்டர் கரன்கோர் மற்றும் ஜான்மெஜாய் தமூளி, மவுலின்னாங் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். மவுலின்னாங் மக்களின் வாழ்க்கை எந்தளவிற்கு இயற்கையுடன் இயைந்துள்ளது என்பதை அழகாக காட்சிபடுத்தி இருப்பார்கள். சூழல் குறித்த சமூக அக்கறையில் காசி மக்கள் நமக்கு முன்னோடிகள். ஆம், சுத்தம் குறித்த போதனை மட்டும் முழுமையான சுகாதாரத்துக்கு தீர்வாகாது. அடிப்படையில் அது மக்களின் அன்றாட நடைமுறைக்கு உகந்ததாக, அவர்களின் வாழ்நிலையில் இருந்து தொடங்கப்பட வேண்டும். அப்போதுதான் நிச்சமான மாற்றம் சாத்தியம் என மவுலின்னாங் மக்கள் நமக்கு உணர்த்துகின்றனர். மவுலின்னாங்வாசியான கான்கோங், "அடிப்படையில் எங்கள் கிராமம் சுத்தமாக இருப்பதற்கு காரணம் எங்கள் மக்கள் தான், மக்களின் ஒற்றுமை தான் இதற்கு முழு காரணம், பரஸ்பர ஒற்றுமை இல்லையென்றால் எதுவுமில்லை" என்கிறார். இங்கு நமக்கு அதுதான் பிரச்சனையே. ஆம், மக்களின் பங்கேற்பே மாற்றத்திற்கான முதல் அடி. மவுலின்னாங் வழிகாட்டட்டும்.

18/8/16

சென்னை ஐஐடியில் மீண்டும் சாதி ஆதிக்கம்.




"உன்னயெல்லாம் வெட்டி பன்றிக்கு தான் போட வேண்டும்" 


"கீழ்த்தரமான உன்னை பார்க்கும்போது உன் தாயும் நடத்தை கெட்டவளாகத்தான் இருப்பாள் என்றே தோன்றுகிறது"




இவைவெயல்லாம் எங்கோ இரு 'சமூக குழுக்களுக்கு' இடையே நடந்த சண்டையின் போது வெளிப்பட்டதல்ல. இந்தியாவின் Premier தலைசிறந்த கல்வி நிறுவனம் எனப் புகழப்படும் ஐஐடி'யில் (இந்திய தொழில்நுட்ப கழகம்) படிக்கும் மாணவர்களிடம் இருந்து வெளிப்பட்டது. ஆம் சாதிரீதியான வன்மம், கொலை மிரட்டல்கள் நேற்றிலிருந்து மாணவர் ஒருவருக்கு முகநூல் வழி இப்போதும் வந்த வண்ணம் உள்ளன. 


யார் அந்த மாணவர் ? அவர் செய்த தவறு என்ன? 


அந்த மாணவர் பெயர் அபினவ் சூர்யா. இத்தகைய சாதிரிதியான வெறுப்பு தாக்குதலுக்கு ஆளாக காரணம், ஒரு தலித் இயக்குநரை தனது முகப்புபடமாக சமூக வலைதளத்தில் வைத்தது. 
அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மை இதுதான். 




சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பொறியியல் படித்து வருகிறார். சென்னையை சேர்ந்த சூர்யா இப்போது இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த செவ்வாய் அன்று சென்னை எக்மோரில் கபாலி திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வு நடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் அபினவ் சூர்யாவும் நண்பர்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். விழா நிறைவில் நண்பர்கள் சூழ பா.ரஞ்சித் உடன் செல்பி (தன்படம்) எடுத்துள்ளார். அந்த படத்தை அன்று இரவு தனது முகநூல் பக்கத்தில் முகப்பு படமாக வைத்துள்ளார். அவ்வளவுதான்.







காலையில் எழுந்தவுடன் முழுக்க வெறுப்பு விஷம் தோய்ந்த மெஸேஜ்களால் தன் முகநூலில் நிரம்பி வழிவதை பார்த்துள்ளார். அத்தனையும் வன்மம். கொலை மிரட்டல்கள், வெறுப்பு. சாதியம். 
இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் தலைசிறந்த கல்லி நிலையத்தின் மாணவர்கள். நாளைய இந்தியாவின் நம்பிக்கை தூண்கள் (?). 


             யார் அபிநவ் சூர்யா ?


                     


இந்த சாதிய வன்ம தாக்குதலை எதிர்கொள்வதற்கு முன்பே ஊடக அறிமுகம் சூர்யாவிற்கு கிடைத்திருந்தது. அதுவும் மிகச் சமீபத்தில் - ஆகஸ்ட் 12. பெரிய கவனம் பெறாத அந்த சம்பவம் அபினவ் தனது கல்லூரி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தால் வாய்த்தது.

http://www.newindianexpress.com/cities/chennai/Trump-at-IIT-Madras-G-D-Bakshi%E2%80%99s-jingoistic-speech-prompts-open-letter-by-student/2016/08/12/article3576247.ece



சுதந்திர தினத்தை நினைவுகிறுகிற வகையில் ஆண்டுதோறும் சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் அப்படி ஆகஸ்ட் 11ம் தேதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஜி.டி.பாக்ஸி அழைக்கப் பட்டிருக்கிறார். அரசு ஆதரவு கருத்துகளால் 'தேசியவாதம்' குறித்தும் தனது அதீத உணர்ச்சிமய பேச்சினால் ஊடகங்களில் ஏற்கனவே பல முறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியும் உள்ள பாக்ஸி சென்னை ஐஐடியிலும் சர்ச்சைகளுக்கு குறைவின்றி பேசியுள்ளார். இதனால் வேதனை அடைந்த மாணவர் அபினவ் சூர்யா கல்லூரி இயக்குநருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார். அந்த கடிதம் அடுத்த நாளே சில ஊடகங்களில் வெளியாகவே, சூர்யா கவனம் பெற்றார். (முழுக் கடிதம் சுட்டியில்)



அப்படி என்ன தான் பாக்ஸி பேசினார். 





பேச்சின் ஒரு சில சாரம்சங்களாக அபினவ் குறிப்பிடுவது :


“பாகிஸ்தானுடன் சண்டையிடுங்கள், அது நம் நாட்டை உறுதியாக்கும்".

“எங்கள் தலைமுறையில் பாகிஸ்தானை இரண்டு ஆக்கினோம், உங்கள் தலைமுறை அதை மேலும் நான்கு ஆக்க வேண்டும். அப்போதுதான் நாம் அமைதியாக வாழ முடியும்” 

மேலும் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி, ரானுவத்தால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றதோடல்லாமல் "அகிம்சை முட்டாள்தனமானது" என்றும் ஜெனரல் பாக்ஸி பேசியுள்ளார் என தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் சூர்யா.

பாக்ஸின் இந்த பேச்சுக்கு பிறகு, அவரை "சென்னை ஐஐடியில் டிரம்ப்" என்றே ஊடகங்கள் அழைத்தன. அந்த அளவிற்கு சிறுபான்மை, விளிம்புநிலை மக்கள் மீது தனது பேச்சில் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.



               கடந்து வந்த பாதை


இதே சென்னை ஐஐடி'யில் தான் கடந்த வருடம் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது. பிறகு நாடு முழுக்க பெரும் பிரச்சனையாக கிளர்ந்தெழுந்த போது, கல்லூரி நிர்வாகத்தால் தடை பின்வாங்கப்பட்டது. பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் சாதி ஒடுக்குமுறை என்னும் விஷச் சுழலுக்கு ரோஹித் வெமுலா என்னும் தலித் பி.எச்.டி மாணவன் இரையாக்கப்பட்டார். சாதி இந்திய ஆன்மாவை அரித்துக் கொண்டிருக்கும் ஓர் நோய்க் கூறு. இதுவரையான காலக் கட்டங்களில் இந்திய கிராமங்களை பீடித்து இருந்த நோயான சாதி பாகுபாடு. சமீப வருடங்களில் பல்கலை கழகங்களை அதிகளவில் ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளது. அதன் ஓர் கோர விளைவுதான் ரோஹித் வெமுலா, APSC விவகாரம்.

சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாறி வருகிறோம். அதனால் தான், இனைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் ஓர் பிரபலமாய் இருந்த போதும், அவர் தலித் என்பதாலயே ஆதிக்க உணர்வு கொண்ட மாணவர்களுக்கு எரிச்சலும், ஆத்திரமும் வருகிறது. உண்மையில் ஐஐடிகள் உயர்கல்வி நிறுவனங்களா? அல்லது சாதி கூடாரமா என்னும் கேள்வி எழாமல் இல்லை. அடிப்படையில் அந்த மாணவர்கள் ஆகட்டும், ஆசிரியர்கள் ஆகட்டும் இட ஒதுக்கீடு தான் அவர்கள் பிரச்சனையே. மண்டல் குழு அறிக்கை சமர்பித்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது இந்த அவல நிலை. உயர்கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் இத்தகைய அவல நிகழ்வுகள், உரிமைக்களுக்கான பேராட்டங்கள் இனி எங்கு உரத்து ஒலிக்க வேண்டும் என நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகின்றன. 
ஒவ்வொரு காலத்திலும் ஒரு அரசியல் முழக்கம் வலுப்பெறும். 
இது "ஜெய் பீம்"கான காலகட்டம்.




***

நான் எழுதிய இதே கட்டுரை விகடனில் இன்னொரு விதமாய் வெளியாகி இருந்தது. 

12/4/16

சமகால அரசியல் - தமிழக தேர்தல் - அதன் போக்கு- நீட்சி

(2016-2017'ஆம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் முதல்கட்டத்தில் தேர்வான எனது கட்டுரை. அடுத்த கட்ட எழுத்து தேர்வு 17.04.16. தலைப்பு: தமிழக அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தலில் நிகழும் மாற்றங்கள், கருத்தியல் சார்ந்த பார்வையை முன்வைத்தல்)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


அரசியல் பங்கேற்பின்மையால் ஏற்படும் மிகப்பெரிய மோசமான விளைவு என்னவென்றால் கீழ்மையாளர்களால் நாம் ஆளப்படுவது தான் – பிளேட்டோ




"அரசியல் எதுக்குப்பா நமக்கு" என்னும் கேள்வி தான் நம்மையும் சூழந்து கொண்டு இருந்தது சில ஆண்டுகள் முன்புவரை. ஆனால் நிலைமை இன்று வேறு. ஆம், போன தலைமுறைகளின் டீக்கடை பெஞ்சு'களை விஞ்சிவிட்டது இன்றைய சமூக வலைதள அரசியல் பேச்சுகள். கழுத்தை சுற்றும் பாம்புகள் போல தலைவர்களை "மீம்ஸ்"கள் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.




அதிகாரத்தின் மமதை


“கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை", தனது தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் இவை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியின் களிப்பில் வெளியானவை. ஆனால் ஓராண்டுக்குள் சென்னை பேரிடரின் போதான அவரது அரசின் கையாளாகத் தனம், இந்த மிதப்பை முற்றிலும் புரட்டிப் போடும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஏனெனில் பேரிடரால் நிகழ்ந்த இழப்புக்கு நிகரானது அரச நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பு. இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டிய பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டும் அவலம் வேறு. எளிய மக்கள் மனதில் பதிந்த இந்த கசப்பு அவ்வளவு சீக்கிரம் மாறாது.




"இலவசங்களின்" அரசியல்



2006'ம் ஆண்டு சட்டசபை தேர்தல். கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் மூழ்கி இருந்தன. அப்போது பிரதான எதிர்கட்சி தலைவரான கருணாநிதி தன்னுடைய தேர்தல் அறிக்கையுடன் வந்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: இலவச நிலம், இலவச வீடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, இலவச கணினி. ஜெயலலிதா முதல் பெரும்பாலான கட்சிகள் வரை, கருணாநிதி அரசியலை கேலிக்கூத்தாக்குகிறார் என சாடின. தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார். 2011'ம் ஆண்டு தேர்தல். இப்போது ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்: விலையில்லா மிக்சி, விலையில்லா மின்விசிறி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா வீடு. பெருவெற்றி பெற்றது அதிமுக. இடைப்பட்ட இந்த இரண்டு ஆட்சியிலும் நடந்திருக்கும் மாற்றம் என்பது "இலவசம்" என்பதிலிருந்து "விலையில்லா" என்னும் வார்த்தை வேறுபாடு அளவிலான மாற்றம் மட்டுமே. அடிப்படை தேவைகள், உரிமைகளை வழங்க மற்றும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதைதாண்டி ஆடம்பரங்களை இலவசமாக ஏற்றுக்கொள்ள மக்கள் இப்போது தயாரில்லை. நிலையான வேலையும் நிரந்தரமான வருமானமுமே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.




கருத்துக்களே தலைமை


2014'ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை தொடங்கிய சமயம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய முதல் பரப்புரையில் சொன்னார்: "இது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி". அன்று அவர் கோடிட்டு காட்டிய அந்த கருத்தியல் மோதல் இன்று அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த வருடம் அதிகமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை "மதச்சார்பின்மையாக" இருக்குமென்றால், இந்த ஆண்டு அது "கருத்து சுதந்திரமாக" இருக்கும். இந்தப் போக்கு எதேச்சையானது அல்ல. நேற்றைய பெருமாள் முருகனிலிருந்து இன்றைய கண்ணையா குமார் வரையான நிகழ்வுகளின் மூலம் அரசின் அதிகாரம் எவ்வளவு மூர்க்கமானது என்பதை மக்கள் மனதில் பதிய வைத்து வருகின்றனர் ஆட்சியாளர்கள். இனி "வளர்ச்சி" கோஷங்கள் புளித்துவிட்ட நிலையில், மதச்சார்பின்மை பற்றிய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறும். அனைவருக்கும் 15 லட்சம் என்பதை தாண்டி, உணவு ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் என்னும் கருத்து வலுப்பெறும். புல்லட் ரயில் என்றைக்கோ வரட்டும், இன்றைக்கு நான் சாப்பிடும் உணவு நாளை நான் கொல்லப்பட காரணமாக இருக்கக்கூடாது தானே?




நிகழும் மாற்றம்


அறிவியல் ரீதியாக எந்த ஒரு கருத்தும் ஒரே வடிவத்திலேயே நெடுநாள் உயிர்ப்போடு இருக்க முடியாது. 40"க்களில் சுதந்திரமும், 60"களில் சமத்துவச் சிந்தனையும், 70'களின் பிற்பகுதியில் ஜனநாயகம் நசுக்கப்பட்ட போது அதற்கு எதிரான கருத்தும், 80களில் சமூகநீதி அரசியலும் என அது தொடர்ந்தது. பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டிய அந்த அரசியல் சூழல் மத துவேஷ சக்திகளால் பின்னாட்களில் சிதறடிக்கப்பட்டது. அதேபோலவே ஒரு துருவ அரசியலும் இனி மாறப்போகும் சூழல் வலுத்து வருகிறது. ஒரு கட்சி போய், இன்னொரு கட்சி என்றல்லாமல், எந்த கொள்கைக்கு எது மாற்று கொள்கை என்னும் கேள்வி எழும் நிலை வெகுதொலைவில் இல்லை. அதேவேளை, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்த அரசியலும் தமிழ்நாட்டில் வீரியம் பெற்று வருகிறது. திராவிட அரசியல், அதன் வழி வந்த கட்சிகளால் நீர்த்துப்போனதே இதற்கு காரணம். வாச்சாந்தி வழக்கிலிருந்து பரமக்குடி துப்பாக்கி சூடு வரை பொறுத்திருந்து பார்த்து அடைந்த ஏமாற்றத்திற்கு பிறகே தங்களுக்கான அரசியல் பாதையை தலித் மக்கள் தேர்ந்தெடுத்தனர். இன்று தமிழ்நாட்டில் ஒரு தலித், முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்னும் கருத்து வலுப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.


மக்களே இறுதி எஜமானர்கள்


இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல். அதில் பெரும் பேசுபொருளாக இருக்கப்போவது ஊழலும், மதுப்பிரச்சனையும். ஊழலை பொறுத்தவரை இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை என்னவென்றால், அதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கு இல்லை என்பதை தாண்டி ஊழல் அரசில்வாதிகள் அதை நியாயப்படுத்தும் போக்கு தான். இரண்டாவது மது விலக்கு. இன்று இது குறித்து திமுகவும், அதிமுகவும் பேசுவதற்கு கூட தார்மீகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த தேர்தல் அசாதாரணமான ஒன்று. ஆட்சியிலிருக்கும் கட்சியின் மீது மிகப்பெரும் அதிருப்தி. ஆனால் அந்த அதிருப்தியை பாரம்பரிய எதிர்க் கட்சியான திமுகவால் பயன்படுத்தவோ ஒருங்கிணைக்கவோ முடியவில்லை. கிட்டதட்ட ஆறுமுனைப் போட்டி. உடனடி அரசியல் லாபத்தையும் கணக்கெடுக்காது எது மற்ற அரசியல் கட்சிகளை இந்த இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் இருந்து விலக்கி வைக்கிறது. கணக்கு 2016'ஐ பற்றியல்ல, 2021 பற்றி. மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். அது ஒரு நீண்ட காலப் பயணம். இதற்கான முயற்சியில் எண்ணிக்கை பலத்தில் இன்று சரிவு ஏற்பட்டாலும், நாளை நம்பிக்கை மிக்க மாற்றாக வளர முடியும் என்னும் ஒரே நோக்கம்தான் இதில் அடங்கி இருக்கிறது. நிர்வாக சீர்கேடுகளில் இருந்து கிரானைட் ஊழல் வரை மக்கள் பார்த்து சலித்தாகி விட்டது. இவர்கள் சுற்று முடிந்தது, இனி அவர்களுக்கு தரலாம் என்னும் நிலையை இனிமேலும் மக்கள் எடுக்கத் தயாராக இல்லை. தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் முதல்முறை முழுமையான லகான் மக்கள் கைகளில். மார்க்ஸின் கூற்றுப்படி, வரலாறு தன்னை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறது. முதல்முறை துன்பியலாகவும். இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும். இனிமேலும் அரசியலை கேலிக்கூத்தாக்க தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.




– கபிலன் இல.

(clkabilan@gmail.com).

11/3/16

ஆர்த்தி'கள், இமையங்'கள், தேவைகள் – கபிலன்

(நிலாமுற்றம் வலைதளத்தில் நான் எழுதிய கட்டுரை)


"கலை கலைக்கானது" என்ற காலம் போய், கலை மக்களுக்கானது என்னும் காலம் உருவாகி வருவதன் தாக்கத்தின் எதிரொலியே தமிழ் நவீன இலக்கியத்தின் இன்றைய ஆரோக்கிய சூழலின் வெளிப்பாடு. அதிலும் இனி வரும் காலம், தலித் இலக்கியத்தின் காலம் என பல்வேறு மார்க்சிய, அம்பேத்கரிய அறிஞர்கள் முதல் நாட்டின் முக்கிய எழுத்தாளுமைகளின் கூற்று இங்கு நாம் கவனிக்கத்தக்கது. ஏனெனில், மக்களின் குரல் என்பதையும் தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதே இதன் பிரதான ஆன்மா. ஆம், பேசாப் பொருளைக் குறித்து பேசுவது தானே கலைஞனின் வேலை?




இமையமும் இலக்கியமும்




தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் இமையத்தின் பங்கு தனித்துவமானது. காலம்தோறும் மனித மனம் வெற்றியை நோக்கியே தனது பார்வையை குவிக்கிறது என்றால், இலக்கியமோ என்றும் சோகத்தையே தனது பாடுபொருளாக கொண்டுள்ளது, அது துன்பியலையே பெரும்பாலும் பேசுகிறது. அது பேரிலக்கியங்களில் இருந்து இன்றைய நாவல் வரை. தமிழ் இலக்கியத்திலும் ஜெயமோகன் முதல் எஸ்.ராமகிருஷ்ணன் வரை இப்படியான வகைமையிலேயே எழுதுகின்றனர். இமையமும் இவ்வாறு துன்பியலையே தனது கதைகள் வழியாக பேசுகிறார். ஆனால் யாருடைய துன்பியலை? இங்குதான் நான் மேற்குறிப்பிட்ட "தனித்துவம்" கவனிக்கப்பட வேண்டும். இமையம் விளிம்புநிலை மக்களின் துன்பியலை பேசுகிறார்.







தோட்டியும் தமிழிலக்கியமும்




தமிழ் இலக்கிய தளத்தில் முதல்முறையாக விளிம்புநிலை மக்களின் அவலத்தை பேசியது "தோட்டியின் மகன்" நாவல். அதுவும் மொழிபெயர்ப்பு தான். 1946'ல் மலையாளத்தில் எழுதப்பட்ட தோட்டியின் மகனின் மொழிபெயர்ப்பை 1952லேயே முடித்துவிட்ட சுந்தர ராமசாமியால், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து 2000'ல் தான் தமிழில் புத்தகமாக கொண்டுவர முடிந்துள்ளது. இதை குறித்து வருத்தத்துடன் முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அது ஏன் 1940'லேயே மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளையால் சாதிக்க முடிந்ததை, தமிழில் நாற்பது ஆண்டுகள் கழித்து தான் நம்மாள் நெருங்கவே முடிகிறது? நமது தமிழ் பதிப்புத் துறை அவ்வளவு "புனிதப்படுத்தப்" பட்டிருந்ததா? இதனை ஒட்டி இன்று இமையம் போன்ற எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தை நம்மாள் புரிந்து கொள்ளமுடியும். ஏனெனில் பூமணி, இமையம் போன்றோரின் வருகைக்கு பிறகான சமீப ஆண்டுகளில் தான் தமிழில் முதல் "தூப்புக்காறி" உருவாகியுள்ளாள். மேலும் கடந்த வருடம் வெளியாகியுள்ள கௌதம சன்னாவின் "குறத்தியாறு" முக்கியமான படைப்பு.










நிலாமுற்றம்




இத்தகைய பின்னணியோடு நமது பார்வை விரியும் போது, இமையத்தின் படைப்புகளின் வீரியத்தை அதளவில் புரிந்து கொள்ள முடியும். அந்தவகையில் இமையத்தின் "பெத்தவன்", "சாவுச்சோறு" படைப்புகளை இந்த வார நிலாமுற்றத்தில் பேச எடுத்துக் கொண்ட ஆர்த்தி பெரிதும் பாராட்டுக்கு உரியவர். ஏனெனில் இந்த படைப்புகளை நோக்கிய கவனத்தை ஏற்படுத்துதலே ஆர்த்தி செய்துள்ள பெரிய காரியமென்றும், அதுவே இந்த நிகழ்வின் முதன்மையான நோக்கமாக என்னால் பார்க்கமுடிகிறது. ஒரு படைப்பு வெளியாகி விட்டால் அதுசார்ந்த விசயங்கள் யாவும் சரியாகி விடாது. தொடர்ந்து அது விவாதத்துக்கு உள்ளாகும் போதும், பரவலாக்கப் படும்போது தான் அது சாத்தியம். அதை நிலாமுற்றம் தொடர்ந்து செய்கிறது. அந்த செய்கையை அற்புதமான வகையில் இன்னும் ஒருபடி மேலே நகர்த்தி இருக்கிறார் ஆர்த்தி.




பெண்ணும் ஒடுக்குமுறையும்



ஒரு சடங்கோ, ஒரு நம்பிக்கையே, மதமோ அல்லது "ஒழுக்கவிதிகளோ", பெண்ணின் தலையில் ஏற்றுவதில்தான் ஒரு சமூகத்தின் அல்லது ஒரு குழுவின் ஆகப்பெரும் சாதனை அடங்கியிருக்கிறது என நான் நினைக்கிறேன். இந்த இடத்தில் இதை முற்போக்காகப் பார்த்தால் காந்தி தனது போராட்ட களத்தில் எந்தளவு பெண்களை நம்பினார் என நினைத்துப் பார்க்கலாம். பெண்களின் வலிமையை முற்போக்கானவர்களும் சரி, பிற்போக்கானவர்களும் சரி, எந்தளவு புரிந்து வைத்துளனர் என்பதை நாம் உணர முடிகிறது. "பெத்தவனில்" வரும் பெண்கள் அப்படி இருக்கின்றனர். மிகவும் மூர்க்கமான சாதியுணர்வோடு பெண்கள் உலாவுகின்றனர். தந்தைக்கு மகள் மீது உண்டாகும் பரிவுகூட அம்மாவுக்கு ஏற்படுவதில்லை. இது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. சரியோ தவறோ ஒரு விசயத்தில் பெண்கள் எடுக்கும் உறுதியான முடிவென்பது அவர்கள் இலக்கை அடையும் வரை அவர்களை ஓயச்செய்வதே இல்லை. இந்த இடத்தில் சாதியத்தின் கொடூரத்தை நினைத்தால் நமது அமைதி குலைகிறது. தெரிந்தோ தெரியாமலோ பெண்களே சாதிகளை காப்பவர்களாகவும், தலையில் தூக்கி சுமப்பவர்களாகவும் மாற்றப் பட்டுள்ளனர். அனைத்து பெருமை கற்பிதங்களும் அவர்களை வைத்தே கட்டப்படுகின்றன. இதை அவர்கள் உணராத வரை இதற்கு தீர்க்கமான ஓர் முடிவு இல்லை. எனவே இமையம் தன் கதைகள் மூலம் பெண்களிடம் பேசுகிறார். மிகவும் நிதானமாக, ஆனால் யதார்த்தமான தொனியில் பெண்ணிடம் உரையாடுகிறார். மனசாட்சியை எழுப்புகிறார். முடிவில் அவள் தன் நிலையை அறிந்து கதறுகிறாள், இதற்கு எப்படி முடிவு காண்பது என பதைபதைக்கிறாள்.




நேரடி உணர்வும், நேர்மையும்


மேலே குறிப்பிட்ட அதே பரபரப்பு தான் ஆர்த்தியிடமும் அவளது பேச்சில் காணமுடிந்தது. உண்மையில் இமையம் பெண்களுடன் நிகழ்த்தும் உரையாடலை நான் தனித்தே பார்க்க விரும்புகிறேன். ஆம், ஆண் ஊசலாட்டமானவன். அவனது மனநிலை வேறானது. எனில் பெண் சமூக, உளவியல் நிலை முழுக்க வித்தியாசமானது. பெத்தவன் கதையை நான் வாசித்து இருக்கிறேன் (இங்கு சாவுச்சோறு முழுதும் வாசிக்கவில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்). அது என்னுள் ஏற்படுத்திய தாக்கமானது ஒரு சில கண்ணீர்த் துளியுடன் கடந்து போய்விடக் கூடியது. ஆனால் என் வகுப்பு தோழி, அதை படித்து முடித்ததும் ஓர் இரவு முழுக்க அழுததாகச் சொன்னாள். அன்று அதை வெறும் தனிப்பட்ட ஒருவளின் நிலையாக பார்த்த நான், இந்த நிகழ்வில் ஆர்த்தியிடம் இயல்பாக தெரிந்த அந்த அறச்சீற்றத்தின் மூலம், இந்த உண்ர்வுநிலையில் ஒரு பொது தன்மை இருப்பதை புரிந்துக் கொண்டேன். ஆண்களுக்கு எப்படியோ, பெண்களிடம் இமையத்தின் சொற்கள் நேரடித் தாக்கத்துடன் செல்கின்றன. இப்படியாக ஆர்த்தியின் பதிவு முழுமையான நேர்மையுடன் இருந்தது. அவள் அடிக்கடி கோடிட்ட "இந்த மாதிரியான சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்" என்னும் வார்த்தைகள் நாம் அடிக்கடி நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று.








தேவை இமைய"ங்கள்




சரி, இமையத்தினால் இன்று ஒரு ஆர்த்தியை (இங்கு ஆர்த்தி என்பதை பெண் என புரிந்து கொள்க), நம்மிடையே பார்க்க முடிந்துருக்கிறது. இன்னும் பல்வேறு ஆர்த்திகள் உருவாகி இருக்ககூடும். ஆனால் ஒரு இமையம் மட்டுமே போதுமா? இன்றைய நாளில் இமையங்களின் தேவை அதிகம். எனவே நமக்கு வேண்டியதெல்லாம் "இமையங்கள்" (இதை பால் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டாம்). அது ஒரு ஆணாகவோ, அல்லது ஆசிரியராகவோ இருக்க வேண்டும் என தேவையில்லை. பெண்களைக் குறித்து ஆண் பேச, பெண்களே ஏன் அதை விரிவாக பேசக்கூடாது என்பதே கேள்வி. பெண்கள் இனி எழுத வரவேண்டும். எழுத்தில் கவிதை உலகை தாண்டி பெண்கள் வரவேண்டும். அதிகளவில் அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதத்துக்கு உள்ளாக்க வேண்டும். பேசுபொருளாக மட்டும் இல்லாமல் இனி அதை பேசுபவளாகவும் பெண் மாற வேண்டும்.
நான் குறிப்பட வேண்டிய இன்னொன்று, நான் இங்கு ஆர்த்தியின் "திறனாய்வு" குறித்து திறனாய்வு செய்ய எழுதவில்லை. அந்த நிகழ்வின் தாக்கத்தை என்னளவில் விவரித்துள்ளேன். அவ்வளவே. இறுதியாக "பெத்தவன்" குறித்த வண்ணதாசனின் வார்த்தைகள் கவனப்படுத்த வேண்டியவை, "இனிவரும் காலங்களுக்கான தேடலின் முடிவு தான், பெத்தவன்". 

(http://nilamutrampsgcas.blogspot.in/2016/03/blog-post.html?m=1)