10/11/15

தீபாவளி - ஒரு குறிப்பு



 முதலில் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!








தீபாவளி மதரீதியில் அனுசரிக்கப்படும் ஒரு பண்டிகை, மூடவழக்கங்கள் நிறைந்து நிற்கும் ஓர் நிகழ்வு, தேவையில்லாமல் காசை கரியாக்க வாய்க்கும் சந்தர்பம். இதுதான் தீபாவளி குறித்த எனது உடனடி மதிப்பீடு. ஆனால் இப்போது அல்ல, ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்பு.







இதனிடையில் முற்போக்கு இலக்கியங்களின் வழி, பகுத்தறிவு சார்ந்த அதீத தர்க்க உண்ர்வும் இந்நிலையை மேலும் என்னுள் கூர்தீட்டியது என்றே சொல்ல வேண்டும்.


கடவுள் மறுப்பு என்பது கடவுள் மறுப்பு மட்டுமே அல்ல, அதன் நீட்சியான மனித தன்மையற்ற வழக்கங்களின், மூடத்தனமான நடைமுறைகளுக்கான மறுப்பு தான், அதன் முழுமையான பொருள். வரலாற்றில், பெரியார் நம் காலத்தில் என இல்லாமல் பல்வேறு காலக் கட்டங்களிலும் தொடர்ந்து தப்பாகவே புரிந்து கொள்ளப்பட்ட, தவறாக interpret செய்யப்பட்ட (செய்யப் பட்டு வரும்) ஒரு நபர் என்பது என் கணிப்பு. பெரியார் என்றவுடன் கடவுள் எதிர்ப்பு (மறுப்பு கூட அல்ல), பிள்ளையார் சிலை உடைப்பு(அதுவும் முழுமையான உண்மை அல்ல)  என்பது மட்டுமே பலருக்கும் நினைவில் உதிப்பதிலிருந்தே இக்கூற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொள்ளலாம். ஆனால், தனது ஆத்ம நண்பர் ராஜாஜி வீட்டிற்கு வரும் பொழுது எல்லாம், விபூதி தட்டை ஏந்தி நிற்பவர் தான் பெரியார். அவர் மட்டுமல்ல, இறை நம்பிக்கை உள்ள யாவரையும் கூட பெரியார் மதித்தே அன்பு செலுத்தி வந்தார். ஆனால், பெரியாரை கோடிட்டுக் காட்டுகிற நம்மில் எத்தனை பேர் அத்தகைய சகிப்புத் தன்மையுடன் இன்று இருந்து வருகிறோம். வெறுப்பு என்பது இருமுனை உள்ள ஈட்டிப் போல வளர்ந்து வருவதை எத்தனை பேர் உணர்ந்துள்ளோம்?..




இந்தியா பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு பண்பாட்டு அடையாளங்கள் கொண்டோரின் தொடர்ச்சியான உரையாடல் களமாக இருந்து வரும் ஓர் மாபெரும் நிலப்பரப்பு. இங்கே யாரும் யாருடைய நம்பிக்கைகளையும், அபிலாசைகளையும் துவேஷிப்பது வரலாற்றில் மதிப்பளிக்க கூடியதாக இருந்ததில்லை. பல்வேறு தத்துவங்களும் அனாயசமாக அதனதன் போக்கில் தனித்துவத்தை இழக்காது விரவி இருந்த இடம்தான் இந்தியா எனும் துணைக்கண்டம். அப்படியான தத்துவங்களில் வரலாறெங்கும் எப்போதும் இருந்து வந்த ஓர் தத்துவம் தான் நாத்திகமும். இந்தியாவில் நாத்திக வாதம் எங்கிருந்தும் திடிரென புதிதாக எழுந்து வந்து குதித்து விடவில்லை. இறை ஏற்பு பெரிதும் பெருகி இருந்த காலங்களில் எல்லாம் கூடவே இறை மறுப்பும் இருந்தே தான் வந்துள்ளன. அதுதான் நமது மரபு.  நமது வரலாற்றில் எல்லாவற்றிற்கும் இடம் இருந்தே தான் வந்துள்ளன. தத்துவரீதியிலான இத்தகைய விசாரனைகள், பிற்காலத்தில் உருவ வழிபாடு, சகிப்பின்மைக்கு எதிராக வளர்ச்சி அடைந்த போக்கு தான் மார்க்கமாக உருப்பெற்ற புத்தம், ஜெயினம் எல்லாம். என்னளவில் புத்தரையே இந்தியாவின் முதன்மையான பகுத்தறிவுவாதி என்பேன். வேத மறுப்பில் தொடங்கியது அவரது முற்போக்கு. இப்படி தான் இருந்து வந்துள்ளது நமது பண்பாட்டு தொடர்ச்சி.




ஆனால் அத்தகைய சகிப்பு தன்மை மிகுந்த  நிலை இன்று கேள்விக் குள்ளாகி இருப்பதுதான் நமது காலத்தின் பெரும் அவலம். சகிப்பின்மை என்பது இன்றைய இணைய வெளியின் டாப் ட்ரெண்டிங்காக மட்டும் அல்ல, நமது அவலத்தின் ஒரு சின்னம். ஆத்திகர்களிடம் என்று மட்டுமல்ல, நாத்திகர்களிடமும் சகிப்புத்தன்மை குறித்த புரிதல் அருகி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.




அத்தகைய ஓர் சிக்கலான குழப்பத்திற்கு தான் வழியாகிப் போகிறது, "நாத்திகம் பேசுவோர் தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்லலாமா என்னும் கேள்வி.




இதற்கு எளிமையான பதில்,

"சொல்லலாம்".




                  தர்க்கரீதியாக இதை விளக்க வேண்டுமானால்




* முதலில் தீபாவளி இந்து பண்டிகை அல்ல, சமணர் பண்டிகை.




* பக்தி மறுமலர்ச்சி காலத்திற்கு முன்னரே வைணவ, சைவ சமயங்கள் பிற சமய நம்பிக்கைகள், பண்டிகை மட்டும் வழக்கங்களை சுவீகரித்து கொள்ளத் தொடங்கி விட்டது.




* இங்கே கூறப்படும் "நரகாசுரன்" கதை எல்லாம் பின்னாளில் புனையப்பட்ட ஒன்று. வடநாட்டு பகுதிகளிலும் இதுபோல பல கதைகள் உண்டு. காலத்திற்கு ஏற்ப அவை மாறியுள்ளன.




* இதற்கு மிகச்சிறந்த உதாரணம், புத்தத்தின் புனித நிறமாக கருதப்படும் காவி நிறத்தை, தங்களது மத அடையாளமாக மாற்றி இப்போது ஹிந்துத்துவ வாதிகள் "கறை" படுத்தியுள்ளனரே அதைப்போல.




(புத்தரை விஷ்ணுவின் இன்னொரு அவதாரமாக மத அடிப்படைவாதிகள் தொடர்நது கூறி வருவதை நினைவுபடுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன்)




* மேலும் ஓர் உதாரணமாக புலால்- அதாவது இறைச்சி- உண்ணாமையை சொல்லலாம். சைவர்களாகட்டும் வைணவர்களாகட்டும் ஆதியில் யாகத்திற்காக குதிரைகளை பலியிட்டவர்கள் தான் என்பதை மறந்திடக் கூடாது.




* விஜயநகர பேரரசுக்கு முன்னர் இந்நிகழ்வு மிகப்பெரும் அளவில் கொண்டாடப்பட்டதில்லை. பட்டாசு வெடிக்கும் பழக்கம் கூட அண்மையில் சீனாவிடமிருந்து கடன் வாங்கியது தான்.




–மேலும் உபரித்தகவலாக, அடிப்படைவாதிகள் சமீப காலமாக அதிக வெறுப்புடன் குறிவைத்து தாக்கி வருவது, மன்னர் அசோகர். ஏனெனில் இந்திய வரலாற்றில் அவருடைய இடம் தவிர்க்க முடியாதது. அந்த வரலாற்று நாயகனை தங்களுடைய சுய லாபங்களுக்காக வெவ்வேறு வகைகளில் திரித்துக் கூறும் வேளையை இப்போது மும்முரமாக்கி உள்ளனர். அதனொரு பகுதிதான் பிகார் தேர்தலில் அசோகர் புஷ்ப்பக(இந்த தொணியில் தான் இருக்கும்) விமானத்தை வைத்திருந்தார் என்னும் பொய்ப் பிரச்சாரம். அவர் பௌத்த மதத்தை தழுவியவர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.




     --------------------------




சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். தீபாவளி என்பது இந்துப் பண்டிகை அல்ல, இந்தியாவின் பண்டிகை. இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும், தொடர்ந்து கொண்டாடி வந்த, இன்றும் கொண்டாடி வரும் ஓர் பண்டிகை. சிறுவயதில் இருந்து சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதியிலேயே வளர்ந்து வந்தவன் நான், ஆனால் ஒருபோதும் தீபாவளி கொண்டாட்டங்களில் எங்களிடம் இருந்து அவர்கள் விலகி நின்றது இல்லை.  ஒட்டுமொத்த மக்களும் குதூகலத்துடன் லயிக்கும் ஒரு தருணம் அது. ஆம், இந்தியாவின் கொண்டாட்ட மனநிலையின் ஒரு பெருநிகழ்வாகவே தீபாவளியைப் பார்க்கிறேன். நிலையற்ற வாழ்கையை பாரதூரமாக கடக்கும் நிலையிலேயே இன்றையகால மனிதன் இருந்து வருகிறான். அதுவும் இன்றைய சூழல், அடிப்படை தேவைகளும் பூர்த்தியடையாத, மேலும் பொருளாதார தேவைகளால் வாழ்க்கை நெருக்கடிகளை சமாளிப்பதே பெரும் பிரயத்தனம் என ஆகிவிட்டது. அத்தகைய யதார்த்தத்தின் அடிப்படையில் எளிய மனிதர்களின் இயல்பான ஓர் கொண்டாட்டத்திற்கான நாளாகவே தீபாவளியைப் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறன். மிகப்பெரிய வணிக குழுமங்களின் வியாபார நெடி இந்த பண்டிகை கொண்டடாடங்களின் ஊடாகப் பரவி இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் நான் குறிப்பது அத்தகைய கொண்டாட்டத்தை அல்ல. இவ்விதமான சின்ன சின்ன கொண்டாட்டங்களும் இல்லாமல் போனால் மனிதன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள வாய்ப்பு என்பதே சிறிதும் இன்றி மேலும் நெக்குருகி போவான் என்பதே யதார்த்தம். தொடர் அழுத்தங்களின் பிரதியாகவே அவன் வாழ்வு மாறிப் போகும். எனவே, எளிய மக்களின் கொண்டாட்டங்களை வரவேற்போம். நாமும் கொண்டாடுவோம்.




சித்தாந்தத்தின் பெயரால் மனிதனின் கொண்டாட்டங்களை புறக்கணிப்பதும், அலட்சியப்படுத்துவதும் கூட பகுத்தறிவு ஆகாது.

நாம் கொண்டாடவில்லை என்றால் கூட பரவாயில்லை, அடுத்தவர்களின் கொண்டாட்டத்திற்கு தடைக்கற்களாக நமது வாதங்களை கொஞ்சம் அடுக்காமலாவது இருப்போமே.

   °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நண்பர்கள், தோழர்கள், சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

களைக்கட்டட்டும் கொண்டாட்டங்கள்...