30/12/16

நதியானவன் - வண்ணதாசன் உரை




எழுத்தாளர் ஜெயமோகனின் நாவலான விஷ்ணுபுரம் பேரில் அவரது வாசகர்களால் தமிழின் மூத்தப் படைப்பாளிகளை கவுரவிக்கும் விதமாக தொடங்கப் பட்டதுதான் விஷ்ணுபுரம் விருது. தொடர்ந்து ஆறு வருடமாக நடைபெற்று வரும் இவ்விழா வருடாவருடம் கோவையில் நடைபெற்று வருகிறது. இதுவரை இவ்விருதை ஆ.மாதவன், பூமணி, தெளிவத்தை ஜோசப், தேவதேவன், ஞாணக்கூத்தன், தேவதச்சன் ஆகியோர் பெற்றுள்ளனர். இந்தாண்டு வண்ணதாசனுக்கு இவ்விருது வழங்கப் பட்டுள்ளது. இம்மாதம் 24 மற்றும் 25- இரு நாட்கள் நிகழ்வு நடைபெற்றது. முதல் ஒன்றரை நாள் கலந்துரையாடலாகவும், ஞாயிறு மாலை விருது விழாவும் நடைபெற்றது. இறுதியாக விழாவில் அவரைப் பற்றிய ஆவணப்படம் "நதியின் பாடல்" திரையிடப்பட்டது. செல்வேந்திரன் இயக்கி இருந்தார். பவா செல்லத்துரை, நடிகர் நாசர், கண்ணட எழுத்தாளர் எச்.சிவப் பிரகாஷ், எழுத்தாளர் இரா.முருகன், மருத்துவர் கு.சிவராமன், ஜெயமோகன் ஆகியோர் விழாவில் முக்கிய உரையாற்றினர். இதை தொடர்ந்து வண்ணதாசன் தனது நெகிழ்ச்சியான நிறைவு உரையை நிகழ்த்தினார். விழாவில் அவரது சகப் படைப்பாளிகளால் "தாமிராபரணம்" தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.



விழாவில் பேசிய வண்ணதாசனின் முழுமையான உரை இங்கே



************************








பொதுவாக இப்படிதான் என்னுடைய பேச்சை நான் துவங்குவேன், எல்லோருக்கும் தான் மழை, எல்லோருக்கும் தான் வெய்யில், எல்லோருக்கும் தான் கலை, எல்லோருக்கும் தான் என் எழுத்து. அதையெல்லாம் விட இந்த விழாவின் துவக்கத்திலே எனைச் சார்ந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்ட அந்த நதி எல்லோருக்குமான நதி என்று நான் நினைக்கின்றேன். நான் அந்த ஆவணப்படத்தை பார்த்து இருக்க கூடாதோ என்று இப்போது நினைக்கின்றேன். அது என்னை சார்ந்ததால் நான் கலைந்து போக வில்லை, அது என்னுடைய நதியை சார்ந்ததால் நான் கலைந்து போனேன். நண்பர்களே நதிகள் எல்லாம் இப்பொழுது பாடுகின்றதா நண்பர்களே, அந்த ஆவணப்படத்திற்கு நதியின் பாடல் என்று படத்தை எடுத்த செல்வேந்திரன் தலைப்பு இட்டு இருக்கிறார். நதிகள் இப்போது பாடு கின்றனவா நண்பர்களே ? பாடலாம். பாடி கொண்டு இருக்கலாம். ஆனால் அது ஒருவேளை சோகப் பாடலாக இருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது. அல்லது நாசர் அவர்கள் சொன்னது போல யாரிடமும் பாட முடியாத ஒரு பாட்டை இப்போது பாடி கொண்டு இருக்கிறதோ என்னுடைய தாமிரபரணி என்று நான் நினைத்து பார்க்கிறேன். அல்லது பவா செல்லதுரை சொன்னது போல நகர்ந்து நகர்ந்து அந்த நதி தொலைவில் தொலைவில் தொலைவில் போய் கொண்டு இருக்கிறதோ என்று நான் நினைக்கிறேன். நான் இந்த ஆவணபடத்தால் மிகவும் கலைந்து போய் இருக்கிறேன் நண்பர்களே. சொல்லப்போனால் காலையில் நடந்த கலந்துரையாடலில் இவ்வளவு கலகலப்பாக கலந்து கொள்வேன் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது இந்த அரங்கத்தில் நான் பேசும்போது அந்த கலகலப்பு இல்லையோ என்று கூட நான் நினைகின்றேன். சற்று அமைதியாக இரு, சற்று அமைதியாக இரு என்றே திரும்ப திரும்ப நான் எனக்குள் சொல்லி கொள்கிறேன். அமைதி ஒருவேளை ஒரு சொல்லோ என நான் எண்ணுகின்றேன் அல்லது எங்கோ நான் வாசித்தது போல அமைதி ஒரு குரல் என்று நான் நினைகின்றேன். அமைதி ஒரு சொல் எனில், அமைதி ஒரு குரல் எனில், நான் அந்த குரலை அந்த சொல்லை என்னிடம் வரும்படி அதே அமைதியிடம் நான் யாசிக்கிறேன்.



போதும். போதும். பேச்சு கூட அவசியமில்லை என்று தான் தோன்றுகிறது. என்னுடன் இருக்கிறவர்களை, என் எதிரில் இருப்பவர்களை சற்று அமைதியாக பார்த்துவிட்டு சென்று அமர்ந்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. இந்த அமைதி என்ற குரல், இந்த அமைதி என்ற சொல் உங்களிடம் இருந்து யாசித்து நான் பெற்றது நண்பர்களே. அதை உங்களிடமே திருப்பி கொடுத்து விடலாமா என்று கூட நான் நினைக்கின்றேன். நான் இதுவரை இந்த ஐம்பத்தைந்து ஆண்டுகள் எழுதிய சொற்கள் எல்லா உங்களிடம் இருந்து பெற்றவை அல்லவா? நான் உள்ளபடியே கலைந்த மனதோடு சற்று அமைதியாக இந்த அரங்கத்தை பார்த்து கொண்டு இருக்கலாம் என்று நினைகின்றேன். இப்படி அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கும் கணத்தை நான் மிகவும் விரும்புகின்றேன். இந்த கணத்தில் எது என்னுடைய சொந்த கணம் என்று உணர்வதற்கு முன்னாலே அந்த கணம் என்னைவிட்டு நகர்ந்து போய்விடக் கூடாதே என்று நான் தவிக்கிறேன். ஒரு அமைதியான கணம் எனக்கு வாய்க்குமெனில் நான் ஏற்கனவே தயாரித்து எடுத்து கொண்ட வரிகளை சற்று விகாசப்படுத்தி அல்லது அந்த வரிகளின் மத்தியில் இருந்து -ஜெயமோகன் சொன்னது போல- சில மின்மினிகளை பறக்க விடலாம் என்று நான் நினைக்கின்றேன். அது தீயாக மேலெழும்பினால் எனக்கு மகிழ்ச்சி தான். ஜெயமோகன் அவர்களே எனக்கு மின்மினிப் பூச்சியாக பறக்க சம்மதம், எனக்கு தீயாக இருக்க சம்மதம். நான் இந்த மார்கழியிலே ஊர்ந்து கொண்டு இருக்கும் மரவட்டைகளைப் போலே நகர்ந்து கொண்டே இருக்கிறேன். ஏனெனில் என்னுடைய பழைய கவிதை ஒன்றில் நான் சொல்லி இருப்பது போல ஊர்ந்து கொண்டே இருப்பது தான் உயிரின் அழகு. முன்னமே சொன்னதை போல பொன் புள்ளிகள் இட்ட அந்த மரவட்டையாகத் தான் நான் இப்போது உங்கள் முன் நிற்கின்றேன் தோழர்களே.



நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பதைப் போல, “கலைக்க முடியாத ஒப்பனைகளில்” தான் என்னுடைய பயணத்தை தொடங்கினேன். அதில் வந்த “சபலம்” கதை தொடங்கி இப்போது சமீபத்திலே அமிர்தாவிலே எழுதி இருக்கிற கதை அல்லது அடுத்து நான் எழுதி இருக்கிற தொகுப்பு கதைகள் எல்லாம் என்னுடைய ஐம்பத்தைந்து ஆண்டுகளின் நகர்வை சொல்லி கொண்டே இருக்கிறது தோழர்களே. என் கதையில் வரும் விருத்தாவை போல நான் போய்க் கொண்டே இருப்பவன். நான் மட்டும் இல்லை தோழர்களே கலைஞன் அல்லது படைப்பாளி, இந்த அன்றாடத்தில் வாழ்பவன், போய்க் கொண்டே இருப்பவனாகத் தான் இருக்கிறான். நான் இன்னொரு கவிதையிலே எழுதி இருப்பேன், “நின்று கொண்டு இருப்பதை விட சென்று கொண்டு இருக்கலாம்”. நான் என்னுடைய இந்த எழுபதாவது வயதில், அல்லது விஷ்ணுபுரம் விருதுக்கு பிந்தைய நாட்களில் நின்று போகவே மாட்டேன் நண்பர்களே, சென்று கொண்டே தான் இருப்பேன். நான் சில வேளை புறக்கணிக்க பட்டவனாக இருந்து இருக்கலாம், எனக்கும் ஒன்றும் அதில் வருத்தம் இல்லை. ஆனால் வண்ணதாசனை தவிர்த்தாலும், வண்ணதாசனின் கதைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கும். அப்பிடியே நான் இயங்கி கொண்டும் இருக்கிறேன் நண்பர்களே. ஒரு கலைஞன் செய்ய வேண்டிய காரியம் தன்னுடைய படைப்புகள் தவிர்க்க முடியாதவை என்பதை வாசிப்பவன் மனதில் ஏற்படுத்தி விட்டால், போதுமானது. அறிந்திருப்பீர்கள், கடந்த டிசம்பர் 20ம் தேதி சாகித்ய அகாடமி விருது எனக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றிருந்து என் கண்கள் கூசும் படியான வெளிச்சங்கள் என் மீது பட்டு என்னை எதோ செய்து கொண்டு இருந்தது. அந்த சாகித்ய அகாடமி விருது கொண்டாட்டங்களில் இருந்து, அந்த வெளிச்சத்தில் இருந்து வெளியேற விரும்பினேன். வெளியே வந்து இருக்கிறேன், எவ்வளவு அழகான வெளியேற்றம் தெரியுமா அது. அந்த 20 மற்றும் 21ம் நாட்களில் இருந்து வெளியேறி நான் இப்போது இந்த விஷ்ணுபுரம் விருது நாட்களான 24 மற்றும் 25ம் நாட்களில் நுணுக்கமான வாசகர்கள் நிரம்பிய இந்த அரங்கில் நான் பிரவேசித்துக் கொண்டேன் நண்பர்களே. அது மகத்தான வெளியேற்றம் என்றால் இது மகத்தான நுழைவு நண்பர்களே. இந்த நிகழ்வானது நிகழ்ச்சி நிரலான இந்த இரண்டு நாட்கள் நடந்து கொண்டு இருந்தாலும், ஜெயமோகன் மற்றும் அவரது அன்பர்கள் எப்போது எங்கள் பெருமாள்புரம் வீட்டுக்கு தெரிவிக்க வந்தார்களோ அப்போதே இந்த விருது எனக்கு வழங்கப் பட்டுவிட்டது நண்பர்களே. இப்போது இது வெறும் மீட்டுநிகழ்த்துதல் தான்.



முன்பெல்லாம் ஆற்றின் மேல பறப்பது போலே எனக்கு ஒரு கனவு வரும் நண்பர்களே. ஆறு கீழ ஓடி கொண்டிருக்கும் அதற்கு நேர் மேல நான் பறந்து கொண்டு இருப்பேன். அது கலைஞனுக்கு வரக்கூடிய ஒரு கனவு தான் என்று நண்பர்கள் பின்னல் சொன்னார்கள். திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்த அந்த கனவு தொலைந்து போனது நண்பர்களே. ஒரு கனவு தொலைவது என்பது எவ்வளவு துக்ககரமான காரியம் என்பதை படைப்பாளிகள் மட்டுமே அறிய முடியும். நாங்கள் கனவை உருவாக்குவதற்காகவும், கனவுகளை காப்பதற்காகவும், அந்த கனவின் அழகு நிஜத்தில் வந்து புழங்குவதற்குமே திரும்ப திரும்ப எழுதிக் கொண்டு இருக்கிறோம். அசைந்து அசைந்து ஆடி கொண்டு இருகிறோம் அல்லது எங்களது திரைச்சீலையிலே மிகுந்த வண்ணங்களை குழைந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் ஆற்றின் மேல் பறக்கற அந்த தொலைந்துபோன கனவு இந்த விஷ்ணுபுரம் மேடையில் இப்போது நனவாகி இருக்கிறது தோழர்களே. மறுபடியும் ஒரு ஆற்றின் மேல் பறந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு கதையில் எழுதி இருப்பேன், விலாப்புறத்தில் சிறகுகள் முளைகின்றன என்று, சொல்லப்போனால் இப்போது என் முழு தேகத்திலும் சிறகுகள் முளைத்தது போல நிற்கிறேன். இப்போது படைப்பாளிகள் மத்தியில் எனக்கு முன் விருது வாங்கிய படைப்பாளிகள் மத்தியில் வாங்கிய இவ்விருது என் சிறகுகளை விரிக்க செய்து இருக்கிறது. அந்த வகையில் விஷ்ணுபுரம் வழங்கிய விருதால் பழைய கனவுகளை மீட்டு கொண்டவனாக இருக்கிறேன்.



நான் ஆற்றின் மீது பறக்கிறவன் இல்லையா, அதுவும் ஆறு பாயும் ஊர்க்காரன் இல்லையா, ஆறு என்பது ஈரம் சார்ந்தது அல்லவா? என்னுடைய வாழ்வின், என்னுடைய படைப்பின் அடிநாதம் ஈரத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும் தோழர்களே. மனிதனுக்கு கண்ணீர் இருக்கும் வரை, மனிதன் வேர்வை கசியும் வரை அவன் நதியாக இல்லை என்றாலும் எப்படி ஈரம் ஆற்று போனவன் ஆவான். நான் ஈரமாக இருக்கிறேன் நண்பர்களே. என்னுடைய கதைகளும் ஈரமாகவே இருக்கும். வாழ்க்கை வரண்டது தான், ஆனால் நிலத்தடி நீராக நாங்கள் எல்லாம் பாய்ந்து கொண்டே இருப்போம் நண்பர்களே. ஜெயமோகன் இந்த விருதை அறிவிக்கும் போது என்னை பற்றி எழுதிய சிறு பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஈரம் சார்ந்தது என்பதால் அதை பகிர்கிறேன், “உள்ளே பெருமழைக்கு சற்றே நலுங்கும் கிணற்று நீரை போல அந்தரங்ககளை மட்டும் எழுதும் எழுத்தாளர்” என்கிறார் ஜெயமோகன். இதேபோல விகடன் தடம் இதழில் மனுஷ்ய புத்திரன் என்னை பற்றி கூறி இருந்ததையும் சரியான கணிப்பாக பார்கிறேன். அவர் சொல்கிறார், “மணலில் நிதானமாக இறங்கி செல்லும் தண்ணீர் போன்ற கவிதைகளை எழுதுகிறவர்” என்று. நண்பர்களே எனக்குச் சற்றே நலுங்கும் கிணற்ற்று நீராக இருக்க சம்மதம், மணலில் நிதானமாக இறங்கும் தண்ணீராக இருக்கச் சம்மதம். ஒரு கவிதை தொகுப்பின் இறுதி வரியிலே, “இன்னும் தீ தான் தெய்வம், நீர் தான் வாழ்வு” என நான் எழுதி இருப்பேன். அதை மிகச்சரியாக ஜெயமோகன் அவர்களும் மனுஷ்ய புத்திரன் அவர்களும் தங்களது வரையறையில் சொல்லி இருக்கிறார்கள் என்றே சொல்வேன். என்னுடைய எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால், என்னுடைய கதைகளில்யில் ஈரம் என்றொரு கதை உண்டு, அதில் லோகமதினி என்று ஒரு கதாபாத்திரம் உண்டு. அவளுடைய நீல விழித்திரை ஈரம் நிறைந்து இருக்கும். என்னுடைய கதைகள் லோகமதினியின் விழித்திரைப் போல இருக்க வேண்டும் என நினைக்கிறேன் நண்பர்களே. உங்கள் எல்லோருக்கும் நிலத்தடி நீரின் முதல் துளி எவ்வளவு குளிர்ந்து இருக்கும் என்று தெரியும். அந்த கதையில் வரும் அவளின் கணவன் பக்கத்து வீட்டில் நீருக்காக தோண்டி இருக்கும் குழியை பார்த்தபடி இருப்பான். ஏனெனில் அவனுக்கு விவசாயம் பொய்த்து போய், கிணறு வெட்டியும் நீர்வராத நிலையில், பக்கத்து வீட்டை பார்த்த படி இருப்பான். அப்படி இருந்த அவன் திடிரென அந்த குழியில் நிலத்தடி நீர் பீச்சி அடிப்பதை கண்டவுடன் சுற்றுசுவரை தாண்டி குதித்து அந்த கலங்களான நீரை அள்ளி அள்ளிக் குடிப்பான். அந்த வீட்டு அம்மா, “எதுக்கு கலங்கள் தண்ணியை குடிக்கறிங்க” என்பாள். இவன் அந்த தண்ணியை கையில் பிடித்தவாறு “இது சீம்பாலுங்களா இல்லை அமிர்தம்ங்களா” என்று சொல்லிக் கைகளில் ஏந்தி கொள்வான். இதற்காக ஒரு சுற்றுச்சுவரை அல்ல இன்னும் எதனை சுற்றுச்சுவரை வேண்டுமானாலும் தாண்ட தயாராக இருக்கிறேன். ஏன் என்றால் லோக மதினி என்னுடைய வீட்டிலே ஈரக் கண்ணுடன் எப்போதும் இருப்பால். என்னுடைய கதைகள் லோகமதினியின் ஈரக் கண்கள் போல இருந்து விட்டால் போதுமா? இலக்கியத்தில் அல்லது கலையில் போதும் என்பது உண்டா? போதும் என்றால் கலை அந்த இடத்திலேயே நின்று விடுகிறது என்று அர்த்தம்.



என்னுடைய “நடுவை” கதையை படித்தீர்கள் என்றால் அதில் ஒரு கிழவர் வருவார். 1995ம் காலகட்டம், எங்கு பார்த்தாலும் பார்த்தீனியம் முளைத்து இருக்கும். எங்கள் வீட்டுக்கு அருகே புழங்கி கொண்டிருந்த அந்த கிழவர் எங்கள் வீட்டின் அருகே பெருகியிருந்த பார்த்தீனியச் செடிகளை அவரே அகற்ற ஆரம்பித்தார். என்னுடைய பிள்ளைகள் வீட்டில் இருந்து அந்த கிழவரை பார்த்து கொண்டே இருக்கிறார்கள். இந்த வயது முதிர்ந்தவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உண்டாகும் நெருக்கம் பெற்றோரிடம் கூட உண்டாவது இல்லை நண்பர்களே. அவ்வளவு அலாதியான உறவது. “குட்டி இங்க வா, இதை அங்க வை” என குழந்தைகளை கூப்பிட்டு வேலை வாங்கி, மாலை பெரும்பாலான பார்தீனிய செடிகள் அகற்றப்பட்டு இருந்தது. முடிந்தவுடன் பிள்ளைகளிடம் “ஒரு வாலில தண்ணி கொண்டு வா” என்று சொன்னார். பிள்ளைகளால் தூக்க முடியாது அல்லவா. உடனே தாயார் கொண்டு வந்து வைக்கிறார். அப்போது என் வீட்டு சுவர் ஓரத்தில் தானாக வளர்ந்து இருந்த ஒரு செடியின் நாற்றை பிடுங்கி என் மகனின் கையில் கொடுத்து நடச் சொன்னார். அதற்கு அந்த மனிதர் சொன்னார் நண்பர்களே, “ஒன்ன பிடுங்குனா ஒன்ன நடணும் இல்லையா”. நான் எழுதுல சாமி, நான் எழுதுல. அந்த பெரியவர் சொல்லிட்டு போய்ட்டார். அந்த சிறுகதையின் கடைசி வரி இப்படி முடியும், “ஒன்ன பிடுங்குனா ஒன்ன நடணும் இல்லையா?” என் நண்பர் கந்தர்வன் கொண்டாடிய கதை இது, அவரை போல படைப்புகளை கொண்டாடிய இன்னொருவரை இதுவரை பார்த்தது இல்லை நண்பர்களே.




நடுகை கதையில உள்ள அந்த கிழவனை போல இருந்தால் போதுமா? எனது மற்ற கதை மாந்தர்களை போல இருக்க வேண்டாமா? நீங்கள் “எண்கள் தேவையற்ற ஒரு உரையாடல்” என்னும் விகடன் கதையை படித்திருக்க கூடும். ஏன் என்றால் பெரும்பாலான வாசர்கள் பார்வையில் இருந்த ஒரு கதை அது. அந்த கதையில் வரும் ஒருவன் செல்பேசியில் உள்ள எண்களை அழிக்க மனமின்றி தனது இறந்த சிநேகிதியுடன் உரையாட விரும்புவதைப் போல என் கதைகள் இருக்க விரும்புகிறேன் நண்பர்களே. அல்லது என மிகச் சமீபத்து கதையான "இன்னொரு அர்த்தத்தின்" சந்தானம் போல, உறவுகளின் ஆழத்தை, ஒவ்வொரு சொல்லுக்கும் இருக்கும் அர்த்தத்தை என் கதைகள் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் நண்பர்களே.



அநேகமாக என்னுடைய உரையின் இறுதி கட்டத்துக்கு வந்து விடலாம் என நினைக்கிறேன். சம்பிரதாயமாக ஆனால் மனப்பூர்வமாக நான் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வழங்கியிருக்கிற இந்த விருதுக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.மாதவன், தெளிவத்தை ஜோசப், தேவதேவன், தேவதச்சன், பூமணி, ஞாணக்கூத்தன் இவர்களுடன் அல்லது இவர்களுக்கு மத்தியில் நானும் ஒருவனாக உங்களுடன் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் நண்பர்களே. ஜெயமோகன் இணைய தளத்தில் விஷ்ணுபுரம் விருது சார்ந்து கடிதம் எழுதியிருந்த அத்துனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயமோகன் என்னிடம் கூட சொன்னார் எழுதுவதை நிறுத்த சொல்லி விடலாமா என்று. அந்தளவிற்கு கடிதங்கள் வந்தபடி இருந்துள்ளன. அதில் ஒரு கடிதமான எஸ்.செல்வராஜின் கடிதத்தை வாசித்தீர்களா வண்ணதாசன், எனக் கேட்டார். நான் அவரின் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தேன். நண்பர்களே எல்லா படைப்பாளிக்கும் அப்படி ஒரு செல்வராஜ் தேவை என்றே நினைக்கிறேன். இந்த கூட்டத்தின் மத்தியிலே நிச்சயமாக அந்த எஸ.செல்வராஜ் இருக்க மாட்டார். ஏனென்றால் அந்தக் கடிதத்திலேயே அவர் சொல்கிறார் "நான் உங்களுக்கு அறிமுகமாக மாட்டேன், இப்படியே இருந்து கொண்டு செத்துப் போவேன்" என்கிறார். ஏன் செல்வராஜ் இப்படியே இருங்கள் ஆனால் என்னுடன் சேர்ந்து வாழ கூடாதா. செல்வராஜ் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ஒருமுறை ரயிலில் செல்லும்போது ஒரு நாடாச்சி உங்களிடம் வந்து "எந்த ஊரு நீ, எத்தன புள்ளைங்க?" எனக் கேட்டார் என்று, அவள் கை நரம்புகள் புடைத்து இருந்தன என்று. ஏன் செவ்வராஜ், என் கதைகள் எல்லாம் படித்திருக்கிறீர்கள் உங்களுக்கு தெரியவில்லையா உங்களுடன் ரயிலில் வந்த அந்த நாடாச்சி நான்தானென்று. என்னுடைய கைகளில் நரம்புகள் புடைத்ததை நீங்கள் கவனிக்க வில்லையா. நான் தான் அந்த மூதாட்டி. அது ஜான் சுந்தர் சொல்வது போல அது நமது சொந்த ரயில். நான் உங்களுடனே இருக்கிறேன் செல்வராஜ், அறிந்து கொள்ளுங்கள்.



இறுதியாக மறுபடியும் ஆவணப்படத்திற்கு வருகிறேன். ஏனென்றால் துவங்கிய இடத்தில் முடியும் முடிகிற இடத்தில் துவங்கும் அல்லவா. இந்த டிசம்பர் மாதத்திற்கு அல்லது இந்த கிருஸ்துமஸிற்கு ஏற்ற, மிகச்சிறிய நான் மிக நல்லதாக உணர்கிற அந்த கவிதையை செல்வந்திரன் ஆவணப்படத்தின் துவக்கமாக வைத்து இருந்தார்.



"என் தந்தை தச்சன் இல்லை


எழுதுகிறவன்



எனக்கு மரச்சிலுவை அல்ல



காகிதச் சிலுவை



உயிர்தெழுதல் மூன்றாம் நாளல்ல



அன்றாடம்"



ஆம் நண்பர்களே, இந்த விருதால் நான் இன்று உயிர்தெழுந்து இருக்கிறேன். ஆனால் என்னுடைய காகிதச் சிலுவையை நாற்காலியில் அமர்ந்த உடனே அதில் என்னை அறைந்து கொள்பவனாகவும் இருக்கிறேன்.



நன்றி தோழர்களே!

14/12/16

பொம்மையானவள்



என் பெண்கள் என் பொம்மைகள்

பொத்தல் நிலத்தின்

நிவாரணியாக

பொழியும் மழைபோல

என் வடுக்களின்

இருண்மைகளின்

மீட்சிக்கான

கடைசிப் புகலிடங்கள்.

ஒரு வகையில் தாதிக்கள்.




அவைகளை வைத்து நான்

விளையாடுவேன்

தூக்கியெறிவேன், பூட்டி வைப்பேன்

தண்ணீரில் மிதக்கச் செய்வேன்,

தொலைத்துவிட்டால் அழுவேன் ஒரு

குழந்தை போல.

பிள்ளை குணத்தின் சாயலென கடிந்தாலும்

யாருடனும் பகிரத் துணியமாட்டேன்

என் பொம்மைகளை.

ஏனெனில்

இங்கே

பொம்மைகளானவர்கள் வெறும்

பொம்மைகள் அல்லவே

18/11/16

திருப்பூரின் உலக திரைப்பட விழா

5 நாட்கள், 23 படங்கள்

உற்சாகமாக தொடங்கியது திருப்பூர் உலகத் திரைப் பட விழா.






18 ஆம் தேதி முதல் 22ஆம தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவை 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர்' நடத்துகின்றனர்.

5'வது ஆண்டாக இன்று தொடங்கப் போகும் திரைப்பட விழா, திருப்பூரில் நடப்பது இதுவே முதல்முறை.

முதல் இரண்டாண்டுகள் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோ'வுடன் இணைந்து நடத்தப் பட்டது. பின்பு நகரங்களை தாண்டியும் உலக திரைப்படங்களை கொண்டு செல்லும் நோக்கில் அடுத்த இரண்டு ஆண்டுகள் பட்டுக் கோட்டையிலும், கம்பத்திலும் முறையே நடத்தப் பட்டது.

இப்போது இந்த ஆண்டு தொழில் நகரமான திருப்பூருக்கு வந்துள்ளது.
மாவட்ட அளவில் மட்டுமல்லாது தமிழ்நாடு அளவிலும் முக்கியமான எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் வருவார்கள் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவின் முக்கிய ஒருங்கினைப்பாளரும், தமுஎகச தலைவருமான எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் விழா பற்றி கூறுகையில், "தொடர்ந்து ஐந்நாவது வருடமாக திருப்பூரில் இன்று திரைப்பட விழா தொடங்குகிறது. சினிமா நமது சித்நனைத் தளத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருந்தும் அது தமிழ் வாழ்வை பிரதிபலிக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். முதலில் நல்ல சினிமா என்றாலே இங்கே யாருக்கும் தெரியாது. வாழ்வை பேசும் படங்களே நல்ல சினிமா. மேலும் இங்கு சினிமா என்பது தொடர்ந்து நம் சிந்தனைத் தளத்தை பாதிக்கக் கூடிய ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது. இப்படியான சூழலில் நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதே இந்த விழாவின் நோக்கம்" என்றார்.

திரைப்பட விழாவின் முதல் நாளான இன்றைய நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு ஆளுமையான எடிட்டர் லெனின் துவக்கி வைக்கிறார்.

முதல் படமாக "ஸ்பார்டகஸ்" திரைப்படம் காலை 10 மணிக்கு திரையிடப் படுகிறது. உலக திரைப்பட இயக்குனர்களில் தன் திரைவாழ்கையில் அனைத்து விதமான உச்சங்களையும் தொட்டுவரென புகழப்படும் ஸ்டான்லி குப்ரிக் இயக்கியிருக்கும் இந்தப் படம் "உலக சினிமா வரலாற்றில் முதல் காவியப் படம்"என அடையாளப்படுத்தப் படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் என 12 நாடுகளை சேர்ந்த 23 படங்கள் திரையிடப் படுகிறது.
நுழைவு கட்டணமாக ஒரு நாளுக்கு 200₹ என்றும், ஐந்து நாளுக்கும் சேர்த்து 1000₹ என தெரிவிக்கப் பட்டுள்ளது.


- கபிலன்


**

15/11/16

C"க்கு பின்னால் இருக்கும் A மற்றும் B"யின் கதை







கணிணியின் பிரதான இயக்கியாக(drive) ஏன் C இருக்கிறது என என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? 


ஏன் A, B அல்லாமல் C'ல் இருந்து ஆரம்பிக்கிறது? 

கணிணியின் ஆரம்ப காலகட்ட வளர்ச்சியிலிருந்து அதன் தீவிர ஆர்வலர்களாக இருப்பவர்களுக்கு இதற்கான விடை எளிமையாக கிடைத்திருக்கும். ஆனால் கணிணி-பிரியர் அல்லாதவர்களின் மனத்திரையில் சரீர் சரீரென அடிக்கடியாவது இந்தக் கேள்வி வந்து போயிருக்கும். 

ஏன் மைக்ரோ சாஃப்ட்'டின் விண்டோஸ் கணிணியின் பிரதான இயக்கியாக (default drive) C இருக்கிறது? அதற்கு அடுத்தடுத்த இயக்கிகளாக D, E மற்றும் என தொடர்கிறது. எனில் USB இயக்கியை சொருவினால் அது கணிணியில் F, G இயக்கியாக தொடரும். 
சரி இதற்கெல்லாம் முன்னால் உள்ள அந்த A'க்கும் B'க்கும் என்ன தான் ஆனது? 



பதற வேண்டாம். பதில் எளிமையானது தான். ஆம். கணிணியின் வளர்ச்சியை ஒவ்வொரு தலைமுறையாக (Generations) நாம் கணக்கிடுவோம் இல்லையா. அப்படியாக உருவாக்கப்பட்ட ஆரம்பகாலகட்ட கணிணிகளில் போதுமான அளவில் பெரிய சேமிப்பு உபகரணத் திறன் (internal storage capacity) இல்லை. அப்போது அதற்கு பதிலாக Floppy disk drive என்னும் சாதனம் பயன்படுத்தப்பட்டது. தமிழில் நெகிழ் வட்டு இயக்கி என இதைச் சொல்லலாம். அந்த இயக்கியே ஆரம்பத்தில் A என அழைக்கப்பட்டது. அது 5¼ என்றும் 3½ என்றும் இரு அளவைகளில் வெளியானது. இந்த இரு இயக்கிகளையும் பொருத்தக்கூடிய வசதியுடன் வெளியான கணிணியின் பிரதான இயக்கியாக தான் முறையே A மற்றும் B செயல்பட்டது.






1980களின் பிந்தைய காலகட்டத்தில் தான் Hard drive இயக்கிகள் நிலையான அம்சமாக கணிணியில் மாறியது. எனவே இயல்பாக, முந்தைய இயக்கியின் தொடர்ச்சியாக அது C என பெயரிடப்பட்டது. கணிணி இயங்குதளம் சாரந்த அனைத்தும் C'ல் தான் சேமிக்கப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட கணிணி தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நெகிழ் வட்டு இயக்கிகளின் (Floppy disks) தேவை இல்லாமல் போனது. எனவே A, B மறைந்தது, அதன் தொடர்ச்சியாக C மட்டும் இருந்து வருகிறது. 


**

விகடனில் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சிறு கட்டுரை.


3/11/16

மவுலின்னாங்கும், "ஸ்வச் பாரத்தும்


           





மவுலின்னாங். "ஸ்வச் பாரத் ஸ்வச் பாரத்" என சுத்தம் குறித்த பிரக்ஞை கடந்த இரண்டு ஆண்டுகளாக திடுதிப்பென்று நம்மிடையே கிளர்ந்தெழும் முன்னரே, அதை செயலளவில் யதார்த்தத்தில் நிகழ்த்தி காட்டியது மவுலின்னாங். 


மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலைத்தொடரில் அமைந்துள்ளது மவுலின்னாங். ஷில்லாங்கிலிருந்து 90 கிமி தொலைவில் அமைந்துள்ள வெறும் 500 பேர் கொண்ட சின்னஞ்சிறு கிராமம். முழுக்க காசி பழங்குடியின மக்கள் வாழும் இந்த கிராமம் உலக அளவில் ஒரு பெரும் கவனத்தை இந்தியாவிற்கு ஈட்டித் தந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? 


அதுவும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முனனரே. ஊர் கூடி தேர் இழுப்பதை போல சிறுகச் சிறுக அனைவரது பங்களிப்புடனும் அதை சாதித்திருக்கிறது. ஆம், "ஆசியாவின் சுத்தமான நகரம்" என டிஸ்கவர் இந்தியா இதழால் 2003ம் ஆண்டு அறிவிக்கப் பட்டுள்ளது மவுலின்னாங். ஆனால் உலக மக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்த இந்நிகழ்வு பெருவாரியான இந்திய மக்களை சென்று சேராதது ஏனோ துரதிர்ஷ்டம் தான். 





அப்படி என்னதான் இருக்கிறது மவுலின்னாங்கில் ?




                             
               




2003 ஆம் ஆண்டிலிருந்தே உலக அளவில் சுற்றுலா பயணிகள் மவுலின்னாங்கிற்கு அணி வகுக்க தொடங்கிவிட்டனர். வந்த பயணிகளின் மூலம் தெரிந்து கொண்டு மேலும் பலர் வரத் துவங்கினர். 2005ம் ஆண்டு உலகத் தொலைக்காட்சிகளின் மூலம் மேலும் பிரபலமானது மவுலின்னாங். இப்படியாக பயணிகளின் வரத்து அதிகரித்து இன்று மாநிலத்தின் மொத்த வருவாயில் சுற்றுலா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 


மவுலின்னாஙை பொறுத்தவரை விஷயம் மிக எளிமையானது, "சுத்தம் பேணுதல் பிறப்புரிமை". கிராமவாசிகளின் முக்கிய கடமையாக காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதென்றால், வீட்டை சுத்தம் செய்வது மட்டுமல்ல ஒட்டுமொத்த கிராமத்தையும் தத்தம் பங்கிற்கு சுத்தம் செய்வதும். நீங்கள் மவுலின்னாங்கில் வசிக்கும் ஒரு சிறுவன் என்றால், உங்களது முதல் கடமை ரோட்டைக் கூட்டுவதாகத்தான் இருக்கும் பிறகுதான் பள்ளி, படிப்பெல்லாம். இயல்பாகவே மவுலின்னாங் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பிற்கு வந்தவுடன் சுத்தம் செய்யும் கடமையும் அளிக்கப்பட்டு விடுகிறது. "சுத்தம் செய், இல்லையெனில் உணவு கிடையாது" என்பதே எழுதப்படாத விதியாகிப் போனது. இது தலைமுறைகள் கடந்து நீடிக்கும் ஓர் வழக்கமாகவே அமைந்து விட்டது. 





                          "வாழும் பாலம்"


                  
                  


இந்த வார்த்தையை இதற்கு முன்பு கேள்விப் பட்டிருக்கிறிர்களா? உயிரற்ற கான்கிரீட் கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் நமக்கு வாழும் (வேர்) பாலம் என்ற சொல் சற்று அந்நியமாக இருப்பதில் வியப்பில்லை தான். ஆனால் அது உண்மை. ஆலமரத்தின் விழுதுகளை பின்னி பிணைந்து உருவாகியுள்ள ஓர் இயற்கை ஆச்சரியம் ரிவாய் கிராமத்தில் உள்ள இந்த வாழும் பாலம். ஆரம்பத்தில் ஆலமரங்களின் விழுதுகளை பயன்படுத்தியே பாதையை கடந்துள்ளனர். பின்னாட்களில் இயற்கையாக மரங்களின் பிணைப்பால் உருவான பாலம், மனிதனுக்கும் இயற்கைக்குமான பந்தத்தை காட்சிப்படுத்துவதாக உள்ளது. சீரற்ற நகரத் தெருக்களின் இறுக்கமான கட்டடங்களுக்கு இடையே மூச்சு விடவும் சிரமப்படும் சூழலை ஒப்பிடும் போது, உயிரோட்டமான இந்த பாலத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெரும் பரவசத்தை அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். 





                    உயர விரியும் வானம் 



landscape of Bangladesh





மவுலின்னாங் மக்களை பொறுத்தவரை ரசாயனம், பிளாஸ்டிக் என எதையும் தங்கள் ஊரில் அனுமதிப்பதில்லை. ஊரினுள் நுழையும் பிரதான சாலையைத் தவிர ஏனைய சாலைகள் அனைத்தையும் மண் சாலைகளாகவே இன்றுவரை பராமரித்து வருகின்றனர். இவையனைத்தையும் கடந்து மற்றுமொரு அதிசயம், ஸ்கை வ்யூ (Sky view). ஆம், மூங்கிலால் ஆன சிறிய வீடு மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. வங்கதேசத்தின் எல்லையோரம் உள்ள கிராமம் என்பதால் ஒட்டுமொத்த மவுலின்னாங் மட்டுமல்லாது வங்கதேச நிலப்பரப்பையும் இந்த "ஆகாய இல்லம்" மூலம் ரசிக்கலாம். வாழும் பாலத்திற்கு அடுத்து அதிக பயணிகளை கவரும் இடமாக உள்ளது "ஸ்கை வ்யூ". 







                                                

     மவுலின்னாங்வாசிகளின் கவலை 


            




2003ல் உலகின் கண்களில் மவுலின்னாங் கவனம் பெறத் துவங்கியதிலிருந்தே மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. ஆனால் கிராம மக்களின் தலையாய கவலை, சுற்றுலா பயணிகளால் ஊருக்குள் பெருகும் பிளாஸ்டிக் குப்பைகள். ஆரம்பத்தில் இது ஓரளவிற்கே இருந்தது. ஆனால் நாட்கள் போகப் போக நிலைமை மோசமாகத் தொடங்கியது. முடிந்தளவு இதை கட்டுபடுத்த முயன்று இப்போது இந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காகவே ஐந்து பெண்களை நியமித்துள்ளனர் ஊர் பொதுமக்கள். வெறும் பிளாஸ்டிக் மட்டுமல்லாது கான்கிரிட், சிமென்ட் வீடுகளையும் மக்கள் விரும்புவதில்லை. இப்போதும் பாரம்பரியமான குடிசைகளையே இருப்பிடமாக கொள்கின்றனர் காசியினர். தங்களுக்கான தனித்துவம், பிரத்யேக மரபு ஆகியவற்றை அதிகரித்து வரும் சுற்றுலா வாசிகளால் இழந்து விடுவோமோ என்கிற அச்சம் தான் அதற்கு காரணம். இயற்கையோடு இணைந்து வாழ்வதையே உண்மையான வாழ்கையாக காசி பழங்குடியினர் கருதுகின்றனர். 






                    நமக்கான முன்னோடி 


                     





"கடவுளின் பூந்தோட்டம்" என டேஜ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் அலக்ஸான்டர் கரன்கோர் மற்றும் ஜான்மெஜாய் தமூளி, மவுலின்னாங் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். மவுலின்னாங் மக்களின் வாழ்க்கை எந்தளவிற்கு இயற்கையுடன் இயைந்துள்ளது என்பதை அழகாக காட்சிபடுத்தி இருப்பார்கள். சூழல் குறித்த சமூக அக்கறையில் காசி மக்கள் நமக்கு முன்னோடிகள். ஆம், சுத்தம் குறித்த போதனை மட்டும் முழுமையான சுகாதாரத்துக்கு தீர்வாகாது. அடிப்படையில் அது மக்களின் அன்றாட நடைமுறைக்கு உகந்ததாக, அவர்களின் வாழ்நிலையில் இருந்து தொடங்கப்பட வேண்டும். அப்போதுதான் நிச்சமான மாற்றம் சாத்தியம் என மவுலின்னாங் மக்கள் நமக்கு உணர்த்துகின்றனர். மவுலின்னாங்வாசியான கான்கோங், "அடிப்படையில் எங்கள் கிராமம் சுத்தமாக இருப்பதற்கு காரணம் எங்கள் மக்கள் தான், மக்களின் ஒற்றுமை தான் இதற்கு முழு காரணம், பரஸ்பர ஒற்றுமை இல்லையென்றால் எதுவுமில்லை" என்கிறார். இங்கு நமக்கு அதுதான் பிரச்சனையே. ஆம், மக்களின் பங்கேற்பே மாற்றத்திற்கான முதல் அடி. மவுலின்னாங் வழிகாட்டட்டும்.

13/10/16

பிரிவுபச்சாரம்



                                     



உலகம் அழியத் தயாராகி வருகிறது.
அறிவித்த போப் பாண்டவர்
கூடவே தற்கொலைக்கான ஆயுத்தங்களிலும்
மும்முரமானார்.

அழியத் துவங்கப் போகிறதா உலகம்!
வற்றியக் காம்புகளுடன்
பாதி இறந்த குழந்தையை
இறுக அணைத்தவாறே ஆனந்தக்
கெக்கலியிட்டாள்
ஏழை வயோதிகி.

முழுக்க மழித்தெடுத்த முகத்துடன்
கண்ணாடியில் பட்டொடியும் வைரத் துளிகளையொத்த
சில்லெனும் தண்ணீர்,
அப்பிக்கிடந்த முகத்தில்
இருந்து
மெல்ல மெல்ல உருகித்
துளிர்க்க,
பூமியின் கடைசி நாளுக்கான
கடைசி அறிவிப்பானையை
தெரிந்துகொண்ட அவன்
தனது இறுதிப் புணர்ச்சிக்கு தயாரானான்.

இலட்சோபலட்ச மனித சஞ்சாரங்களின்
இறுதி கணம் என்பதால்,
இன்னும் தீவிரமாகவும்
உன்மத்தத்தின் கடைசி மிடரையும் ருசிக்கும் வகையிலும்
நடைபெற்றுக் கொண்டிருந்தது
உலகின் அந்தக்
கடைசிப் புனர்ச்சி.

பூமியின் அந்த இறுதி
தினத்தினூடாக எழுந்த
மூர்க்கமான கலவியின்
கேவலானாது
மென்மையானதொரு சங்கீதமாய்
பால்வெளியை நிறைக்கத் தொடங்கியது.

ஆக
உயிர்ப்பற்று இறுகி கிடந்த
இந்த பூமியின்
இறுதி நாளுக்கான
அழகிய பிரிவு உபச்சாரமாக
ஒரு நல்ல நீண்ட உன்னதமான கலவியைத் தவிர
வேறென்ன இருக்க முடியும்!
என கணக்கை முடித்தான் ஐந்து தலை
பிரம்மன்.

_________________________________
கபிலன். இல

8/10/16








இறைவா
 
எனக்கு ஒரு சுடர் கொடு இறைவா
பாலைவன இருளுல்
பட்சிகளின் கீதமற்ற பொழுதொன்றில்
வானின் மென் திரவசூழ் அந்தியில்
ஒளி தரும் லாந்தர் என
கையளிப்பேன்
பாதைகளற்ற பராரிகள் சிலருக்கு.
நிச்சயம் புதிரையே உடுப்பாய் உடுத்தியுள்ள
அந்த இரு பெரும் கருத்த மலைகளுக்கு இடையே புதைக்க மாட்டேன்.

18/8/16

சென்னை ஐஐடியில் மீண்டும் சாதி ஆதிக்கம்.




"உன்னயெல்லாம் வெட்டி பன்றிக்கு தான் போட வேண்டும்" 


"கீழ்த்தரமான உன்னை பார்க்கும்போது உன் தாயும் நடத்தை கெட்டவளாகத்தான் இருப்பாள் என்றே தோன்றுகிறது"




இவைவெயல்லாம் எங்கோ இரு 'சமூக குழுக்களுக்கு' இடையே நடந்த சண்டையின் போது வெளிப்பட்டதல்ல. இந்தியாவின் Premier தலைசிறந்த கல்வி நிறுவனம் எனப் புகழப்படும் ஐஐடி'யில் (இந்திய தொழில்நுட்ப கழகம்) படிக்கும் மாணவர்களிடம் இருந்து வெளிப்பட்டது. ஆம் சாதிரீதியான வன்மம், கொலை மிரட்டல்கள் நேற்றிலிருந்து மாணவர் ஒருவருக்கு முகநூல் வழி இப்போதும் வந்த வண்ணம் உள்ளன. 


யார் அந்த மாணவர் ? அவர் செய்த தவறு என்ன? 


அந்த மாணவர் பெயர் அபினவ் சூர்யா. இத்தகைய சாதிரிதியான வெறுப்பு தாக்குதலுக்கு ஆளாக காரணம், ஒரு தலித் இயக்குநரை தனது முகப்புபடமாக சமூக வலைதளத்தில் வைத்தது. 
அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மை இதுதான். 




சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பொறியியல் படித்து வருகிறார். சென்னையை சேர்ந்த சூர்யா இப்போது இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த செவ்வாய் அன்று சென்னை எக்மோரில் கபாலி திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வு நடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் அபினவ் சூர்யாவும் நண்பர்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். விழா நிறைவில் நண்பர்கள் சூழ பா.ரஞ்சித் உடன் செல்பி (தன்படம்) எடுத்துள்ளார். அந்த படத்தை அன்று இரவு தனது முகநூல் பக்கத்தில் முகப்பு படமாக வைத்துள்ளார். அவ்வளவுதான்.







காலையில் எழுந்தவுடன் முழுக்க வெறுப்பு விஷம் தோய்ந்த மெஸேஜ்களால் தன் முகநூலில் நிரம்பி வழிவதை பார்த்துள்ளார். அத்தனையும் வன்மம். கொலை மிரட்டல்கள், வெறுப்பு. சாதியம். 
இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் தலைசிறந்த கல்லி நிலையத்தின் மாணவர்கள். நாளைய இந்தியாவின் நம்பிக்கை தூண்கள் (?). 


             யார் அபிநவ் சூர்யா ?


                     


இந்த சாதிய வன்ம தாக்குதலை எதிர்கொள்வதற்கு முன்பே ஊடக அறிமுகம் சூர்யாவிற்கு கிடைத்திருந்தது. அதுவும் மிகச் சமீபத்தில் - ஆகஸ்ட் 12. பெரிய கவனம் பெறாத அந்த சம்பவம் அபினவ் தனது கல்லூரி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தால் வாய்த்தது.

http://www.newindianexpress.com/cities/chennai/Trump-at-IIT-Madras-G-D-Bakshi%E2%80%99s-jingoistic-speech-prompts-open-letter-by-student/2016/08/12/article3576247.ece



சுதந்திர தினத்தை நினைவுகிறுகிற வகையில் ஆண்டுதோறும் சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் அப்படி ஆகஸ்ட் 11ம் தேதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஜி.டி.பாக்ஸி அழைக்கப் பட்டிருக்கிறார். அரசு ஆதரவு கருத்துகளால் 'தேசியவாதம்' குறித்தும் தனது அதீத உணர்ச்சிமய பேச்சினால் ஊடகங்களில் ஏற்கனவே பல முறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியும் உள்ள பாக்ஸி சென்னை ஐஐடியிலும் சர்ச்சைகளுக்கு குறைவின்றி பேசியுள்ளார். இதனால் வேதனை அடைந்த மாணவர் அபினவ் சூர்யா கல்லூரி இயக்குநருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார். அந்த கடிதம் அடுத்த நாளே சில ஊடகங்களில் வெளியாகவே, சூர்யா கவனம் பெற்றார். (முழுக் கடிதம் சுட்டியில்)



அப்படி என்ன தான் பாக்ஸி பேசினார். 





பேச்சின் ஒரு சில சாரம்சங்களாக அபினவ் குறிப்பிடுவது :


“பாகிஸ்தானுடன் சண்டையிடுங்கள், அது நம் நாட்டை உறுதியாக்கும்".

“எங்கள் தலைமுறையில் பாகிஸ்தானை இரண்டு ஆக்கினோம், உங்கள் தலைமுறை அதை மேலும் நான்கு ஆக்க வேண்டும். அப்போதுதான் நாம் அமைதியாக வாழ முடியும்” 

மேலும் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி, ரானுவத்தால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றதோடல்லாமல் "அகிம்சை முட்டாள்தனமானது" என்றும் ஜெனரல் பாக்ஸி பேசியுள்ளார் என தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் சூர்யா.

பாக்ஸின் இந்த பேச்சுக்கு பிறகு, அவரை "சென்னை ஐஐடியில் டிரம்ப்" என்றே ஊடகங்கள் அழைத்தன. அந்த அளவிற்கு சிறுபான்மை, விளிம்புநிலை மக்கள் மீது தனது பேச்சில் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.



               கடந்து வந்த பாதை


இதே சென்னை ஐஐடி'யில் தான் கடந்த வருடம் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது. பிறகு நாடு முழுக்க பெரும் பிரச்சனையாக கிளர்ந்தெழுந்த போது, கல்லூரி நிர்வாகத்தால் தடை பின்வாங்கப்பட்டது. பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் சாதி ஒடுக்குமுறை என்னும் விஷச் சுழலுக்கு ரோஹித் வெமுலா என்னும் தலித் பி.எச்.டி மாணவன் இரையாக்கப்பட்டார். சாதி இந்திய ஆன்மாவை அரித்துக் கொண்டிருக்கும் ஓர் நோய்க் கூறு. இதுவரையான காலக் கட்டங்களில் இந்திய கிராமங்களை பீடித்து இருந்த நோயான சாதி பாகுபாடு. சமீப வருடங்களில் பல்கலை கழகங்களை அதிகளவில் ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளது. அதன் ஓர் கோர விளைவுதான் ரோஹித் வெமுலா, APSC விவகாரம்.

சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாறி வருகிறோம். அதனால் தான், இனைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் ஓர் பிரபலமாய் இருந்த போதும், அவர் தலித் என்பதாலயே ஆதிக்க உணர்வு கொண்ட மாணவர்களுக்கு எரிச்சலும், ஆத்திரமும் வருகிறது. உண்மையில் ஐஐடிகள் உயர்கல்வி நிறுவனங்களா? அல்லது சாதி கூடாரமா என்னும் கேள்வி எழாமல் இல்லை. அடிப்படையில் அந்த மாணவர்கள் ஆகட்டும், ஆசிரியர்கள் ஆகட்டும் இட ஒதுக்கீடு தான் அவர்கள் பிரச்சனையே. மண்டல் குழு அறிக்கை சமர்பித்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது இந்த அவல நிலை. உயர்கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் இத்தகைய அவல நிகழ்வுகள், உரிமைக்களுக்கான பேராட்டங்கள் இனி எங்கு உரத்து ஒலிக்க வேண்டும் என நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகின்றன. 
ஒவ்வொரு காலத்திலும் ஒரு அரசியல் முழக்கம் வலுப்பெறும். 
இது "ஜெய் பீம்"கான காலகட்டம்.




***

நான் எழுதிய இதே கட்டுரை விகடனில் இன்னொரு விதமாய் வெளியாகி இருந்தது. 

12/4/16

சமகால அரசியல் - தமிழக தேர்தல் - அதன் போக்கு- நீட்சி

(2016-2017'ஆம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் முதல்கட்டத்தில் தேர்வான எனது கட்டுரை. அடுத்த கட்ட எழுத்து தேர்வு 17.04.16. தலைப்பு: தமிழக அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தலில் நிகழும் மாற்றங்கள், கருத்தியல் சார்ந்த பார்வையை முன்வைத்தல்)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


அரசியல் பங்கேற்பின்மையால் ஏற்படும் மிகப்பெரிய மோசமான விளைவு என்னவென்றால் கீழ்மையாளர்களால் நாம் ஆளப்படுவது தான் – பிளேட்டோ




"அரசியல் எதுக்குப்பா நமக்கு" என்னும் கேள்வி தான் நம்மையும் சூழந்து கொண்டு இருந்தது சில ஆண்டுகள் முன்புவரை. ஆனால் நிலைமை இன்று வேறு. ஆம், போன தலைமுறைகளின் டீக்கடை பெஞ்சு'களை விஞ்சிவிட்டது இன்றைய சமூக வலைதள அரசியல் பேச்சுகள். கழுத்தை சுற்றும் பாம்புகள் போல தலைவர்களை "மீம்ஸ்"கள் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.




அதிகாரத்தின் மமதை


“கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை", தனது தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் இவை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியின் களிப்பில் வெளியானவை. ஆனால் ஓராண்டுக்குள் சென்னை பேரிடரின் போதான அவரது அரசின் கையாளாகத் தனம், இந்த மிதப்பை முற்றிலும் புரட்டிப் போடும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஏனெனில் பேரிடரால் நிகழ்ந்த இழப்புக்கு நிகரானது அரச நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பு. இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டிய பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டும் அவலம் வேறு. எளிய மக்கள் மனதில் பதிந்த இந்த கசப்பு அவ்வளவு சீக்கிரம் மாறாது.




"இலவசங்களின்" அரசியல்



2006'ம் ஆண்டு சட்டசபை தேர்தல். கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் மூழ்கி இருந்தன. அப்போது பிரதான எதிர்கட்சி தலைவரான கருணாநிதி தன்னுடைய தேர்தல் அறிக்கையுடன் வந்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: இலவச நிலம், இலவச வீடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, இலவச கணினி. ஜெயலலிதா முதல் பெரும்பாலான கட்சிகள் வரை, கருணாநிதி அரசியலை கேலிக்கூத்தாக்குகிறார் என சாடின. தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார். 2011'ம் ஆண்டு தேர்தல். இப்போது ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்: விலையில்லா மிக்சி, விலையில்லா மின்விசிறி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா வீடு. பெருவெற்றி பெற்றது அதிமுக. இடைப்பட்ட இந்த இரண்டு ஆட்சியிலும் நடந்திருக்கும் மாற்றம் என்பது "இலவசம்" என்பதிலிருந்து "விலையில்லா" என்னும் வார்த்தை வேறுபாடு அளவிலான மாற்றம் மட்டுமே. அடிப்படை தேவைகள், உரிமைகளை வழங்க மற்றும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதைதாண்டி ஆடம்பரங்களை இலவசமாக ஏற்றுக்கொள்ள மக்கள் இப்போது தயாரில்லை. நிலையான வேலையும் நிரந்தரமான வருமானமுமே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.




கருத்துக்களே தலைமை


2014'ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை தொடங்கிய சமயம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய முதல் பரப்புரையில் சொன்னார்: "இது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி". அன்று அவர் கோடிட்டு காட்டிய அந்த கருத்தியல் மோதல் இன்று அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த வருடம் அதிகமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை "மதச்சார்பின்மையாக" இருக்குமென்றால், இந்த ஆண்டு அது "கருத்து சுதந்திரமாக" இருக்கும். இந்தப் போக்கு எதேச்சையானது அல்ல. நேற்றைய பெருமாள் முருகனிலிருந்து இன்றைய கண்ணையா குமார் வரையான நிகழ்வுகளின் மூலம் அரசின் அதிகாரம் எவ்வளவு மூர்க்கமானது என்பதை மக்கள் மனதில் பதிய வைத்து வருகின்றனர் ஆட்சியாளர்கள். இனி "வளர்ச்சி" கோஷங்கள் புளித்துவிட்ட நிலையில், மதச்சார்பின்மை பற்றிய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறும். அனைவருக்கும் 15 லட்சம் என்பதை தாண்டி, உணவு ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் என்னும் கருத்து வலுப்பெறும். புல்லட் ரயில் என்றைக்கோ வரட்டும், இன்றைக்கு நான் சாப்பிடும் உணவு நாளை நான் கொல்லப்பட காரணமாக இருக்கக்கூடாது தானே?




நிகழும் மாற்றம்


அறிவியல் ரீதியாக எந்த ஒரு கருத்தும் ஒரே வடிவத்திலேயே நெடுநாள் உயிர்ப்போடு இருக்க முடியாது. 40"க்களில் சுதந்திரமும், 60"களில் சமத்துவச் சிந்தனையும், 70'களின் பிற்பகுதியில் ஜனநாயகம் நசுக்கப்பட்ட போது அதற்கு எதிரான கருத்தும், 80களில் சமூகநீதி அரசியலும் என அது தொடர்ந்தது. பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டிய அந்த அரசியல் சூழல் மத துவேஷ சக்திகளால் பின்னாட்களில் சிதறடிக்கப்பட்டது. அதேபோலவே ஒரு துருவ அரசியலும் இனி மாறப்போகும் சூழல் வலுத்து வருகிறது. ஒரு கட்சி போய், இன்னொரு கட்சி என்றல்லாமல், எந்த கொள்கைக்கு எது மாற்று கொள்கை என்னும் கேள்வி எழும் நிலை வெகுதொலைவில் இல்லை. அதேவேளை, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்த அரசியலும் தமிழ்நாட்டில் வீரியம் பெற்று வருகிறது. திராவிட அரசியல், அதன் வழி வந்த கட்சிகளால் நீர்த்துப்போனதே இதற்கு காரணம். வாச்சாந்தி வழக்கிலிருந்து பரமக்குடி துப்பாக்கி சூடு வரை பொறுத்திருந்து பார்த்து அடைந்த ஏமாற்றத்திற்கு பிறகே தங்களுக்கான அரசியல் பாதையை தலித் மக்கள் தேர்ந்தெடுத்தனர். இன்று தமிழ்நாட்டில் ஒரு தலித், முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்னும் கருத்து வலுப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.


மக்களே இறுதி எஜமானர்கள்


இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல். அதில் பெரும் பேசுபொருளாக இருக்கப்போவது ஊழலும், மதுப்பிரச்சனையும். ஊழலை பொறுத்தவரை இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை என்னவென்றால், அதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கு இல்லை என்பதை தாண்டி ஊழல் அரசில்வாதிகள் அதை நியாயப்படுத்தும் போக்கு தான். இரண்டாவது மது விலக்கு. இன்று இது குறித்து திமுகவும், அதிமுகவும் பேசுவதற்கு கூட தார்மீகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த தேர்தல் அசாதாரணமான ஒன்று. ஆட்சியிலிருக்கும் கட்சியின் மீது மிகப்பெரும் அதிருப்தி. ஆனால் அந்த அதிருப்தியை பாரம்பரிய எதிர்க் கட்சியான திமுகவால் பயன்படுத்தவோ ஒருங்கிணைக்கவோ முடியவில்லை. கிட்டதட்ட ஆறுமுனைப் போட்டி. உடனடி அரசியல் லாபத்தையும் கணக்கெடுக்காது எது மற்ற அரசியல் கட்சிகளை இந்த இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் இருந்து விலக்கி வைக்கிறது. கணக்கு 2016'ஐ பற்றியல்ல, 2021 பற்றி. மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். அது ஒரு நீண்ட காலப் பயணம். இதற்கான முயற்சியில் எண்ணிக்கை பலத்தில் இன்று சரிவு ஏற்பட்டாலும், நாளை நம்பிக்கை மிக்க மாற்றாக வளர முடியும் என்னும் ஒரே நோக்கம்தான் இதில் அடங்கி இருக்கிறது. நிர்வாக சீர்கேடுகளில் இருந்து கிரானைட் ஊழல் வரை மக்கள் பார்த்து சலித்தாகி விட்டது. இவர்கள் சுற்று முடிந்தது, இனி அவர்களுக்கு தரலாம் என்னும் நிலையை இனிமேலும் மக்கள் எடுக்கத் தயாராக இல்லை. தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் முதல்முறை முழுமையான லகான் மக்கள் கைகளில். மார்க்ஸின் கூற்றுப்படி, வரலாறு தன்னை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறது. முதல்முறை துன்பியலாகவும். இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும். இனிமேலும் அரசியலை கேலிக்கூத்தாக்க தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.




– கபிலன் இல.

(clkabilan@gmail.com).

11/3/16

ஆர்த்தி'கள், இமையங்'கள், தேவைகள் – கபிலன்

(நிலாமுற்றம் வலைதளத்தில் நான் எழுதிய கட்டுரை)


"கலை கலைக்கானது" என்ற காலம் போய், கலை மக்களுக்கானது என்னும் காலம் உருவாகி வருவதன் தாக்கத்தின் எதிரொலியே தமிழ் நவீன இலக்கியத்தின் இன்றைய ஆரோக்கிய சூழலின் வெளிப்பாடு. அதிலும் இனி வரும் காலம், தலித் இலக்கியத்தின் காலம் என பல்வேறு மார்க்சிய, அம்பேத்கரிய அறிஞர்கள் முதல் நாட்டின் முக்கிய எழுத்தாளுமைகளின் கூற்று இங்கு நாம் கவனிக்கத்தக்கது. ஏனெனில், மக்களின் குரல் என்பதையும் தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதே இதன் பிரதான ஆன்மா. ஆம், பேசாப் பொருளைக் குறித்து பேசுவது தானே கலைஞனின் வேலை?




இமையமும் இலக்கியமும்




தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் இமையத்தின் பங்கு தனித்துவமானது. காலம்தோறும் மனித மனம் வெற்றியை நோக்கியே தனது பார்வையை குவிக்கிறது என்றால், இலக்கியமோ என்றும் சோகத்தையே தனது பாடுபொருளாக கொண்டுள்ளது, அது துன்பியலையே பெரும்பாலும் பேசுகிறது. அது பேரிலக்கியங்களில் இருந்து இன்றைய நாவல் வரை. தமிழ் இலக்கியத்திலும் ஜெயமோகன் முதல் எஸ்.ராமகிருஷ்ணன் வரை இப்படியான வகைமையிலேயே எழுதுகின்றனர். இமையமும் இவ்வாறு துன்பியலையே தனது கதைகள் வழியாக பேசுகிறார். ஆனால் யாருடைய துன்பியலை? இங்குதான் நான் மேற்குறிப்பிட்ட "தனித்துவம்" கவனிக்கப்பட வேண்டும். இமையம் விளிம்புநிலை மக்களின் துன்பியலை பேசுகிறார்.







தோட்டியும் தமிழிலக்கியமும்




தமிழ் இலக்கிய தளத்தில் முதல்முறையாக விளிம்புநிலை மக்களின் அவலத்தை பேசியது "தோட்டியின் மகன்" நாவல். அதுவும் மொழிபெயர்ப்பு தான். 1946'ல் மலையாளத்தில் எழுதப்பட்ட தோட்டியின் மகனின் மொழிபெயர்ப்பை 1952லேயே முடித்துவிட்ட சுந்தர ராமசாமியால், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து 2000'ல் தான் தமிழில் புத்தகமாக கொண்டுவர முடிந்துள்ளது. இதை குறித்து வருத்தத்துடன் முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அது ஏன் 1940'லேயே மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளையால் சாதிக்க முடிந்ததை, தமிழில் நாற்பது ஆண்டுகள் கழித்து தான் நம்மாள் நெருங்கவே முடிகிறது? நமது தமிழ் பதிப்புத் துறை அவ்வளவு "புனிதப்படுத்தப்" பட்டிருந்ததா? இதனை ஒட்டி இன்று இமையம் போன்ற எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தை நம்மாள் புரிந்து கொள்ளமுடியும். ஏனெனில் பூமணி, இமையம் போன்றோரின் வருகைக்கு பிறகான சமீப ஆண்டுகளில் தான் தமிழில் முதல் "தூப்புக்காறி" உருவாகியுள்ளாள். மேலும் கடந்த வருடம் வெளியாகியுள்ள கௌதம சன்னாவின் "குறத்தியாறு" முக்கியமான படைப்பு.










நிலாமுற்றம்




இத்தகைய பின்னணியோடு நமது பார்வை விரியும் போது, இமையத்தின் படைப்புகளின் வீரியத்தை அதளவில் புரிந்து கொள்ள முடியும். அந்தவகையில் இமையத்தின் "பெத்தவன்", "சாவுச்சோறு" படைப்புகளை இந்த வார நிலாமுற்றத்தில் பேச எடுத்துக் கொண்ட ஆர்த்தி பெரிதும் பாராட்டுக்கு உரியவர். ஏனெனில் இந்த படைப்புகளை நோக்கிய கவனத்தை ஏற்படுத்துதலே ஆர்த்தி செய்துள்ள பெரிய காரியமென்றும், அதுவே இந்த நிகழ்வின் முதன்மையான நோக்கமாக என்னால் பார்க்கமுடிகிறது. ஒரு படைப்பு வெளியாகி விட்டால் அதுசார்ந்த விசயங்கள் யாவும் சரியாகி விடாது. தொடர்ந்து அது விவாதத்துக்கு உள்ளாகும் போதும், பரவலாக்கப் படும்போது தான் அது சாத்தியம். அதை நிலாமுற்றம் தொடர்ந்து செய்கிறது. அந்த செய்கையை அற்புதமான வகையில் இன்னும் ஒருபடி மேலே நகர்த்தி இருக்கிறார் ஆர்த்தி.




பெண்ணும் ஒடுக்குமுறையும்



ஒரு சடங்கோ, ஒரு நம்பிக்கையே, மதமோ அல்லது "ஒழுக்கவிதிகளோ", பெண்ணின் தலையில் ஏற்றுவதில்தான் ஒரு சமூகத்தின் அல்லது ஒரு குழுவின் ஆகப்பெரும் சாதனை அடங்கியிருக்கிறது என நான் நினைக்கிறேன். இந்த இடத்தில் இதை முற்போக்காகப் பார்த்தால் காந்தி தனது போராட்ட களத்தில் எந்தளவு பெண்களை நம்பினார் என நினைத்துப் பார்க்கலாம். பெண்களின் வலிமையை முற்போக்கானவர்களும் சரி, பிற்போக்கானவர்களும் சரி, எந்தளவு புரிந்து வைத்துளனர் என்பதை நாம் உணர முடிகிறது. "பெத்தவனில்" வரும் பெண்கள் அப்படி இருக்கின்றனர். மிகவும் மூர்க்கமான சாதியுணர்வோடு பெண்கள் உலாவுகின்றனர். தந்தைக்கு மகள் மீது உண்டாகும் பரிவுகூட அம்மாவுக்கு ஏற்படுவதில்லை. இது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. சரியோ தவறோ ஒரு விசயத்தில் பெண்கள் எடுக்கும் உறுதியான முடிவென்பது அவர்கள் இலக்கை அடையும் வரை அவர்களை ஓயச்செய்வதே இல்லை. இந்த இடத்தில் சாதியத்தின் கொடூரத்தை நினைத்தால் நமது அமைதி குலைகிறது. தெரிந்தோ தெரியாமலோ பெண்களே சாதிகளை காப்பவர்களாகவும், தலையில் தூக்கி சுமப்பவர்களாகவும் மாற்றப் பட்டுள்ளனர். அனைத்து பெருமை கற்பிதங்களும் அவர்களை வைத்தே கட்டப்படுகின்றன. இதை அவர்கள் உணராத வரை இதற்கு தீர்க்கமான ஓர் முடிவு இல்லை. எனவே இமையம் தன் கதைகள் மூலம் பெண்களிடம் பேசுகிறார். மிகவும் நிதானமாக, ஆனால் யதார்த்தமான தொனியில் பெண்ணிடம் உரையாடுகிறார். மனசாட்சியை எழுப்புகிறார். முடிவில் அவள் தன் நிலையை அறிந்து கதறுகிறாள், இதற்கு எப்படி முடிவு காண்பது என பதைபதைக்கிறாள்.




நேரடி உணர்வும், நேர்மையும்


மேலே குறிப்பிட்ட அதே பரபரப்பு தான் ஆர்த்தியிடமும் அவளது பேச்சில் காணமுடிந்தது. உண்மையில் இமையம் பெண்களுடன் நிகழ்த்தும் உரையாடலை நான் தனித்தே பார்க்க விரும்புகிறேன். ஆம், ஆண் ஊசலாட்டமானவன். அவனது மனநிலை வேறானது. எனில் பெண் சமூக, உளவியல் நிலை முழுக்க வித்தியாசமானது. பெத்தவன் கதையை நான் வாசித்து இருக்கிறேன் (இங்கு சாவுச்சோறு முழுதும் வாசிக்கவில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்). அது என்னுள் ஏற்படுத்திய தாக்கமானது ஒரு சில கண்ணீர்த் துளியுடன் கடந்து போய்விடக் கூடியது. ஆனால் என் வகுப்பு தோழி, அதை படித்து முடித்ததும் ஓர் இரவு முழுக்க அழுததாகச் சொன்னாள். அன்று அதை வெறும் தனிப்பட்ட ஒருவளின் நிலையாக பார்த்த நான், இந்த நிகழ்வில் ஆர்த்தியிடம் இயல்பாக தெரிந்த அந்த அறச்சீற்றத்தின் மூலம், இந்த உண்ர்வுநிலையில் ஒரு பொது தன்மை இருப்பதை புரிந்துக் கொண்டேன். ஆண்களுக்கு எப்படியோ, பெண்களிடம் இமையத்தின் சொற்கள் நேரடித் தாக்கத்துடன் செல்கின்றன. இப்படியாக ஆர்த்தியின் பதிவு முழுமையான நேர்மையுடன் இருந்தது. அவள் அடிக்கடி கோடிட்ட "இந்த மாதிரியான சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்" என்னும் வார்த்தைகள் நாம் அடிக்கடி நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று.








தேவை இமைய"ங்கள்




சரி, இமையத்தினால் இன்று ஒரு ஆர்த்தியை (இங்கு ஆர்த்தி என்பதை பெண் என புரிந்து கொள்க), நம்மிடையே பார்க்க முடிந்துருக்கிறது. இன்னும் பல்வேறு ஆர்த்திகள் உருவாகி இருக்ககூடும். ஆனால் ஒரு இமையம் மட்டுமே போதுமா? இன்றைய நாளில் இமையங்களின் தேவை அதிகம். எனவே நமக்கு வேண்டியதெல்லாம் "இமையங்கள்" (இதை பால் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டாம்). அது ஒரு ஆணாகவோ, அல்லது ஆசிரியராகவோ இருக்க வேண்டும் என தேவையில்லை. பெண்களைக் குறித்து ஆண் பேச, பெண்களே ஏன் அதை விரிவாக பேசக்கூடாது என்பதே கேள்வி. பெண்கள் இனி எழுத வரவேண்டும். எழுத்தில் கவிதை உலகை தாண்டி பெண்கள் வரவேண்டும். அதிகளவில் அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதத்துக்கு உள்ளாக்க வேண்டும். பேசுபொருளாக மட்டும் இல்லாமல் இனி அதை பேசுபவளாகவும் பெண் மாற வேண்டும்.
நான் குறிப்பட வேண்டிய இன்னொன்று, நான் இங்கு ஆர்த்தியின் "திறனாய்வு" குறித்து திறனாய்வு செய்ய எழுதவில்லை. அந்த நிகழ்வின் தாக்கத்தை என்னளவில் விவரித்துள்ளேன். அவ்வளவே. இறுதியாக "பெத்தவன்" குறித்த வண்ணதாசனின் வார்த்தைகள் கவனப்படுத்த வேண்டியவை, "இனிவரும் காலங்களுக்கான தேடலின் முடிவு தான், பெத்தவன்". 

(http://nilamutrampsgcas.blogspot.in/2016/03/blog-post.html?m=1)