10/11/15

தீபாவளி - ஒரு குறிப்பு



 முதலில் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!








தீபாவளி மதரீதியில் அனுசரிக்கப்படும் ஒரு பண்டிகை, மூடவழக்கங்கள் நிறைந்து நிற்கும் ஓர் நிகழ்வு, தேவையில்லாமல் காசை கரியாக்க வாய்க்கும் சந்தர்பம். இதுதான் தீபாவளி குறித்த எனது உடனடி மதிப்பீடு. ஆனால் இப்போது அல்ல, ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்பு.







இதனிடையில் முற்போக்கு இலக்கியங்களின் வழி, பகுத்தறிவு சார்ந்த அதீத தர்க்க உண்ர்வும் இந்நிலையை மேலும் என்னுள் கூர்தீட்டியது என்றே சொல்ல வேண்டும்.


கடவுள் மறுப்பு என்பது கடவுள் மறுப்பு மட்டுமே அல்ல, அதன் நீட்சியான மனித தன்மையற்ற வழக்கங்களின், மூடத்தனமான நடைமுறைகளுக்கான மறுப்பு தான், அதன் முழுமையான பொருள். வரலாற்றில், பெரியார் நம் காலத்தில் என இல்லாமல் பல்வேறு காலக் கட்டங்களிலும் தொடர்ந்து தப்பாகவே புரிந்து கொள்ளப்பட்ட, தவறாக interpret செய்யப்பட்ட (செய்யப் பட்டு வரும்) ஒரு நபர் என்பது என் கணிப்பு. பெரியார் என்றவுடன் கடவுள் எதிர்ப்பு (மறுப்பு கூட அல்ல), பிள்ளையார் சிலை உடைப்பு(அதுவும் முழுமையான உண்மை அல்ல)  என்பது மட்டுமே பலருக்கும் நினைவில் உதிப்பதிலிருந்தே இக்கூற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொள்ளலாம். ஆனால், தனது ஆத்ம நண்பர் ராஜாஜி வீட்டிற்கு வரும் பொழுது எல்லாம், விபூதி தட்டை ஏந்தி நிற்பவர் தான் பெரியார். அவர் மட்டுமல்ல, இறை நம்பிக்கை உள்ள யாவரையும் கூட பெரியார் மதித்தே அன்பு செலுத்தி வந்தார். ஆனால், பெரியாரை கோடிட்டுக் காட்டுகிற நம்மில் எத்தனை பேர் அத்தகைய சகிப்புத் தன்மையுடன் இன்று இருந்து வருகிறோம். வெறுப்பு என்பது இருமுனை உள்ள ஈட்டிப் போல வளர்ந்து வருவதை எத்தனை பேர் உணர்ந்துள்ளோம்?..




இந்தியா பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு பண்பாட்டு அடையாளங்கள் கொண்டோரின் தொடர்ச்சியான உரையாடல் களமாக இருந்து வரும் ஓர் மாபெரும் நிலப்பரப்பு. இங்கே யாரும் யாருடைய நம்பிக்கைகளையும், அபிலாசைகளையும் துவேஷிப்பது வரலாற்றில் மதிப்பளிக்க கூடியதாக இருந்ததில்லை. பல்வேறு தத்துவங்களும் அனாயசமாக அதனதன் போக்கில் தனித்துவத்தை இழக்காது விரவி இருந்த இடம்தான் இந்தியா எனும் துணைக்கண்டம். அப்படியான தத்துவங்களில் வரலாறெங்கும் எப்போதும் இருந்து வந்த ஓர் தத்துவம் தான் நாத்திகமும். இந்தியாவில் நாத்திக வாதம் எங்கிருந்தும் திடிரென புதிதாக எழுந்து வந்து குதித்து விடவில்லை. இறை ஏற்பு பெரிதும் பெருகி இருந்த காலங்களில் எல்லாம் கூடவே இறை மறுப்பும் இருந்தே தான் வந்துள்ளன. அதுதான் நமது மரபு.  நமது வரலாற்றில் எல்லாவற்றிற்கும் இடம் இருந்தே தான் வந்துள்ளன. தத்துவரீதியிலான இத்தகைய விசாரனைகள், பிற்காலத்தில் உருவ வழிபாடு, சகிப்பின்மைக்கு எதிராக வளர்ச்சி அடைந்த போக்கு தான் மார்க்கமாக உருப்பெற்ற புத்தம், ஜெயினம் எல்லாம். என்னளவில் புத்தரையே இந்தியாவின் முதன்மையான பகுத்தறிவுவாதி என்பேன். வேத மறுப்பில் தொடங்கியது அவரது முற்போக்கு. இப்படி தான் இருந்து வந்துள்ளது நமது பண்பாட்டு தொடர்ச்சி.




ஆனால் அத்தகைய சகிப்பு தன்மை மிகுந்த  நிலை இன்று கேள்விக் குள்ளாகி இருப்பதுதான் நமது காலத்தின் பெரும் அவலம். சகிப்பின்மை என்பது இன்றைய இணைய வெளியின் டாப் ட்ரெண்டிங்காக மட்டும் அல்ல, நமது அவலத்தின் ஒரு சின்னம். ஆத்திகர்களிடம் என்று மட்டுமல்ல, நாத்திகர்களிடமும் சகிப்புத்தன்மை குறித்த புரிதல் அருகி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.




அத்தகைய ஓர் சிக்கலான குழப்பத்திற்கு தான் வழியாகிப் போகிறது, "நாத்திகம் பேசுவோர் தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்லலாமா என்னும் கேள்வி.




இதற்கு எளிமையான பதில்,

"சொல்லலாம்".




                  தர்க்கரீதியாக இதை விளக்க வேண்டுமானால்




* முதலில் தீபாவளி இந்து பண்டிகை அல்ல, சமணர் பண்டிகை.




* பக்தி மறுமலர்ச்சி காலத்திற்கு முன்னரே வைணவ, சைவ சமயங்கள் பிற சமய நம்பிக்கைகள், பண்டிகை மட்டும் வழக்கங்களை சுவீகரித்து கொள்ளத் தொடங்கி விட்டது.




* இங்கே கூறப்படும் "நரகாசுரன்" கதை எல்லாம் பின்னாளில் புனையப்பட்ட ஒன்று. வடநாட்டு பகுதிகளிலும் இதுபோல பல கதைகள் உண்டு. காலத்திற்கு ஏற்ப அவை மாறியுள்ளன.




* இதற்கு மிகச்சிறந்த உதாரணம், புத்தத்தின் புனித நிறமாக கருதப்படும் காவி நிறத்தை, தங்களது மத அடையாளமாக மாற்றி இப்போது ஹிந்துத்துவ வாதிகள் "கறை" படுத்தியுள்ளனரே அதைப்போல.




(புத்தரை விஷ்ணுவின் இன்னொரு அவதாரமாக மத அடிப்படைவாதிகள் தொடர்நது கூறி வருவதை நினைவுபடுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன்)




* மேலும் ஓர் உதாரணமாக புலால்- அதாவது இறைச்சி- உண்ணாமையை சொல்லலாம். சைவர்களாகட்டும் வைணவர்களாகட்டும் ஆதியில் யாகத்திற்காக குதிரைகளை பலியிட்டவர்கள் தான் என்பதை மறந்திடக் கூடாது.




* விஜயநகர பேரரசுக்கு முன்னர் இந்நிகழ்வு மிகப்பெரும் அளவில் கொண்டாடப்பட்டதில்லை. பட்டாசு வெடிக்கும் பழக்கம் கூட அண்மையில் சீனாவிடமிருந்து கடன் வாங்கியது தான்.




–மேலும் உபரித்தகவலாக, அடிப்படைவாதிகள் சமீப காலமாக அதிக வெறுப்புடன் குறிவைத்து தாக்கி வருவது, மன்னர் அசோகர். ஏனெனில் இந்திய வரலாற்றில் அவருடைய இடம் தவிர்க்க முடியாதது. அந்த வரலாற்று நாயகனை தங்களுடைய சுய லாபங்களுக்காக வெவ்வேறு வகைகளில் திரித்துக் கூறும் வேளையை இப்போது மும்முரமாக்கி உள்ளனர். அதனொரு பகுதிதான் பிகார் தேர்தலில் அசோகர் புஷ்ப்பக(இந்த தொணியில் தான் இருக்கும்) விமானத்தை வைத்திருந்தார் என்னும் பொய்ப் பிரச்சாரம். அவர் பௌத்த மதத்தை தழுவியவர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.




     --------------------------




சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். தீபாவளி என்பது இந்துப் பண்டிகை அல்ல, இந்தியாவின் பண்டிகை. இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும், தொடர்ந்து கொண்டாடி வந்த, இன்றும் கொண்டாடி வரும் ஓர் பண்டிகை. சிறுவயதில் இருந்து சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதியிலேயே வளர்ந்து வந்தவன் நான், ஆனால் ஒருபோதும் தீபாவளி கொண்டாட்டங்களில் எங்களிடம் இருந்து அவர்கள் விலகி நின்றது இல்லை.  ஒட்டுமொத்த மக்களும் குதூகலத்துடன் லயிக்கும் ஒரு தருணம் அது. ஆம், இந்தியாவின் கொண்டாட்ட மனநிலையின் ஒரு பெருநிகழ்வாகவே தீபாவளியைப் பார்க்கிறேன். நிலையற்ற வாழ்கையை பாரதூரமாக கடக்கும் நிலையிலேயே இன்றையகால மனிதன் இருந்து வருகிறான். அதுவும் இன்றைய சூழல், அடிப்படை தேவைகளும் பூர்த்தியடையாத, மேலும் பொருளாதார தேவைகளால் வாழ்க்கை நெருக்கடிகளை சமாளிப்பதே பெரும் பிரயத்தனம் என ஆகிவிட்டது. அத்தகைய யதார்த்தத்தின் அடிப்படையில் எளிய மனிதர்களின் இயல்பான ஓர் கொண்டாட்டத்திற்கான நாளாகவே தீபாவளியைப் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறன். மிகப்பெரிய வணிக குழுமங்களின் வியாபார நெடி இந்த பண்டிகை கொண்டடாடங்களின் ஊடாகப் பரவி இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் நான் குறிப்பது அத்தகைய கொண்டாட்டத்தை அல்ல. இவ்விதமான சின்ன சின்ன கொண்டாட்டங்களும் இல்லாமல் போனால் மனிதன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள வாய்ப்பு என்பதே சிறிதும் இன்றி மேலும் நெக்குருகி போவான் என்பதே யதார்த்தம். தொடர் அழுத்தங்களின் பிரதியாகவே அவன் வாழ்வு மாறிப் போகும். எனவே, எளிய மக்களின் கொண்டாட்டங்களை வரவேற்போம். நாமும் கொண்டாடுவோம்.




சித்தாந்தத்தின் பெயரால் மனிதனின் கொண்டாட்டங்களை புறக்கணிப்பதும், அலட்சியப்படுத்துவதும் கூட பகுத்தறிவு ஆகாது.

நாம் கொண்டாடவில்லை என்றால் கூட பரவாயில்லை, அடுத்தவர்களின் கொண்டாட்டத்திற்கு தடைக்கற்களாக நமது வாதங்களை கொஞ்சம் அடுக்காமலாவது இருப்போமே.

   °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நண்பர்கள், தோழர்கள், சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

களைக்கட்டட்டும் கொண்டாட்டங்கள்...

7/10/15

நயன்தாரா சாகலின் கடிதம்



நயன்தாரா சாகல்- புகழ்பெற்ற எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் சகோதரி மகளுமான இவர் தனது நேரடியான, வெளிப்படையான அரசியல் கருத்துக்களால் அறியப்பட்டவர். இந்திரா காந்தி அமலாக்கிய அவசர நிலைக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்த இவர், அண்மைக் காலமாக பண்பாடுட்டுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உள்ளார்ந்த தொடர்பு குறித்தும் பேசி வந்துள்ளார்.











இன்று அக்டோபர் 6, 2015- இந்திய பண்பாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் தோல்வியுற்ற அரசைக் கண்டித்தும், ஆளும் ஹிந்துத்துவ சித்தாந்தத்திற்கு மாறான மாற்றுக் கருத்தாளர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், அதற்கெதிரான போராட்டமாக 1986’ம் ஆண்டு தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார். அவருடைய அறிக்கை பின்வருமாறு :




                                    பிளவுபடுத்தப்படும் இந்தியா




தனது சமீபத்திய உரையில், இந்திய துணைக் குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து இந்தியர்களுக்கும் “கருத்து, வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டிற்கான முழு சுதந்திரத்தையும்” உறுதியளித்துள்ளது என்பதை நமக்கு நினைவுபடுத்துவது தேவை என கருதியிருக்கிறார். அதற்கு காரணமேதும் இல்லாமல் இல்லை.






ஏனெனில் இந்திய பண்பாட்டின் பன்முகத் தன்மையும், அது சார்ந்த விவாதங்களும் கொடூரமான தாக்குதலுக்கு தற்போது ஆளாகி வருகின்றது.



மூடத்தனத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவாளரனாலும், இந்து மதத்தின் ஆபாசமும், ஆபத்தும் நிரம்பிய பகுதியான ஹிந்துத்துவாவின் ஏதேனும் ஒரு அம்சத்தை கேள்விக்கு உட்படுத்தும் யாராயினும் – அது அறிவுத் தளமாயினும், கலைத்துறையாயினும் சரி அல்லது உணவு பழக்கத்தை பற்றியதானாலும், வாழ்கை முறையைப் பற்றியதானாலும் சரி – ஒதுக்கப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.

தனித்துவமிக்க கன்னட எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான எம்.எம்.கல்புர்கி, மஹாராஷ்டிராவை சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என மூடத்தனத்தனங்களுக்கு எதிரான செயல்பாட்டாளர்களான மூவரும் துப்பாக்கிகளுக்கு இரையாகியுள்ளனர்.

மேலும் பலர் “அடுத்து அவர்கள்தான்” எனும் அச்சத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். மிகச் சமீபமாக, டெல்லிக்கு வெளியே பிசாரா எனும் கிராமத்தில், மொஹம்மத் அக்லக் எனும் அந்தக் கிராம கொல்லர், தனது வீட்டில் மாட்டுக் கறி சமைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தால், விசாரனையின்றி மூர்க்கமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.


இந்த எல்லா வழக்குகளிலும், நீதி தன் நிலை தவறி விட்டது. இத்தகைய தொடர்ச்சியான பயங்கர செயல்கள் குறித்து பிரதமரும் அமைதி காத்து வருகிறார். அவரது சித்தாந்தத்தை ஆதரிப்போரில் இத்தகைய தீய செயல் புரிவோரை அவர் விலக்கி விடப் போவதில்லை என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

எனினும், துக்கமளிக்க கூடிய விஷயமென்பது சாகித்ய அகாடமியின் மௌனம் தான். இந்த அமைப்பு நிறுவப்பட்டதே, படைப்பாக்கத்தின் பாதுகாவலராக செயல்படவும், கலை,இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றின் சிறந்த படைப்புகளை ஊக்கப் படுத்துவதற்காகவுமே ஆகும்.


கல்புர்கி கொலைக்கு எதிரான போராட்டத்தில் ஹிந்தி எழுத்தாளர், உதய் சங்கர் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆறு கன்னட எழுத்தாளர்களும் தங்களது விருதுகளை கன்னட சாகித்ய பரிஷத்திடம் திருப்பி அளித்துள்ளனர்.

கொலையுண்ட இந்தியர்களின் நினைவாகவும், கருத்துரிமைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து இந்தியர்களுக்காகவும், அச்சத்திலும் நிலையாமையிலும் வாழ்ந்து வரும் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் ஆதரவாக, நான் எனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கிறேன்.

- நயன்தாரா சாகல் 

***


19/8/15

புனைவன்பு



மழைக்காற்றின் முணுமுணுப்பில் இருந்து
அவனால் விலக முடியவில்லை.
கொடும் மிருகங்களின் கூரிய பற்கள்
அவன் சமநிலையை குலைத்தப் படியிருந்தன.
தனித்து திரவக் கடலின் ஆழத்தில்
மூழ்கிய அவன், பின் மீண்டு
பாறைகளுக்கு அடியே 
இருண்ட இடுக்குக்களின் இடையில்
தேங்கிய நீரினுள் தவளைகள் புரிந்துவந்த தவத்தை
வியந்தபடி நடந்தான்.

முடியாத அவன் வானத்தின்
கடைசி கருநிற நிழலின் ஓரத்தில் பூத்த
மலரின் மெல்லிய நுனியிலும்
அவன் காதலின் பிசுபிசுப்பு குறையாதிருந்ததை நினைத்து
நாம் வியப்பதற்கு ஒன்றுமில்லை தான்.




கபிலன் இல (KABILAN C L).

17/08/2015 23.13

கோவை.

23/7/15

இந்திய நடுத்தர வர்க்கம்? உடையும் பிம்பம்

கட்டுரை: ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்
தமிழில் :  கபிலன். இல




 

இந்தியா போன்றதொரு பரந்துபட்ட மிகப்பெரிய நாட்டில் "நடுத்தரம்" என்ற வார்த்தையே கூட பொருத்தமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நம்மில் பலரும் ‘நடுத்தர-வர்க்கம்’ என நம்மை தொடர்ந்து அடையாளப்படுத்தி வந்திருக்கிறோம். உண்மை நிலை குறித்த பிரக்ஞையற்றும், இந்தியாவின் ஒட்டுமொத்த நிலையை கணக்கிலெடுக்காமலும் நாம் தொடர்ந்து வைத்து வரும் வாதம் "நாம் நடுத்தர வர்க்கம்"

எனில், இத்தகைய பொருத்தமற்ற வாதங்களை பியூவ் ஆராய்ச்சி மையம்(Pew Research Center) இப்போது நொறுக்கி உள்ளது. "இந்தியாவின் வளர்ந்துவரும் நடுத்தர-வர்க்கம்" என்னும் கட்டுக்கதைகளுக்கும் நடைமுறை எதார்த்தத்துக்கும் இடையிலுள்ள வெளியை வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. சரி, உண்மை நிலை என்ன?, ஆம், இந்தியா, முன் எப்போதும் போல, அதே துக்ககரமான ஏழை நாடுதான்.


உலகளவில் ஏற்பட்ட வருமான விகிதத்தின் சரிவை ஆராய விழைந்த பியூவ் ஆராய்ச்சி மைய ஆய்வின் விளைவு, "இந்தியாவின் மகத்தான நடுத்தர-வர்க்கம்" எனப் மிகப்பெரிய அளவில் தலைப்புச் செய்தியாக செய்திதாள்களில் கோடிட்டு வந்த ஆங்கில ஊடகத்தினரை விழித்து கொள்ளச் செய்துள்ளது.


உலக மக்கள் தொகையில் மாறிவரும் வருமான விகிதத்தை ஆராய்ந்த இந்த ஆய்வு, 2000'ம் ஆண்டின் முதல் பத்தாண்டுகளில் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில், வியப்பூட்டும் விதத்தில் ஏழ்மை குறைப்பு நடந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இவையனைத்தையும் கடந்து பார்த்தால், நடுத்தர-வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை என்பது, 15 சதவீதத்திற்கும் குறைவு தான்.


இந்த ஆய்வு, அன்றாட குடும்ப- வருமான அடிப்படையில் மக்கள் தொகையை ஐந்து வகையாக பிரிக்கிறது. இதில் ஆரம்பநிலை என்பது பல்வேறு விஷயங்களுக்கு உட்பட்டது, உலக அளவில் ஒருநாள் வருமானம் 2($) டாலருக்கு (இந்திய மதிப்பில் இது 127.40₹) கீழ் இருந்தால், அவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். 2 டாலர் முதல் 10டாலர் வரை சம்பாதிப்போர், குறைந்த-வருமானப் பிரிவினர். இதே அளவீடுகளின் படி, நடுத்தர-வர்க்கம் என்பவர் நாளொன்றுக்கு 10 டாலர் முதல் 20 டாலர் வரை சம்பாதிப்பவர் ஆகும். (இந்த அளவீடே கூட எவ்வளவு குறைவானது என்பதை அமெரிக்காவைப் பொருத்திப் பார்த்தால் புரிந்துக் கொள்ளலாம். அமெரிக்காவின் வறுமை-கோட்டில் உள்ள மக்களின் வருமானமே $16. நமது அளவுகோளில் இந்த வருமானம் நடுத்தர-வர்க்கத்திற்கு பொருந்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது).


இந்தியாவில் உருவாகியுள்ள இந்தச் சரிவை, கொடுக்கப்பட்ட கணக்கீடுகளின் படி உற்றுப் பார்த்தால், இந்தியாவில் இதுவரை கொண்டாடப்பட்டு வந்த நடுத்தர-வர்க்கம் எங்கே எனும் ஆச்சரியம் உங்களுக்கு எழலாம்.




120 கோடி இந்திய மக்களில், 95 சதவிகிதத்தினருக்கும் மேலானவர்கள் ஏழைகள் மற்றும் குறைந்த-வருமானம் பெறுபவர்கள். இதே நிலை உலகளவில் 71 சதவிகிதம். இதுநாள்வரை சொல்லப்பட்டு வந்த அந்த "நடுத்தர-வருமான" இந்தியர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எவ்வளவு ஏமாற்றமளிக்கக் கூடியது என்றால் உலகளவில் இதுவே 13 சதவீதம்.


இந்த ஆய்வறிக்கை, “இருப்பினும் இந்தியாவின் வறுமை விகிதம் 2001'இல் 35% இருந்தது 2011'ல் 20% ஆக குறைந்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் “நடுத்தர-வருமானம்” ஈட்டுவோரின் பங்களிப்பு என்பது 1'ல் இருந்து 3 சதவீதமாக உயர்ந்துள்ளது”. மேலும் தொடர்கையில், “வளர்ந்து வந்திருக்க வேண்டிய நடுத்தர வர்க்கத்திற்கு பதிலாக இந்தியா, குறைந்த வருவாய் உள்ளோரின் தொகையில் வீக்கம் கண்டுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் 2 முதல் 10 டாலர் என்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதன்படி மக்கள், நடுத்தர- வருமான நிலை என்பதை அடைய நெடுந் தூரம் செல்ல வேண்டும்” என்கிறது.

                 


மேலே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின் படி, ஏழ்மை நிலையிலிருந்து வெளியேறிய அதிகப்படியான இந்தியர்கள், பெருவாரியாக "குறைந்த-வருமானம்" பிரிவினுள் தான் தஞ்சம் புகுந்துள்ளனர், அதே நேரம் உயர்தர வர்க்கத்தை நோக்கிய அவர்களது பயணம் என்பதும் மிக மிகக் குறைந்த அளவிலேயே நடந்துள்ளது. தெளிவாக பெரும்பாலான இந்தியர்கள் உயர் வாழ்க்கை தரத்திற்கு அப்பால் உள்ளனர், அண்டை நாடான சீனாவால் முழுதும் மறைக்கப் பட்டுள்ளனர், சீனாவில் மத்திய வர்க்கத்தின் வருமான உயர்வு என்பது 2001'ல் 3 சதவீதத்தில் இருந்து, 2011'ல் 18% ஆக ஆகியுள்ளது முக்கியமானது.


இதில் வியத்தகு முரண் எதுவென்றால், தங்களை நடுத்தர-வர்க்கம் என அழைத்துக் கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை தான். நடுத்தர-வர்க்கமும், நடுத்தர வருமானமும் ஒன்றல்ல என்பதைப்போலவே, இரண்டுக்கும்- ஒன்றின் மேல் ஒன்றாக- நியாயமான இடைவெளி அவசியம். இந்திய மேம்பட்ட ஆய்வு மையத்தின் பல-ஆண்டு குழு கணக்கெடுப்பின் அடிப்படையில் தேவேஷ் கபூர் மற்றும் மிலன் வைஷ்ணவ்-இருவராலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பாதிக்கும் மேலான இந்தியர்கள்- நகர, ஊரக, குறைவருமான, உயர் வருமான(எல்லா பிரிவினரும்)- தங்களை "நடுத்தர வர்க்கத்தினர்" என்றே அடையாளப் படுத்திக் கொள்கின்றனர், என தெரிவிக்கிறது.


பியூவ் ஆராய்ச்சி ஆய்வின் முடிவு, ‘நடுத்தர-வர்க்கம்’ பற்றிய பரவலான, தெளிவற்ற வரையறைகளில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக் காட்டுகிறது. இருப்பினும், இந்தியாவின் மிகப்பெரிய நடுத்தர வர்க்கத்தை பற்றி தொடர்ந்துக் கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம், இந்தச் சிக்கல் அனேக இந்தியர்கள் தங்களை "நடுத்தரம்" எனக் கருதிக் கொள்வதால் தான் உருவாகிறது. ஆனால் உண்மை நிலை முற்றிலும் வேறானது. மிகக் குறுகிய எண்ணிக்கை-யினரே, 'நடுத்தர-வருமான' நிலைக்கு இங்கு தகுதியடைந்துள்ளனர். மேலும் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளுக்கும் - வளரும் நாடுகளுக்குமான வாழ்கை-தர இடைவெளி என்பது குறைந்தபாடில்லை.


அறிக்கை இவ்வாறு முடிகிறது, "வரலாற்றுபூர்வமான, உலகளாவிய ஏழ்மை குறைப்பை, இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தம் கண்டது, ஒட்டுமொத்த மக்கள் தொகை இரட்டிப்பு வீதத்தில் நடுத்தர வர்க்கம் ஆகும் எனவும் கருதப்பட்டது. ஆனால், உலகளவில் நடுத்தர வர்க்க எழுச்சி என்பது எதார்த்தத்தை எட்டாத வாக்குறுதியாகவே இன்றும் நீடிக்கிறது”.








(ஜூலை 10'ம் தேதி Scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரை)










11/6/15

யார் நீருக்கான உரிமை பெற்றவர்கள்? - அமெரிக்காவில் தொடரும் இனவாத கொடூரம்








கட்டுரையாளர்: பிரிட் பென்னட்ட் ( BRITT BENNETT) 10,June 2015
தமிழில் : கபிலன்.இல




1948'ம் ஆண்டு, தனது சகாக்களான தீக்ஸ்க்ராட்ஸ்(Dixicrats) இடையே உரையாற்றுகையில் ஸ்ட்ரோம் தர்மொண்ட் இவ்வாறு குறிப்பிட்டார், "அமெரிக்க ராணுவம் தெற்கத்திய வெள்ளையர்களான எங்களை, கருப்பின மக்களை ‘எங்கள் திரையரங்கினுள்ளோ, எங்கள் நீச்சல் குளத்தினுள்ளோ, எங்கள் வீடுகளினுள்ளோ, எங்கள் தேவாலயங்களினுள்ளோ’ அனுமதிக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது".


நீச்சல் குளங்களை இனப் பாகுபாடுகளுக்கான போர்க்களமாக அவர் எடுத்துக் கொண்டதை எண்ணி பலமுறை நான் பாதிப்பு அடைந்ததுண்டு, அத்தகையதோர் உணர்வு தேவை தேவையற்றிருந்த போதும். அனைத்துக்கும் பிறகு, பெரும் செல்வாக்கு செலுத்திய ஜிம் க்ரோவின்(Jim crow) பெரும்பாலான அடையாளங்களில் முக்கியமாக "நீர்"ம் அடக்கம், அது ஒதுக்கப்பட்ட நீறூற்றுக்கள், கழிப்பிடங்களிலிருந்து, நிச்சல்குளம் மற்றும் கடற்கரை வரை.


வெள்ளிக்கிழமையன்று, டெக்சாஸ் மாகாணத்தில் மெக்கின்னியில் நடைபெற்ற நீச்சல் குளக் கேளிக்கை பற்றிய யூடியூப் காணொளியில், ஓர் வெள்ளை போலிஸ் அதிகாரி, ஆர்ப்பரித்தும், அருகிலிருந்தோரை கைவிலங்கிட்டும், கருப்பின இளைஞர்களை நோக்கித் துப்பாக்கியை நீட்டி மெரட்டியும் காட்சித் தருகிறார். ஒரு கருப்பின பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுக்கிறார், பின் அப்பெண்ணை தரையில் தள்ளுகிறார். அந்த பெண் அலறிக் கூச்சலிடும்போது, தன் முழுங்காலை அப்பெண்ணின் முதுகில் வைத்து அழுத்துகிறார். மெக்கின்னி காவல்துறையை பொருத்தவரை இச்செயல், "அங்கு வாழாத அல்லது அங்கு இருப்பதற்கு அனுமதியற்ற சில சிறார்களால் எழுந்த "தொந்தரவுகளுக்களை" தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை.


இச்சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டதும் அந்த அதிகாரி ராஜினாமா செய்துள்ளார், அவர்மேல் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. கேளிக்கை நிகழ்வில் கலந்துகொண்ட கருப்பின இளைஞர்கள் அங்குள்ள செய்தியாளர்களிடம் போலீஸ் வருவதற்கு முன்பான நிகழ்வுகளை விளக்கியுள்ளனர், அதில் அங்குள்ள வெள்ளையின பெரியவர்கள் அவர்களை அணுகி கருப்பின குழந்தைகள் குளங்களை விட்டு வெளியேறுமாறும், தங்களது "பிரிவு 8 குடியிருப்பிற்கே" திரும்பும்மாறும் கூறியதாக தெரிவித்தனர்.




தாக்குதலில் ஈடுபடும் காவலாளி 

காவல்துறையால் தாக்கப்பட்ட பெண் 

  அதற்குபிறகு, இச்சம்பவம் பூதாகரமாகி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்ததும், உள்ளூர் செய்தியாளர் ஒருவர் அங்குள்ள நீச்சல் குளத்திற்கு முன் ஒட்டப்பட்டிருந்தத , "எங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நன்றி மெக்கின்னி காவல்துறை" எனும் சுவரொட்டியின் படத்தை பகிர்ந்திருந்தார். ஆயுதமேதுமற்ற இளைஞர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டும் அதிகாரியின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு சமூகத்தில், நீச்சல் குளத்தில் குளிக்க வந்த கருப்பின குழந்தைகளால் என்ன ஆபத்து விளைந்துவிடப் போகிறது?

அப்பகுதியுனுள் எழுதி வைக்கப்பட்டு இருந்த பதாகை 





நமக்கு இன்னும், அல்லது என்றும் கூட, அந்தக் குறிப்பிட்ட நீச்சல் குளத்தில் துல்லியமாக என்ன நடந்தது என்று தெரியாதிருக்கலாம், ஆனால் நீச்சல் உடையிலிருந்த கருப்ப்ன குழந்தைகள் மீதான அந்த அதிகாரியின் முரட்டுத்தனமான வெளிப்பாட்டால் நீருக்கான உரிமை மற்றும் அணுகல் யாருக்கு உரிமையுடையது; உரிமையற்றது குறித்து நடந்த நீண்ட நெடும் போராட்டத்தை நினைவுப் படுத்துகிறது.



இனவாதப் பதட்டத்துக்கான இடமாகவே நீர் நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒருங்கிணைக்கப் பட்ட நகரக் குளங்கள் பல கலவரங்களுக்கு வழிவகுத்துள்ளது, 1931'ல் நடந்ததைப் போல. அப்போது போலிஸ் அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருக்கம் போதே, நீரினுள் இருந்த பிட்ஸ்பர்க்கின் கருப்பின ஆண், வெளியே இழுத்துவரப்பட்டு, வெள்ளையின நீந்துவோர்களால் அடிக்கப் பட்டான். மிஸிஸிப்பின் ஒருங்கிணைவுக்கு முந்தைய அடித்தள-களமாக விளங்கியது ஒதுக்கப்பட்ட கடற்கரைகள் தான். நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் தங்கள் துக்கத்தை வெளிப் படுத்த நடைபயணம் சென்றபோது, நீளக் குச்சிகளாலும், ஈயக் குழாய்களாலும், சங்கிலியாலும் ஓர் வெள்ளை கும்பலால் தாக்கப் பட்டனர். அந்த தாக்குதல் செய்தி நிறுவனங்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிடும் போது "மிஸிஸிப்பி வரலாற்றில் நடந்த மிக மோசமான இனவாத கலகம்" எனப் பதிவு செய்தது.









ஒதுக்கப்பட்ட தண்ணீர் என்பது வெறும் தெற்கத்திய பாரம்பரியம் மட்டும் அல்ல. கலிஃபோர்னியாவில், "வெள்ளையர்க்கு மட்டுமே"யான உணவகங்களில், பள்ளிகளில், நீச்சல் வகுப்புகளில் மெக்ஸிக-அமெரிக்கர்களுக்கு இடமில்லை. 2010'ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்'கான நேர்காணலில், திரைப்பட இயக்குனர் சான்ரா ராபீ, ஆரஞ்சு நாடுகளின் சிவில் உரிமைக்களுக்கான வரலாற்றில் அவர் பார்த்த இடத்தில் இனப் பாகுபாடு எப்படி வளர்ந்து வருகிறது என விவரித்தார். "திங்கள்கிழமை மெக்ஸிகனுக்கானது", அவர் தொடர்ந்தார். "அதற்கு அடுத்த நாள் ஒட்டுமொத்த குளமும் வடித்து, சுத்தம் செய்யப் படும், எனவே அடுத்துவரும் வார நாட்களில் வெள்ளையர்கள் அதைப் பயன்படுத்த கூடியதாக இருக்கும்".



"போட்டியிட்ட தண்ணீர்: நீச்சல் குளங்களின் சமூக வரலாறு" எனும் தன் நூலில் ஜெஃப் விட்சே, ஒருங்கிணைக்கப் பட்ட நீச்சல் குளங்களால் உருவாக்கும் இனவாத உலைவுகள் இருவகையான பெரும் பதட்டத்தை உருவாகிறது: ஒன்று மாசு, மற்றொன்று இனக்கலப்பு என வாதிடுகிறார். முன்பெல்லாம் குளங்கள் வர்க்க வேறுபாடுகளால் தான் பிரிக்கப் பட்டிருந்தன, அங்கே வெள்ளை நடுத்தர வர்க்கத்தினர் புலம்பெயர் ஏழை ஐரோப்பியர்களுடன் நீச்சலை தவிர்த்தனர், அவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் என்று காரணம் அளித்தனர். பெரும் புலம்பெயர்வுக்குப் பிந்தைய சூழலில், இந்த "நோய்" பயம் இனவாதமாக மாற்றப் பட்டது, இப்போது அனைத்து சமூக அடுக்குகளைச் சேர்ந்த வெள்ளையர்களும் கருப்பினத்தவருடன் சேர்ந்து நீச்சலிட்டால் அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பயந்தனர். பிட்ஸ்பர்க்கில் 1930'ஆம் ஆண்டு, நகர நீச்சல் குளத்தில் இருந்த கருப்பினத்தவர் மட்டும் வெளியேற்றப் பட்டு, அவர்கள் நோயற்றவற்றவர்கள் நிரூபிக்கும் வகையில் "நலச் சான்றிதழ்" சமர்பிக்குமாறு ஆணையிடப்பட்டனர். வெள்ளையர்களுக்கு அந்த விதி பின்பற்றப்படவில்லை.


மேலும் இதுகுறித்து தன்னுடைய அழுத்தமான கவலையாக திரு. வில்ட்சே குறிப்பிட்டது, நகரக் குளங்களில் பெண்களையும் ஆண்களையும் ஒன்றாக நீச்சலடிக்க அனுமதிப்பது பற்றியது. "பொதுவாக வடகத்திய வெள்ளையர்கள்" அவர் எழுதினார். "வெள்ளை பெண்களுடன் அத்தகைய நெருக்கமான மற்றும் சிற்றின்ப பொதுவெளியில் கருப்பின ஆண்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை கொண்டுள்ளதால் எதிர்ப்பார்கள்"

.

பால்டிமாரில், பிரவுன்.V கல்விவாரிய ஆட்சியான 1954'ல், நகர வழக்குறைஞர், நீச்சல் குளங்களில் இன, நிறப் பாகுபாடு என்பது தொடரவேண்டும், ஏனெனில் "நீச்சல், ஆண்களையும் பெண்களையும் உடல்சார்ந்த, நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் உள்ளன" என வாதிட்டார். நீதிபதி ரோசல் தாம்சென் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, நகரக் குளங்களில் பாகுபாட்டை தொடர அனுமதித்து உத்தரவிட்டார். அது குறித்து அவர் விளக்கமளிக்கையில், திரு. வில்ட்சே, நீச்சல் குளங்கள் அது வழங்கும் பயனடைவோரின் நேரிடை மற்றும் சரீர தொடர்புகளால், அது "கல்விக் கூடங்களை விட முக்கியமானது" என்றும் குறிப்பிட்டார்.


வெள்ளை மேலாதிக்கவாத கற்பனைகளில், இந்தக் கவலைகள் எல்லாம் ஒற்றை எண்ணம் கொண்டவை தான். அது, பாகுபாடற்ற இன நெருக்கம் என்பது மாசுத்தன்மையுடையது. இனக்கலப்பு என்பது பாதிப்பை ஏற்படுத்த வல்லது.

நான் கடற்கரை நகரத்தில் தான் வளர்ந்தேன், ஆனால் என்னால் நீந்த முடியாது. என் பெற்றோர் என்னை சிறுவயதிலேயே நீச்சல் வகுப்பில் சேர்த்தனர். ஆனால் நான் அதில் ஒவ்வொரு பகுதியையும் வெறுத்தேன்: நீருக்குள் தலைமூழ்குவது ஆகட்டும், க்ளோரினை முகர்வது ஆகட்டும், தலைமுடியை நினைத்து கொள்வது ஆகட்டும். தண்ணீர் எனக்கு எப்போதும் இயற்கையானதும், அன்னியமானது மாகவே இருந்திருக்கிறது, ஆபத்தான தாகவும், தவிர்க்க முடியததாகவும்.


என் அம்மாவிற்கும் நீந்த தெரியாது. எனினும் ஓர் கோடையில் என்னையும் என் தங்கையையும் நீச்சல் வகுப்பிற்கு அனுப்புவது ஒன்றையே கடமையெனக் கொண்டிருந்தாள். அவள் தென்மேற்கு லூசியானவில் வளர்ந்தவள், அங்கே அருகாமை அனைத்தும்- நதிகளும், கல்ஃப் கடற்கரையும்- நீர்நிலைகள் தான்..அவள் ஒதுக்கப்பட்ட பள்ளிக்குத் தான் சென்றால், ஒதுக்கப்பட்ட தேவாலயங்களில் நடந்த ஒதுக்கப்பட்ட ஜபக்கூட்டங்களில் தான் கலந்து கொண்டாள். அந்த ஒதுக்கப்பட்ட தேவாலயத்தின் மயானத்தில் வெள்ளை மற்றும் கருப்ப ஒதுக்கப்பட்ட பிரேதங்கள் சாம்பலாய் தூர்ந்து காய்ந்திருந்தது. என் தாயும் ஒதுக்கப்பட்ட கடற்கரைக்குச் சென்றிருக்கிறாள். கட்டி எழுப்பப்பட்ட கட்டுமானங்களை பிரிப்பது புரிந்து கொள்ள முடிகிறது„ ஆனால் நீரை, சமுத்திரத்தை நீங்கள் எப்படி தனியாக பிரித்து ஒதுக்குவீர்கள்?



“இது முட்டாள்தனமானது”, என் தாயார் சொல்வார். "ஏனெனில் தண்ணீர் கலக்கும். எந்த திசையில் செல்ல வேண்டுமென்று தண்ணீரால் முடிவு செய்ய முடியாது".


பல தசாப்தங்களாக, வெள்ளை இன நீந்துவோர் கருப்பின மக்களுடன் நீச்சல் குளத்தை பங்கிட்டுக் கொள்ள பயந்தனர், அது தங்களை நோய் பயக்கும் என்னும் கவலையை தெரிவித்தனர், இருந்தும் தங்களது உணவை சமைக்கவும், குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் தாதியாகவும் கருப்பினத்தவரைத் தான் பணி அமர்த்தினர். திரு.தர்மொண்ட் இனக்கலப்பை எதிர்த்து பேரணி சென்றார், ஆனால் அவரது மறைவு பிறகு தான் அவருக்கும் அவரது வீட்டில் வேலை செய்த கருப்பின பெண்ணிற்கும் உண்டான உறவில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.



ஸ்டார்ம் தர்மௌண்ட்'ன் மகள் (வயதான மூதாட்டி) 



 
இனவாதத்துக்கும், நீருக்கும் ஓர் விநோத தொடர்பு இருந்தே வந்திருக்கிறது, பின்னது இதன் தவிர்க்க முடியாத நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
நீர் என்னை தொடுகிறது, பின் உன்னை தொடுகிறது.




"நியு யார்க் டைம்ஸில்" 10/06/15 புதனன்று வெளியான கட்டுரை.
New York Times c(Co-Ed) 10/06/15
(http://mobile.nytimes.com/2015/06/10/opinion/who-gets-to-go-to-the-pool.html?_r=1&referrer=)

11/4/15

மழலை வெளி -

வண்ணக் காகிதத்தில்
ஓவியம் வரைகிறாள் பாப்பா
முகில் நிறைந்த வானில்
மீனாக சிங்கத்தையும்
நாயாக கரடியையும்
பூனையாக புலியையும்
கோழியாக குதிரையையும்
தீட்டுகிறாள் பாப்பா
தீர்க்கமான அவள் உலகத்தில்
எங்கும் இல்லை மனிதர்கள்

கோவை                                         கபிலன் இல
11.04.2015
17.43 மணி 

11/3/15

தலைப்பு: உலகம் நம் உள்ளங் கைக்குள்! வாட்ஸ்ஆப், பேஸ்புக், நெட் என ஒரு மொபைல் இருந்தால் போதும். நாம் தனிமையை உணரவே மாட்டோம். செல்போனோடு நீங்கள் எந்த அளவு கன்னக்ட் ஆகி இருகிறீர்கள். உங்களின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் அது எப்படித் தீர்மனிக்கிறது என்பதை செம ஜாலியாக எழுதி அனுப்புங்களேன்.






உலகம் நம் உள்ளங்கைக்குள்'! உண்மைதான், ஆனால் இன்று நிலைமை மேலுமொரு படி முன்நகர்ந்து விட்டதாகவே உணர்கிறேன். ஆம், உலகம் நம் விரலிடுக்குகளில் அடங்கிவிட்டிருக்கிறது என்பதுதான் அது. மாற்றமடைந்து வரும்- மேலும் பல மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கும்-இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் நிகழலாம். இன்றைய தலைமுறையினருக்கு தொழில்நுட்பம் அப்படி தந்தது என்ன? தகவல் தொழில்நுட்ப புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? உலக நடப்புகளோடு நாம் நம்மை எவ்வாறு பினைத்துக் கொண்டுள்ளோம்?




நாங்கெல்லாம் அந்தக் காலத்துல'




பொதுவாகவே இங்கு கடந்த தலைமுறையை சேர்ந்தவர்களிடம், 'தொன்றுதொட்டு' இந்திய மரபாகவே கருதக் கூடியளவிற்கு ஒரு பழக்கமுண்டு, அது இன்றைய தலைமுறையினரிடம் தங்களது சுய (தலைமுறை) பெருமைகளை தம்பட்டம் அடித்துக் கொள்வது. எது எடுத்தாலும் அந்தக் காலத்தில் 'அது' நல்லாயிருந்தது, இந்தக் காலத்தில் 'இது'. நல்லாயில்லை 'பஜனை' தான். தலைவர் கவுண்டமணி காலத்திலிருந்தே கூட இவர்கள் இப்படித்தான். அதற்கு அப்பவே தலைவர் செம்மையான 'கவுண்டரும்' கொடுத்திருப்பார். ஆனால் இன்றும் - சந்தானம் தாண்டி சூரி காலம் வரையிலும்- இவர்களது அனுகுமுறையில் மாற்றமில்லாது தொடர்வது சற்றே கவலைக்குரிய(!) ஒன்றுதான்.




"ஒழுக்க" உபதேசங்கள்




ஒழுக்கத்துக்கும் தொழில்நுட்பத்திற்கும் 'முடிச்சு' போடுவதென்பது இங்கு காலங்காலமாக தொடர்ந்து அரங்கேறி வரும் ஒரு காமெடிதான். இது வந்தால், அது போய்விடும், அது வந்தால் இது போய்விடும் எனும் அடித்தளமற்ற பழமைவாத பிதற்றல்கள் ஓர் தொடர்கதையே. உதாரணத்திற்கு செல்போன் என்றதுமே, உடனே அதனால் ஏற்பட வாய்ப்பிருக்ககூடிய எதிர்மறையான விஷயங்களையே பட்டியலிடுவார்கள் 'பழமையிஸ்ட்கள்'. சாதகம், பாதகம் என்பது சகலத்திலும் உண்டு என்பதை சமயத்தில் வசதியாக மறந்துவிடுகிறார்கள். கம்ப்யூட்டர் வரத் துவங்கிய காலத்திலிருந்தே இவர்களுக்கு இதே 'புராணம் தான்'. அவ்வகையில் இந்தியாவில் 'பாதகப் பட்டியல்களே' புதிய தொழில்நுட்பத்திற்கான வரவேற்பு எனப் புரிந்துகொள்ளலாம்.




'தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கற்பிதங்கள்'


செல்போன் வந்ததிலிருந்தே நெடுநேரம் இனையத்தை பயன்படுத்துகிறான் என்பது முதல் குற்றச்சாட்டு. இணையம் என்பது எங்கோ எட்டாத தொலைவில் இருந்த காலம்போய், இன்று விரல் நுனிக்கு எட்டியிருப்பது, நிச்சயம் முன்னேற்றம் தான். முன்பெல்லாம் பல நூல்நிலையங்களில் தேடியும் கிடைத்திராத பல நூல்கள், இன்று கூகுள் செய்தால் PDF ஆகவும், 'கிண்டில்'லும் தாராளமாகக் கிடைக்கின்றன. இது அவனுக்கான குறிப்புகளை எடுக்கவும்,கல்விக்கும் பயன்படாதா?

இதை,எதையும் கணக்கிலெடுக்காது, மட்டையடியாக சிலர் இணையத்தினால் தான்,பாலியல் காணொளிகள், படங்கள் எனப் பார்த்து 'கெட்டுக் குட்டி சுவர்' ஆகிறார்கள் என 'சான்றிதழ்' அளிப்பார்கள். அவர்களிடம் கேட்க ஒன்றே ஒன்றுதான் உள்ளது. பாலியல் குறித்த(PORNOGRAPHY SITES) இணையதளங்கள் பெருமளவில் இன்று பெறுகியிருக்கிறது என்றாலும், இணையம் என்பது இதற்கு மட்டும்தான் பயன்படுகிறதா? செல்போன், இணையம் அதன் வரவு, வளர்ச்சி எல்லாம் ஒரு இருபது ஆண்டுகளாகத்தான், அதற்கு முன்பு இருந்தவர்க்கு எல்லாம் பாலியல் குறித்த எவ்வித புரிதலும் இல்லையா? அல்லது இணையம் வந்தபிறகுதான் பாலுறவு குறித்த அறிவே உதித்ததா? எந்த நாகரிகத்தில் வாழ்வபராயினும், ஓர் வயது முகிர்வுக்குப் பிறகு, எதிர் பாலினத்தவரின் மீதான பாலியல் ஈர்ப்பென்பது வெகு இயல்பானது,இயற்கையானதும் கூட. ஆதிகாலத்திலிருந்தே நிலைமை இதுதான்,அப்போது என்ன இணையமா இருந்தது.

அடுத்து மணிக்கணக்கில் பேஸ்புக், டிவிட்டர்ல மூழ்கிக்கிடக்கிறான் என்பது. இந்தக் கேள்விகள் எல்லாம் நிரூபணமில்லாத பொதுப் புத்தியில் இருந்து எழக்கூடியவை. வெற்றுப் பேச்சுகளுக்கும், வெறும் கேலி கிண்டலுக்கு மட்டும் இன்று சமூகவலைதளங்கள் பயன்படுத்த படுவதில்லை, மாற்றுச் சிந்தனைகளுக்கும் அது வழிகோல்கிறது. சமூக-அரசியல்-பொருளாதார தளத்திலான விவாதங்களும், விழிப்புணர்வு மிக்க பல உரையாடல்களும் அன்றாடம் சமூக வலைதளங்களில் நடைபெறாமல் இல்லை. அரபு நாட்டில் ஏற்பட்ட இணையப் புரட்சி அளவிற்கு இல்லையாயினும் இதுவும் ஒரு நல்ல தொடக்கம் தானே. அதுக்கெல்லாம் இன்னும் டைம் எடுக்கும் பாஸு.




எப்போதும் "தொடர்பு" எல்லைக்குள்


எதையும் கொண்டாட்ட மனநிலையுடன் பார்க்கும் தலைமுறை இன்றைய தலைமுறை. எதையும் எளிதாக எடுத்துக், கடந்து செல்லும் மனநிலை இன்றைய மனநிலை. இவ்வாறு மேலதிகமாக எப்போதும் கொண்டாட்டம் நிரம்பிய சூழலில் திளைத்திருந்தாலும் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இல்லாமல் இருப்பது இல்லை. அனு நிமிடமும் தன்னைக் குறித்த பிரக்ஞையுடனே இருக்கிறான். ஃபேஸ்புக், டிவிட்டர்,வாட்ஸ்ஆப் என இன்றைய இளைஞன் மிகவும் 'பிஸியானவன்'. வெளியில் இருந்து அட்வைஸ் பண்ணுபவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை தான். தன் நண்பர்கள் குறித்த அனைத்து விஷயங்களும் இன்று இணையம் மூலம் ஒருவனுக்கு அத்துப்படி. ஒருவிதத்தில் சமூக வலைதளங்கள் அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்தற்கான ஜன்னலாகவும் இருக்கிறது. பெரும்பாண்மையான நேரத்தை இணையம் விழுங்கி விடுவதை உணர்ந்தாலும், அதிலிருந்து தன்னை தனித்துக் கொள்ள இன்றைய இளைஞன் விரும்பவில்லை, அதை அவன் சமூகத்திலிருந்தே தன்னை அன்னியப் படுத்திக் கொள்வதாகவே உணர்கிறான். வெகு விரைவில் அத்தியாவசிய பட்டியலில், இணையமும் இணையலாம்.




தனிமையா?அப்படின்னா!




தனிமை என்பது என்றும் நிரந்தரமான ஒன்றல்ல, அவ்வப்போது நேரும் ஓர் நிகழ்வு, தனிமை ஓர் அடர்த்தியான உணர்வு, அதன் இருப்பு என்பது காலச் சூழலைப் பொருத்து தான். முன்புபோல தற்போது தனிமை ஆட்படுதலுக்கான சூழல் குறைவு. வலிந்து ஒருவர்மேல் தினிக்கப்பட்டால் தான் உண்டு. எதிலும் மனதை தேக்கிக் கொண்டு, வருந்தும் நிலை இன்று இல்லை. ஏனெனில் எங்கும் எவருடனும், எப்போதும் நாம் தொடர்பில் இருந்து கொண்டேதான் இருக்கிறோம், ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டுமல்ல, பலருடனும். முகநூலை திறந்தால் நேரம் போவதே தெரியாமல் பதிதாய் வாசிக்க ஆயிரமாயிரம் பதிவுகள் எப்போதும் இறைந்து கிடக்கின்றன. பத்தாததுக்கு நம் வீடுகளை எப்போதுமே ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கிறது தொ(ல்)லைகாட்சி, இதைத்தவிர ஒருபெரும் மக்கள் கூட்டத்தை எப்போதும் தன் கைக்குள் தொடர்ந்து வைத்தபடியே இயங்கி வருகிறது சினிமா என்னும் பிரமாண்ட ஊடகம். இதையெல்லாம் தாண்டி தான் தனிமை எனும் உணர்வு நிலைக்குள் பிரவேசிக்க இயலும் என்பதே இன்றைய எதார்த்தம்.




வாசிப்பற்ற இளைஞர் சமூகமா?




"இன்றைய இளைஞர்கள், புத்தகங்கள் வாசிப்பதில்லை". இது இன்று பெரும்பாண்மையானோரின்-குறிப்பாக படைப்புத் தளத்தில் உள்ளோரின்- கருத்தாக உள்ளது. இதை எங்கிருந்து (அ )எந்தக் கருதுகோளின் அளவில் முன் வைக்கிறார்கள், ஏதேனும் 'புள்ளி' விபரத் தகவலா எனத் தெரியவில்லை. ஆனால், அச்சுப் புத்தக/சந்தை பிரதிகளின் விற்பனையின்(எண்ணிக்கை) அடிப்படையில் தான் இக்கூற்று எழுகிறது எனப் புரிந்துகொள்ளலாம். இணையதள சேவை இளைஞர்களிடத்தில் பல்கிப் பெருகியுள்ள இன்றைய காலத்தில், 'புத்தக விற்பனையை' மட்டும் வைத்து 'வாசிப்பு இல்லை அல்லது குறைந்து வருகிறது' என முடிவுக்கு வரலாமா என தெரியவில்லை.

ஆனால் இன்றைய இளைஞர்கள் நிறைய வாசிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. அதுவும் முந்தைய காலங்களை விட அதிகமாக. பக்கங்கள் அளவில் அத்தியாயங்கள்/தலைப்பு அளவில் அவை கனக்கிலடங்காது. மெய்நிகர் வாசிப்பே இன்றைய பரவலான கட்டம். அச்சு புத்தகங்களாக வாங்கி, வாசிப்பது வேண்டுமானால் இன்று குறைந்திருக்கலாம். ஆனால் வாசிப்பு குறையவில்லை. அது வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாளடைவில் இனையத்தில் வாசிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தப்படியே தான் உள்ளது. சமூக வலைத்தளங்களில் வாசிப்பது எல்லாம் இங்கு எந்தக் கணக்கிலும் அடங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு ஒரு நாளைக்கு எத்தனை வார்த்தைகள்,வரிகள் வாசிப்பார்களோ, அதைவிட அதிகமாகத்தான் இன்று வாசிப்பின் நிலை இருக்கிறது, அதாவது உயர்ந்திருக்கிறது.




        "உலகம் என்றும் நம்மருகே"




உலகத்தோடு நாம் ஒருசேர இயங்க, நம்மை மேம்படுத்திக்கொள்ள, தொழில்நுட்பம் தான் உதவுகிறது. அது உலகத்தை நம் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டது. அதன் பல கூறுகள் வாழ்வில்,மறுக்கமுடியாதளவில் நீக்கமற நிறைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவில் நிகழ்த்திய மாற்றங்கள் ஏராளம். நாம் கற்பனை கூட செய்திராத பல சாகசங்களை அது நிகழ்த்தி உள்ளது. இந்த 21ஆம் நூற்றாண்டு மனிதர்களுக்கு அளித்த ஆகப்பெருங்கொடை நவீன கைப்பேசி. அது பெருங் கூரையின் கீழ் அனைத்து மக்களையும் இணைக்கிறது, நாடு, இனம்,தேசம் கடந்து.


(விகடன் மாணவர் பயிற்சி திட்டத்திற்கு அனுப்பியக் கட்டுரை)

14/2/15

கடந்து செல்லா காதல்....

கரைந்தோடும் நினைவுகளின் வழியே
கவிதை பாட, சொற்களைத் தேடுகிறேன்
என்றாவது ஒரு நாள்
சொற்கள் கிட்டலாம்
என் வலியை  உணர்த்தலாம்
எனில் உன் அன்பை போல
அதுவும் தற்காலிகமானதாக
இல்லாது இருத்தலே
போதுமானது
எனக்கு .

கண்களின் ஓரம்
கசிந்தோடும் கண்ணீரின் ஊடே
உன்னுடனான எனது அன்பை
மீட்க முயற்சிக்கிறேன்
நாள்தோறும்
தோற்றுத்தான் போனேன்
இன்றும்.

அன்பிற்கான தேடலின்போது ஆன
எனது தோல்விகள்
புதிதா என்ன

நீ கொடுத்த மலர்களை
மட்டுமல்ல
வீசிச்சென்ற முட்களையும் கூட
தாங்கியே நிற்கிறேன்
தயக்கமின்றி

மீளாதப் பொழுதுகள் பல
தாளாத தனிமையில்
வெம்மை படர்ந்த
அந்தி வெளியில் ,
அன்பிற்கான எனது
பிரயாசைகள்
தொடர்ந்து வண்ணமே
உள்ளன

நீ விட்டுச்சென்ற சுவடுகளோடு
அன்பிற்கான படிப்பினையாக
உன் நாட்கள் என
வாழ்வின் அடுத்த
படிநிலையை
மெல்ல கடக்கவே நினைக்கிறன்

எக்காலத்துக்கும் ஆன அன்பென
இவ்வுலகில் ஏதேனும் உண்டா, என 
எஞ்சி நிற்கும் கேள்வியோடே
தொடர்கிறேன்
எனது பயணத்தை
"அன்பு கிலோ எத்தனை?"
எனக் கேட்காத
உலகத்தை
நோக்கி ...