விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/2/17

ப்ரிகால் போராட்டமும்; தாமதமான நீதியும்.







நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி டெல்லி முதல் நாட்டின் மூலை முடுக்கு வரை விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் நடைபெற்று வரும் பிற விஷயங்களில் நம் கவனங்கள் செல்வதில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படையான விஷயங்கள் என்றும் விவாதிக்க பட வேண்டியவை. அதிலும் நமது நீதி துறை அத்தைகைய விவாதங்களில் முக்கியத்துவம் பெற வேண்டிய ஒன்று. கவனிக்க தவறிய அந்த விஷயம் வேறொன்றுமில்லை, ஒரு தொழிற்சங்கத்துக்கும் நீதி துறைக்கும் இடையே நம்காலத்தில் நடைபெற்று முடிந்த “நீண்ட” உரையாடலை தான் நாம் பார்க்க தவறியது.



ஜனவரி 17ம் தேதி, கோவை ப்ரிகால் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களில் ஆறு பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கான காரணமாக நிதிமன்றம் கூறியது “குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இல்லை” என. 


முன்னதாக 2012ம் ஆண்டு கோவை செஷன்ஸ் நீதி மன்றம் இபிகோ பிரிவு 302 மற்றும் 449 (கொலை குற்றம் மற்றும் குற்றம் புரிய முனைதல்) படி தொழிலார்கள் எட்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது இங்கு குறிப்பிட தக்கது.



                          ப்ரிகால்


கோவை- தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்”. 25,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்களை கொண்ட நாட்டின் பிரதான வர்த்தக நகரங்களில் ஒன்று. வாகனங்களுக்கான துணை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பல்வேறு பொரியியல் தொழிநுட்ப கருவி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான ப்ரிகால், கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு உற்பத்தி நிர்வனம். 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏழு உற்பத்தி பிரிவுகளாக- உத்தரக்கண்டில் இரண்டு, புனே மற்றும் குர்கானில் தலா ஒன்று என- செயல்பட்டு வரும் ‘ப்ரிகால்’ வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்க முயன்று வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன உற்பத்தி பெரு நிறுவனங்களுக்கு இந்நிறுவனமே தொழில் நுட்ப சாதனங்களான வேக கணிப்புக் கருவி, உணர் திறன் கருவி ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. கோவையில் இரு உற்பத்தி பிரிவுகளாக (பிளான்ட் 1 மற்றும் பிளான்ட்3,4) இயங்கி வரும் இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் முதல்முறையாக ஒட்டு மொத்த வருவாயாக 1000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக அறிவித்து உள்ளது.





          ஊதிய உயர்வு – போராட்டம்


5100 ஊழியர்களை கொண்ட ப்ரிகால் நிறுவனத்தில் 650 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி புரிகின்றனர். 2007ம் ஆண்டு, நியாமான ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை முன்வைத்து ப்ரிகால் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து “கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்” என்னும் பெயரில் தொழிற்சங்கம் ஒன்றை அமைத்தனர். ஆனால் அந்நிறுவன மனித வளப் பிரிவு மேலாளரான ராய் ஜார்ஜ் கொலை செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2012ம் ஆண்டு தான், இச்சங்கம் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப் பட்டது. தொழிற் சங்கத்தை ஆரம்பித்த நபர்களில் 6 பேர் உத்தரகண்டிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. 

தொழிற் சங்க தலைவரான குமாரசாமி கூறுகையில்,
 “ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமான இடர்களை தாண்டி தான் வந்துள்ளோம். போராட்டம் ஆரம்பமாகிய காலத்திலும் எங்கள் மீது பல்வேறு அவதூறுகள் சுமத்தப்பட்டே வந்தன. மாவோயிஸ்ட்களும், தீவிரவாதிகளும் யூனியனை கைபற்றி தொழிற்சாலைக்கு ஆபத்து ஏற்படுத்துக் கின்றனர் என்றே நிர்வாகம் எங்கள் மீது பழி கூறியது” என்றார்.



           என்ன கோரிக்கைகள்



சங்கம் துவங்கிய 2007ம் ஆண்டு பணியாளர்களின் மாத ஊதியமாக இருந்த தொகை 8,522 ரூபாய். ஓய்வு தொகை 1,00,000 ரூபாய். 25 ஆண்டுகள் வேலை செய்து பணி ஓய்வு பெற்றாலும் இதே தொகை தான். வேலை பளு மிக அதிகம். வேலை நேரத்தில் இடைவேளை கூட அதிக நேரம் இல்லை. எனவே பணியாளர்கள் தங்கள் கால்கள் பக்கத்திலேயே தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். உற்பத்தி தேவை அதிகமாக இருக்கிற படியால், கிடைக்கிற குறைந்த இடைவேளையில் எழுந்து செல்லக் கூட நேரம் இருப்பதில்லை என தெரிவித்தனர். இதில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண் பணியாளர்கள் ஆவர். எனவே அடிப்படை உரிமைகளான நியாமான வேலை சூழலை வழங்க கோரியும், குறைவான ஊதியத்தை எதிர்த்தும், தற்காலிக பணி அல்லாது நிரந்தர பணி வழங்க கோரியும் 2009ம் ஆண்டு, கால வரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கினர் தொழிலாளர்கள். 



             ராய் ஜார்ஜ் கொலை



இப்படியான ஒரு சூழலில், இரும்பு தடிகளோடு நுழைந்த ஆட்களால் மூர்க்கமாக தனது அலுவலக அறையிலேயே அடித்து கொல்லப் பட்டார் ராய். கேரளம், எர்னாகுளத்தை சேர்ந்தவரான ராய் ஜார்ஜ் கோவை பெரியநாயக்கன்பாளையம் ப்ரிகால் மனிதவளப் பிரிவு துணை தலைவராக பணி புரிந்து வந்தார். அரசின் தலையீட்டால், நடைபெற்று வந்த போராட்டம் சமரச தீர்வை நோக்கி சென்று கொண்டு இருக்கும் வேளையில் தான் இத்தைகைய கோர சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி காலை 11.40மணி அளவில் ராய் ஜார்ஜ் தாக்கப்பட்டு சரிந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அப்போது அவருடன் அலுவலக அறையில் இருந்த நான்கு பேரும் தாக்குதலுக்கு ஆளாயினர். உடன் மாலை 4.30மணிக்கு மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாலை 6.30க்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இரவு 10 மணிக்கு தொழிலாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அன்றிரவே அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டது.



             முதல் கோணல்


குற்றம் சாட்டபட்ட அத்துனை பேரும் அடுத்த நாள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டதுடன், வழக்கில் மேலும் சிலர் இணைக்கப் பட்டனர். வழக்கின் ஆரம்பத்தில் தொழிற்சங்க தலைவர் குமாரசாமி உட்பட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்ற அறிக்கையில் நிறைய “இடைசெருகல்கள்” இருப்பதாக நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. 42தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தொடர்ச்சியான போலிஸ் விசாரணைக்கு உள்ளாகப் பட்டனர். நான்கு பெண்கள் உட்பட 27 பேர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு 2009ம் ஆண்டு ஜாமின் கிடைக்கும் வரை 130 நாட்கள் சிறையில் வைக்கப் பட்டனர். 2012ம் ஆண்டு வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், எட்டு பேரை குற்றவாளிகளாக அறிவித்து மற்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. தொழிலார்கள் எட்டு பேருக்கும் கடுங்காவலுடன் கூடிய இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முக்கியமான வாதமாக அப்போது முன்வைக்கப் பட்டது,  ‘நடந்த கொலையை குற்றம் சாட்டப்பட்ட தொழிலார்கள் தான் செய்தார்களா’ என்பது.

தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது 

“கொலை நடந்த சமயம் ராயின் கேபினில் இருந்த சிசிடிவி அந்த நாள் மட்டும் வேலை செய்யவில்லை. ஏன் சிசிடிவி கேமரா அன்று மட்டும் பழுதாகி போனது? ஆனால் கொலைக்கான சாட்சியமாக அவரது அறைக்கு வெளிய இருந்த சிசிடிவி’யில் பதிவான காணொளி சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதில் கொலை நடந்த அறையில் ஆட்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளது, ஆனால் அது இந்த தொழிலாளர்கள் தான் என எப்படி சொல்ல முடியும்? நடந்தது கொலை என்பதை நிருபிக்க வேண்டுமானால் அந்த காணொளி பொருந்தலாம், ஆனால் யார் கொன்றார்கள் என அதை வைத்து எப்படி நிரூபிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்”.



                  இரண்டாம் திருப்பம்


இந்த கொலை பற்றியும் அதற்கு முன்பிருந்தே நடந்து வந்த போராட்டங்கள் பற்றியும் தி-வயர் தளத்தில் எழுதிய செய்தியாளர் மதுமிதா தத்தா, இந்த ஒட்டுமொத்த ‘ப்ரிகால் நிகழ்வுகளையும்’ மாருதி நிறுவனத்தின் மானசர் தொழிற்சாலை சம்பவங்களுடன் ஒப்பிடுகிறார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ப்ரிகால் கொலை பற்றி பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் கொலை சம்பவம் 11.40க்கு நடந்ததாக குறிப்பிடப் படும் அதே வேளையில் “எதிர்பாரா விதமாக” வழக்கின் விசாரணை அதிகாரியான போலிஸ் ஒருவரும் 11.41 முதல் 11.46 வரை அதே தொழிற்சாலையினுள் இருந்ததாகவும் அதில் குறிப்பிடுகிறது. ‘சாதாரண உடையில்’ கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக தெரிவித்த அதிகாரியிடம் கொலையை ஏன் தடுக்கவில்லை என கேட்டபோது, “தனக்கு நிர்வாகம் கொலை நடக்கிறதென எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று வாய்மொழியாக நீதிமன்றத்தில் கூறினார். போராட்டம் நடைபெற்று வந்த காலம் என்பதால் பந்தோபஸ்த்துகாக ப்ரிகால் ஆலைக்கு வெளியுலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இருந்தும் கொலை நடக்கவிருந்தது எப்படி போலீசிற்கு தெரியாமல் போயிற்று என டிபன்ஸ் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை.

மாருதி மானசர் ஆலை சம்பவம் ஒத்துப் போவது இங்கேதான். மானசர் தொழிற்சாலை மேலாளர் அவ்னிஷ் தேவ் ஆலை உள்ளேயே வைத்து கொடூரமான முறையில் எரித்து கொல்லப் படுகிறார். தொழிற்சாலை முழுவதும் தீ வைக்கபடுகிறது. அடுத்த நாள் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நூற்று கணக்கில் தொழிலாளர்களை கைது செய்கின்றனர். ஏனெனில் அங்கும் வன்முறைக்கு முன்னர் ஊதிய உயர்வுக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்துள்ளது. மனாசர் தொழிற்சாலை தீக்கு இரையாக்கப்பட்ட அன்று 148க்கும் மேலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, பலரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, போலிஸ் கஸ்டடியில் வைக்கப் பட்டனர். ஆனால் இறுதி வரை பதிலளிக்க முடியாத கேள்வியாக இருந்தது “யார் தீ வைத்தார்” என்பது தான். முதல் நாள் போலிஸ் பரிசோதனை போது எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், அடுத்த நாள் தடயவியல் அதிகாரிகள் தீப்பெட்டி ஒன்றை கண்டு எடுத்தாக தெரிவித்தனர். 

அப்போது தொழிலாளர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் க்ரோவர் வைத்த கேள்வி 
“எரிந்த நெருப்பில் மொத்த தொழிற்சாலையே சாம்பலாகி இருக்கும் நிலையில் ஒரே ஒரு தீப்பெட்டி மட்டும் எரியாமல், எந்த வித சேதமும் இல்லாமல் எப்படி ‘கண்டு எடுக்கப் பட்டது’?”




                    முற்றும் கோணல்




கடந்த 2015ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் அறுவரை விடுதலை செய்து, இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து ஒற்றை ஆயுள் தணடனையாக தண்டனை குறைப்பு செய்துள்ளது. காரணம், ப்ரிகால் நிர்வாக தரப்பில் உதவி மேலாளர் அளித்த சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க வில்லை. மேலும் பலரது சாட்சியங்கள் ஆட்சேபனைக்கு உரியதாய் இருந்துள்ளது, பிறகு வழக்கின் ஆரம்பம் முதலே நீடித்து வந்த குழப்பங்களும் ஒரு காரணம். சாட்சியங்கள் யாவும் நம்பத்தகுந்தாக இல்லை என்றதோடு ‘பொய் சாட்சியங்களை’ கண்டித்த நீதிமன்றம், அதன் அடிப்படியிலேயே விடுதலையையும் பிறபித்து உத்தரவிட்டது.


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். இந்தியாவில் நீதி துறை மூலம் எளியவர்கள் நடத்திய சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. எனினும் முற்றும் முழுதாக முடியவும் இல்லை. இன்னும் இரு தொழிலாளர்கள் சிறை கம்பிகளுள் இருகிறார்கள். அவர்களுக்கான மேல் முறையீடு முயற்சியகள் முன்னெடுக்கப் படலாம். ‘கோவை மாவட்ட ப்ரிகால் தொழிலாளர் சங்கம்’ முன்னெடுத்த இந்த போராட்டம் துவங்கிய காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் 8,522ரூபாய், ஓய்வு ஊதியம் 1 லட்சம், இப்போது வழங்கப்படும் மாத ஊதியம் 24,500 ரூபாய், ஓய்வு ஊதியம் 3.5 லட்சம் ரூபாய். 

சிறையில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நால்வரும் தங்களுக்காக அதுவரையிலும் போராடிய தொழிற்சங்க தோழர்களை ஆரத் தழுவி அழுத புகைப்படம் அடுத்த நாள் ஓரிரு நாளிதழ்களின் மாவட்ட செய்தி பிரிவில் ஒரு சிறு பெட்டி செய்தியாக இடம் பெற்று இருந்தது. ஆம், மாபெரும் பட்ஜெட் பற்றிய செய்திகளுக்கு இடம் வேண்டும் அல்லவா? 







- கபிலன். இல



***

24/1/17

சமூக வலைதளமும் மனித உளவியல் தேய்வும்



இது சமூக வலைதங்களின் காலம். தேசம், எல்லை என்றெல்லாம் ஒன்று கிடையாது. யாரும் யாருடனும் பேசலாம், பழகலாம், நட்பாகலாம். கண்ணனுக்கு புலப்படாத ஒரு இணைப்பை ஏற்படுத்தியதில் இருக்கிறது சமூக வளைத் தளங்களின் சக்தி. யாரென தெரியாத புதிய நபர்களிடம் உறவு ஏற்படவும் ஒற்ற ரசனை கொண்ட புதிய நண்பர்களை கண்டடையும் சாத்தியத்தையும் சமூக வலைதளங்களே தந்துள்ளது.

இவை தான் சமூக வலைத்தளங்கள் பற்றிய நமது பொதுவான அபிப்ராயம்.



இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களை நாம் பார்க்கவே விரும்ப மாட்டோம். அதுவும் அதன் சாதக பாதகங்களை பற்றி பேசுவதெல்லாம் அலுப்பூட்டக்கூடிய விஷயம்.

ஆனால் வெளியாகி வரும் ஆய்வுகளானது, இதை பற்றியும் பேசி ஆக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.

பிரிட்டன் கொலம்பியா பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்வானது, ஐந்தில் ஒருவர் தனது நண்பர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினருடைய முக நூல் {facebook} கணக்கை அவர்களுக்கு தெரியாமல் அவர்களது திறன் பேசி {smartphone} வழியாகவோ, கணினி வழியாகவோ ரகசியமாக ஊடுருவி பார்கின்றனர் என்கிறது.

சமூக வலைதளங்களில் அதிகமாக பயனாளர்களை கொண்டுள்ளது பேஸ் புக். 2012ம் ஆண்டே 100 கோடி பயனாளர்களை தாண்டிவிட்ட பேஸ்புக் தளம், 2016ம் ஆண்டு இறுதி கணக்கின்படி 176 கோடி பயனாளர்களை தான் கொண்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்படி சமூக வலைதளங்களில் முதன்மையான பேஸ் புக்கில் தான் அந்தரங்க தகவல்களுக்கான பாதுகாப்பின்மையும் அதிகரித்து வருகிறது. அதுவும் நெருங்கிய நண்பர்களிடம் இருந்தே வெளியாகும் இந்த அத்துமீறல் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வு குறித்து பேசிய வாஹ்லி அஹ்மத் உஸ்மானி “இது தொடர்ந்து அதிகரித்து வரும் ஒரு செயல்பாடு தான். தங்களது மொபைல் போனிலோ அல்லது கணினியிலோ பேஸ் புக் பயன்படுத்தி விட்டு, வெளி வராமல் அப்படியே விட்டு செல்கின்றனர். அப்படியான சமயத்தில் உடன் இருப்பவர்களின் மூலமாக முதலில் இலக்காவது அவர்களின் தனி செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளே ஆகும்”.



இதற்கான கணக்கெடுப்பு அமெரிக்க இளைஞர்கள் 1308 பேரிடம் எடுக்கப் பட்டுள்ளது. தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்தும் அவர்கள் யாவரும் தங்களது User ID, password எனப்படும் வருகை பதிவு மற்றும் கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றியும் கூட பலன் இல்லை என்பதையும் சுட்டி காட்டுகின்றனர்.



பொறமை உணர்வு தான் இதில் முக்கிய பங்கு வகிக்கறது”, என்கிறார் ஆய்வில் முக்கிய பங்காற்றிய கணினி அறிவியல் பேராசியரர் இவான் பெஸட்னிக். அவர் மேலும் கூறுகையில் “அடிப்படையில் இந்த பொறமை தான் நெருங்கியவர்கள் என்று கூட பாராமல், அவர்களது அக்கவுன்ட்டை ஹேக் செய்யவும், ஊடுருவி பார்க்கவும் தூண்டுகிறது, சில சமயம் அந்த அக்கவுண்டையே பயன்படுத்தி அதன் உரிமையாளரை தொடர்ந்து கண்காணிக்கும் நிலைமை வரை இட்டுச் செல்கிறது” என்றார்.



இந்த ஆய்வில் பங்கெடுத்த சிலர், தங்களது குடும்பத்தினர் அல்லது விருப்பமானவர்களின் பேஸ்புக் பக்கங்களை கண்காணிக்கவும், அவர்களது நிலைத் தகவலை அல்லது புகைப்படத்தை நகைப்புக்குரியதாக மாற்றி கலாட்டா செய்யவே இப்படியெல்லாம் செய்கிறோம் என ஒற்றுக்கொள்ளவும் செய்கின்றனர். ஆனால் வெறுப்புணர்வினாலும், பகை உணர்வினாலும் இதை செய்பவர்களின் எண்ணிகையும் சம அளவில் உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று.



மிகவும் முன்னேறிய, தொழில்நுட்பங்களை நமக்கு முன்னரே பயன்படுத்தி வரும் மேற்கத்திய நாடுகளிலேயே சமூக வலைத்தளங்களை அதிலும் குறிப்பாக பேஸ்புக்கை, கையாள்வதில் இவ்வளவு உளவியல் பூர்வ சிக்கல் இருக்கிற தென்றால், நம்முடைய நிலைமை சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்று சமூக வலைதளத்தின் மூலம் இணையும் காதல், நாளை அதன் மூலமே முடிவும் பெறுகிறது. தன் காதலி யாருடன் பேசுகிறாள், யாருடைய நிலை தகவலுக்கு லைக் செய்கிறாள் என்பதை கவனிப்பதே இன்றைய ‘ஆண்’மகனின் பெருங் கவலைகளில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரம் ஆண்களிடம் இதே கட்டுப்பெட்டி தனத்தை பெண்கள் காட்டுவதில்லை. மேற்கூறிய இந்த கூற்றுக்கு, இன்று பேஸ்புக்கில் காதலனின் “அன்பு” கட்டளையால் முகப்பு படம் வைக்க முடியாத பெண்களும், தனது பேஸ்புக் கடவுச்சொல்லை காதலனிடம் ஒப்படைத்து இருக்கும் பெண்களே சாட்சி.

**

18/11/16

திருப்பூரின் உலக திரைப்பட விழா

5 நாட்கள், 23 படங்கள்

உற்சாகமாக தொடங்கியது திருப்பூர் உலகத் திரைப் பட விழா.






18 ஆம் தேதி முதல் 22ஆம தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவை 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர்' நடத்துகின்றனர்.

5'வது ஆண்டாக இன்று தொடங்கப் போகும் திரைப்பட விழா, திருப்பூரில் நடப்பது இதுவே முதல்முறை.

முதல் இரண்டாண்டுகள் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோ'வுடன் இணைந்து நடத்தப் பட்டது. பின்பு நகரங்களை தாண்டியும் உலக திரைப்படங்களை கொண்டு செல்லும் நோக்கில் அடுத்த இரண்டு ஆண்டுகள் பட்டுக் கோட்டையிலும், கம்பத்திலும் முறையே நடத்தப் பட்டது.

இப்போது இந்த ஆண்டு தொழில் நகரமான திருப்பூருக்கு வந்துள்ளது.
மாவட்ட அளவில் மட்டுமல்லாது தமிழ்நாடு அளவிலும் முக்கியமான எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் வருவார்கள் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவின் முக்கிய ஒருங்கினைப்பாளரும், தமுஎகச தலைவருமான எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் விழா பற்றி கூறுகையில், "தொடர்ந்து ஐந்நாவது வருடமாக திருப்பூரில் இன்று திரைப்பட விழா தொடங்குகிறது. சினிமா நமது சித்நனைத் தளத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருந்தும் அது தமிழ் வாழ்வை பிரதிபலிக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். முதலில் நல்ல சினிமா என்றாலே இங்கே யாருக்கும் தெரியாது. வாழ்வை பேசும் படங்களே நல்ல சினிமா. மேலும் இங்கு சினிமா என்பது தொடர்ந்து நம் சிந்தனைத் தளத்தை பாதிக்கக் கூடிய ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது. இப்படியான சூழலில் நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதே இந்த விழாவின் நோக்கம்" என்றார்.

திரைப்பட விழாவின் முதல் நாளான இன்றைய நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு ஆளுமையான எடிட்டர் லெனின் துவக்கி வைக்கிறார்.

முதல் படமாக "ஸ்பார்டகஸ்" திரைப்படம் காலை 10 மணிக்கு திரையிடப் படுகிறது. உலக திரைப்பட இயக்குனர்களில் தன் திரைவாழ்கையில் அனைத்து விதமான உச்சங்களையும் தொட்டுவரென புகழப்படும் ஸ்டான்லி குப்ரிக் இயக்கியிருக்கும் இந்தப் படம் "உலக சினிமா வரலாற்றில் முதல் காவியப் படம்"என அடையாளப்படுத்தப் படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் என 12 நாடுகளை சேர்ந்த 23 படங்கள் திரையிடப் படுகிறது.
நுழைவு கட்டணமாக ஒரு நாளுக்கு 200₹ என்றும், ஐந்து நாளுக்கும் சேர்த்து 1000₹ என தெரிவிக்கப் பட்டுள்ளது.


- கபிலன்


**

15/11/16

C"க்கு பின்னால் இருக்கும் A மற்றும் B"யின் கதை







கணிணியின் பிரதான இயக்கியாக(drive) ஏன் C இருக்கிறது என என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? 


ஏன் A, B அல்லாமல் C'ல் இருந்து ஆரம்பிக்கிறது? 

கணிணியின் ஆரம்ப காலகட்ட வளர்ச்சியிலிருந்து அதன் தீவிர ஆர்வலர்களாக இருப்பவர்களுக்கு இதற்கான விடை எளிமையாக கிடைத்திருக்கும். ஆனால் கணிணி-பிரியர் அல்லாதவர்களின் மனத்திரையில் சரீர் சரீரென அடிக்கடியாவது இந்தக் கேள்வி வந்து போயிருக்கும். 

ஏன் மைக்ரோ சாஃப்ட்'டின் விண்டோஸ் கணிணியின் பிரதான இயக்கியாக (default drive) C இருக்கிறது? அதற்கு அடுத்தடுத்த இயக்கிகளாக D, E மற்றும் என தொடர்கிறது. எனில் USB இயக்கியை சொருவினால் அது கணிணியில் F, G இயக்கியாக தொடரும். 
சரி இதற்கெல்லாம் முன்னால் உள்ள அந்த A'க்கும் B'க்கும் என்ன தான் ஆனது? 



பதற வேண்டாம். பதில் எளிமையானது தான். ஆம். கணிணியின் வளர்ச்சியை ஒவ்வொரு தலைமுறையாக (Generations) நாம் கணக்கிடுவோம் இல்லையா. அப்படியாக உருவாக்கப்பட்ட ஆரம்பகாலகட்ட கணிணிகளில் போதுமான அளவில் பெரிய சேமிப்பு உபகரணத் திறன் (internal storage capacity) இல்லை. அப்போது அதற்கு பதிலாக Floppy disk drive என்னும் சாதனம் பயன்படுத்தப்பட்டது. தமிழில் நெகிழ் வட்டு இயக்கி என இதைச் சொல்லலாம். அந்த இயக்கியே ஆரம்பத்தில் A என அழைக்கப்பட்டது. அது 5¼ என்றும் 3½ என்றும் இரு அளவைகளில் வெளியானது. இந்த இரு இயக்கிகளையும் பொருத்தக்கூடிய வசதியுடன் வெளியான கணிணியின் பிரதான இயக்கியாக தான் முறையே A மற்றும் B செயல்பட்டது.






1980களின் பிந்தைய காலகட்டத்தில் தான் Hard drive இயக்கிகள் நிலையான அம்சமாக கணிணியில் மாறியது. எனவே இயல்பாக, முந்தைய இயக்கியின் தொடர்ச்சியாக அது C என பெயரிடப்பட்டது. கணிணி இயங்குதளம் சாரந்த அனைத்தும் C'ல் தான் சேமிக்கப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட கணிணி தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நெகிழ் வட்டு இயக்கிகளின் (Floppy disks) தேவை இல்லாமல் போனது. எனவே A, B மறைந்தது, அதன் தொடர்ச்சியாக C மட்டும் இருந்து வருகிறது. 


**

விகடனில் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சிறு கட்டுரை.


18/8/16

சென்னை ஐஐடியில் மீண்டும் சாதி ஆதிக்கம்.




"உன்னயெல்லாம் வெட்டி பன்றிக்கு தான் போட வேண்டும்" 


"கீழ்த்தரமான உன்னை பார்க்கும்போது உன் தாயும் நடத்தை கெட்டவளாகத்தான் இருப்பாள் என்றே தோன்றுகிறது"




இவைவெயல்லாம் எங்கோ இரு 'சமூக குழுக்களுக்கு' இடையே நடந்த சண்டையின் போது வெளிப்பட்டதல்ல. இந்தியாவின் Premier தலைசிறந்த கல்வி நிறுவனம் எனப் புகழப்படும் ஐஐடி'யில் (இந்திய தொழில்நுட்ப கழகம்) படிக்கும் மாணவர்களிடம் இருந்து வெளிப்பட்டது. ஆம் சாதிரீதியான வன்மம், கொலை மிரட்டல்கள் நேற்றிலிருந்து மாணவர் ஒருவருக்கு முகநூல் வழி இப்போதும் வந்த வண்ணம் உள்ளன. 


யார் அந்த மாணவர் ? அவர் செய்த தவறு என்ன? 


அந்த மாணவர் பெயர் அபினவ் சூர்யா. இத்தகைய சாதிரிதியான வெறுப்பு தாக்குதலுக்கு ஆளாக காரணம், ஒரு தலித் இயக்குநரை தனது முகப்புபடமாக சமூக வலைதளத்தில் வைத்தது. 
அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மை இதுதான். 




சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பொறியியல் படித்து வருகிறார். சென்னையை சேர்ந்த சூர்யா இப்போது இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த செவ்வாய் அன்று சென்னை எக்மோரில் கபாலி திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வு நடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் அபினவ் சூர்யாவும் நண்பர்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். விழா நிறைவில் நண்பர்கள் சூழ பா.ரஞ்சித் உடன் செல்பி (தன்படம்) எடுத்துள்ளார். அந்த படத்தை அன்று இரவு தனது முகநூல் பக்கத்தில் முகப்பு படமாக வைத்துள்ளார். அவ்வளவுதான்.







காலையில் எழுந்தவுடன் முழுக்க வெறுப்பு விஷம் தோய்ந்த மெஸேஜ்களால் தன் முகநூலில் நிரம்பி வழிவதை பார்த்துள்ளார். அத்தனையும் வன்மம். கொலை மிரட்டல்கள், வெறுப்பு. சாதியம். 
இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் தலைசிறந்த கல்லி நிலையத்தின் மாணவர்கள். நாளைய இந்தியாவின் நம்பிக்கை தூண்கள் (?). 


             யார் அபிநவ் சூர்யா ?


                     


இந்த சாதிய வன்ம தாக்குதலை எதிர்கொள்வதற்கு முன்பே ஊடக அறிமுகம் சூர்யாவிற்கு கிடைத்திருந்தது. அதுவும் மிகச் சமீபத்தில் - ஆகஸ்ட் 12. பெரிய கவனம் பெறாத அந்த சம்பவம் அபினவ் தனது கல்லூரி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தால் வாய்த்தது.

http://www.newindianexpress.com/cities/chennai/Trump-at-IIT-Madras-G-D-Bakshi%E2%80%99s-jingoistic-speech-prompts-open-letter-by-student/2016/08/12/article3576247.ece



சுதந்திர தினத்தை நினைவுகிறுகிற வகையில் ஆண்டுதோறும் சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் அப்படி ஆகஸ்ட் 11ம் தேதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஜி.டி.பாக்ஸி அழைக்கப் பட்டிருக்கிறார். அரசு ஆதரவு கருத்துகளால் 'தேசியவாதம்' குறித்தும் தனது அதீத உணர்ச்சிமய பேச்சினால் ஊடகங்களில் ஏற்கனவே பல முறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியும் உள்ள பாக்ஸி சென்னை ஐஐடியிலும் சர்ச்சைகளுக்கு குறைவின்றி பேசியுள்ளார். இதனால் வேதனை அடைந்த மாணவர் அபினவ் சூர்யா கல்லூரி இயக்குநருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார். அந்த கடிதம் அடுத்த நாளே சில ஊடகங்களில் வெளியாகவே, சூர்யா கவனம் பெற்றார். (முழுக் கடிதம் சுட்டியில்)



அப்படி என்ன தான் பாக்ஸி பேசினார். 





பேச்சின் ஒரு சில சாரம்சங்களாக அபினவ் குறிப்பிடுவது :


“பாகிஸ்தானுடன் சண்டையிடுங்கள், அது நம் நாட்டை உறுதியாக்கும்".

“எங்கள் தலைமுறையில் பாகிஸ்தானை இரண்டு ஆக்கினோம், உங்கள் தலைமுறை அதை மேலும் நான்கு ஆக்க வேண்டும். அப்போதுதான் நாம் அமைதியாக வாழ முடியும்” 

மேலும் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி, ரானுவத்தால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றதோடல்லாமல் "அகிம்சை முட்டாள்தனமானது" என்றும் ஜெனரல் பாக்ஸி பேசியுள்ளார் என தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் சூர்யா.

பாக்ஸின் இந்த பேச்சுக்கு பிறகு, அவரை "சென்னை ஐஐடியில் டிரம்ப்" என்றே ஊடகங்கள் அழைத்தன. அந்த அளவிற்கு சிறுபான்மை, விளிம்புநிலை மக்கள் மீது தனது பேச்சில் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.



               கடந்து வந்த பாதை


இதே சென்னை ஐஐடி'யில் தான் கடந்த வருடம் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது. பிறகு நாடு முழுக்க பெரும் பிரச்சனையாக கிளர்ந்தெழுந்த போது, கல்லூரி நிர்வாகத்தால் தடை பின்வாங்கப்பட்டது. பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் சாதி ஒடுக்குமுறை என்னும் விஷச் சுழலுக்கு ரோஹித் வெமுலா என்னும் தலித் பி.எச்.டி மாணவன் இரையாக்கப்பட்டார். சாதி இந்திய ஆன்மாவை அரித்துக் கொண்டிருக்கும் ஓர் நோய்க் கூறு. இதுவரையான காலக் கட்டங்களில் இந்திய கிராமங்களை பீடித்து இருந்த நோயான சாதி பாகுபாடு. சமீப வருடங்களில் பல்கலை கழகங்களை அதிகளவில் ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளது. அதன் ஓர் கோர விளைவுதான் ரோஹித் வெமுலா, APSC விவகாரம்.

சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாறி வருகிறோம். அதனால் தான், இனைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் ஓர் பிரபலமாய் இருந்த போதும், அவர் தலித் என்பதாலயே ஆதிக்க உணர்வு கொண்ட மாணவர்களுக்கு எரிச்சலும், ஆத்திரமும் வருகிறது. உண்மையில் ஐஐடிகள் உயர்கல்வி நிறுவனங்களா? அல்லது சாதி கூடாரமா என்னும் கேள்வி எழாமல் இல்லை. அடிப்படையில் அந்த மாணவர்கள் ஆகட்டும், ஆசிரியர்கள் ஆகட்டும் இட ஒதுக்கீடு தான் அவர்கள் பிரச்சனையே. மண்டல் குழு அறிக்கை சமர்பித்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது இந்த அவல நிலை. உயர்கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் இத்தகைய அவல நிகழ்வுகள், உரிமைக்களுக்கான பேராட்டங்கள் இனி எங்கு உரத்து ஒலிக்க வேண்டும் என நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகின்றன. 
ஒவ்வொரு காலத்திலும் ஒரு அரசியல் முழக்கம் வலுப்பெறும். 
இது "ஜெய் பீம்"கான காலகட்டம்.




***

நான் எழுதிய இதே கட்டுரை விகடனில் இன்னொரு விதமாய் வெளியாகி இருந்தது. 

12/4/16

சமகால அரசியல் - தமிழக தேர்தல் - அதன் போக்கு- நீட்சி

(2016-2017'ஆம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் முதல்கட்டத்தில் தேர்வான எனது கட்டுரை. அடுத்த கட்ட எழுத்து தேர்வு 17.04.16. தலைப்பு: தமிழக அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தலில் நிகழும் மாற்றங்கள், கருத்தியல் சார்ந்த பார்வையை முன்வைத்தல்)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


அரசியல் பங்கேற்பின்மையால் ஏற்படும் மிகப்பெரிய மோசமான விளைவு என்னவென்றால் கீழ்மையாளர்களால் நாம் ஆளப்படுவது தான் – பிளேட்டோ




"அரசியல் எதுக்குப்பா நமக்கு" என்னும் கேள்வி தான் நம்மையும் சூழந்து கொண்டு இருந்தது சில ஆண்டுகள் முன்புவரை. ஆனால் நிலைமை இன்று வேறு. ஆம், போன தலைமுறைகளின் டீக்கடை பெஞ்சு'களை விஞ்சிவிட்டது இன்றைய சமூக வலைதள அரசியல் பேச்சுகள். கழுத்தை சுற்றும் பாம்புகள் போல தலைவர்களை "மீம்ஸ்"கள் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.




அதிகாரத்தின் மமதை


“கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை", தனது தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் இவை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியின் களிப்பில் வெளியானவை. ஆனால் ஓராண்டுக்குள் சென்னை பேரிடரின் போதான அவரது அரசின் கையாளாகத் தனம், இந்த மிதப்பை முற்றிலும் புரட்டிப் போடும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஏனெனில் பேரிடரால் நிகழ்ந்த இழப்புக்கு நிகரானது அரச நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பு. இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டிய பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டும் அவலம் வேறு. எளிய மக்கள் மனதில் பதிந்த இந்த கசப்பு அவ்வளவு சீக்கிரம் மாறாது.




"இலவசங்களின்" அரசியல்



2006'ம் ஆண்டு சட்டசபை தேர்தல். கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் மூழ்கி இருந்தன. அப்போது பிரதான எதிர்கட்சி தலைவரான கருணாநிதி தன்னுடைய தேர்தல் அறிக்கையுடன் வந்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: இலவச நிலம், இலவச வீடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, இலவச கணினி. ஜெயலலிதா முதல் பெரும்பாலான கட்சிகள் வரை, கருணாநிதி அரசியலை கேலிக்கூத்தாக்குகிறார் என சாடின. தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார். 2011'ம் ஆண்டு தேர்தல். இப்போது ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்: விலையில்லா மிக்சி, விலையில்லா மின்விசிறி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா வீடு. பெருவெற்றி பெற்றது அதிமுக. இடைப்பட்ட இந்த இரண்டு ஆட்சியிலும் நடந்திருக்கும் மாற்றம் என்பது "இலவசம்" என்பதிலிருந்து "விலையில்லா" என்னும் வார்த்தை வேறுபாடு அளவிலான மாற்றம் மட்டுமே. அடிப்படை தேவைகள், உரிமைகளை வழங்க மற்றும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதைதாண்டி ஆடம்பரங்களை இலவசமாக ஏற்றுக்கொள்ள மக்கள் இப்போது தயாரில்லை. நிலையான வேலையும் நிரந்தரமான வருமானமுமே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.




கருத்துக்களே தலைமை


2014'ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை தொடங்கிய சமயம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய முதல் பரப்புரையில் சொன்னார்: "இது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி". அன்று அவர் கோடிட்டு காட்டிய அந்த கருத்தியல் மோதல் இன்று அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த வருடம் அதிகமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை "மதச்சார்பின்மையாக" இருக்குமென்றால், இந்த ஆண்டு அது "கருத்து சுதந்திரமாக" இருக்கும். இந்தப் போக்கு எதேச்சையானது அல்ல. நேற்றைய பெருமாள் முருகனிலிருந்து இன்றைய கண்ணையா குமார் வரையான நிகழ்வுகளின் மூலம் அரசின் அதிகாரம் எவ்வளவு மூர்க்கமானது என்பதை மக்கள் மனதில் பதிய வைத்து வருகின்றனர் ஆட்சியாளர்கள். இனி "வளர்ச்சி" கோஷங்கள் புளித்துவிட்ட நிலையில், மதச்சார்பின்மை பற்றிய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறும். அனைவருக்கும் 15 லட்சம் என்பதை தாண்டி, உணவு ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் என்னும் கருத்து வலுப்பெறும். புல்லட் ரயில் என்றைக்கோ வரட்டும், இன்றைக்கு நான் சாப்பிடும் உணவு நாளை நான் கொல்லப்பட காரணமாக இருக்கக்கூடாது தானே?




நிகழும் மாற்றம்


அறிவியல் ரீதியாக எந்த ஒரு கருத்தும் ஒரே வடிவத்திலேயே நெடுநாள் உயிர்ப்போடு இருக்க முடியாது. 40"க்களில் சுதந்திரமும், 60"களில் சமத்துவச் சிந்தனையும், 70'களின் பிற்பகுதியில் ஜனநாயகம் நசுக்கப்பட்ட போது அதற்கு எதிரான கருத்தும், 80களில் சமூகநீதி அரசியலும் என அது தொடர்ந்தது. பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டிய அந்த அரசியல் சூழல் மத துவேஷ சக்திகளால் பின்னாட்களில் சிதறடிக்கப்பட்டது. அதேபோலவே ஒரு துருவ அரசியலும் இனி மாறப்போகும் சூழல் வலுத்து வருகிறது. ஒரு கட்சி போய், இன்னொரு கட்சி என்றல்லாமல், எந்த கொள்கைக்கு எது மாற்று கொள்கை என்னும் கேள்வி எழும் நிலை வெகுதொலைவில் இல்லை. அதேவேளை, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்த அரசியலும் தமிழ்நாட்டில் வீரியம் பெற்று வருகிறது. திராவிட அரசியல், அதன் வழி வந்த கட்சிகளால் நீர்த்துப்போனதே இதற்கு காரணம். வாச்சாந்தி வழக்கிலிருந்து பரமக்குடி துப்பாக்கி சூடு வரை பொறுத்திருந்து பார்த்து அடைந்த ஏமாற்றத்திற்கு பிறகே தங்களுக்கான அரசியல் பாதையை தலித் மக்கள் தேர்ந்தெடுத்தனர். இன்று தமிழ்நாட்டில் ஒரு தலித், முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்னும் கருத்து வலுப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.


மக்களே இறுதி எஜமானர்கள்


இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல். அதில் பெரும் பேசுபொருளாக இருக்கப்போவது ஊழலும், மதுப்பிரச்சனையும். ஊழலை பொறுத்தவரை இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை என்னவென்றால், அதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கு இல்லை என்பதை தாண்டி ஊழல் அரசில்வாதிகள் அதை நியாயப்படுத்தும் போக்கு தான். இரண்டாவது மது விலக்கு. இன்று இது குறித்து திமுகவும், அதிமுகவும் பேசுவதற்கு கூட தார்மீகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த தேர்தல் அசாதாரணமான ஒன்று. ஆட்சியிலிருக்கும் கட்சியின் மீது மிகப்பெரும் அதிருப்தி. ஆனால் அந்த அதிருப்தியை பாரம்பரிய எதிர்க் கட்சியான திமுகவால் பயன்படுத்தவோ ஒருங்கிணைக்கவோ முடியவில்லை. கிட்டதட்ட ஆறுமுனைப் போட்டி. உடனடி அரசியல் லாபத்தையும் கணக்கெடுக்காது எது மற்ற அரசியல் கட்சிகளை இந்த இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் இருந்து விலக்கி வைக்கிறது. கணக்கு 2016'ஐ பற்றியல்ல, 2021 பற்றி. மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். அது ஒரு நீண்ட காலப் பயணம். இதற்கான முயற்சியில் எண்ணிக்கை பலத்தில் இன்று சரிவு ஏற்பட்டாலும், நாளை நம்பிக்கை மிக்க மாற்றாக வளர முடியும் என்னும் ஒரே நோக்கம்தான் இதில் அடங்கி இருக்கிறது. நிர்வாக சீர்கேடுகளில் இருந்து கிரானைட் ஊழல் வரை மக்கள் பார்த்து சலித்தாகி விட்டது. இவர்கள் சுற்று முடிந்தது, இனி அவர்களுக்கு தரலாம் என்னும் நிலையை இனிமேலும் மக்கள் எடுக்கத் தயாராக இல்லை. தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் முதல்முறை முழுமையான லகான் மக்கள் கைகளில். மார்க்ஸின் கூற்றுப்படி, வரலாறு தன்னை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறது. முதல்முறை துன்பியலாகவும். இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும். இனிமேலும் அரசியலை கேலிக்கூத்தாக்க தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.




– கபிலன் இல.

(clkabilan@gmail.com).

11/3/15

தலைப்பு: உலகம் நம் உள்ளங் கைக்குள்! வாட்ஸ்ஆப், பேஸ்புக், நெட் என ஒரு மொபைல் இருந்தால் போதும். நாம் தனிமையை உணரவே மாட்டோம். செல்போனோடு நீங்கள் எந்த அளவு கன்னக்ட் ஆகி இருகிறீர்கள். உங்களின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் அது எப்படித் தீர்மனிக்கிறது என்பதை செம ஜாலியாக எழுதி அனுப்புங்களேன்.






உலகம் நம் உள்ளங்கைக்குள்'! உண்மைதான், ஆனால் இன்று நிலைமை மேலுமொரு படி முன்நகர்ந்து விட்டதாகவே உணர்கிறேன். ஆம், உலகம் நம் விரலிடுக்குகளில் அடங்கிவிட்டிருக்கிறது என்பதுதான் அது. மாற்றமடைந்து வரும்- மேலும் பல மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கும்-இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் நிகழலாம். இன்றைய தலைமுறையினருக்கு தொழில்நுட்பம் அப்படி தந்தது என்ன? தகவல் தொழில்நுட்ப புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? உலக நடப்புகளோடு நாம் நம்மை எவ்வாறு பினைத்துக் கொண்டுள்ளோம்?




நாங்கெல்லாம் அந்தக் காலத்துல'




பொதுவாகவே இங்கு கடந்த தலைமுறையை சேர்ந்தவர்களிடம், 'தொன்றுதொட்டு' இந்திய மரபாகவே கருதக் கூடியளவிற்கு ஒரு பழக்கமுண்டு, அது இன்றைய தலைமுறையினரிடம் தங்களது சுய (தலைமுறை) பெருமைகளை தம்பட்டம் அடித்துக் கொள்வது. எது எடுத்தாலும் அந்தக் காலத்தில் 'அது' நல்லாயிருந்தது, இந்தக் காலத்தில் 'இது'. நல்லாயில்லை 'பஜனை' தான். தலைவர் கவுண்டமணி காலத்திலிருந்தே கூட இவர்கள் இப்படித்தான். அதற்கு அப்பவே தலைவர் செம்மையான 'கவுண்டரும்' கொடுத்திருப்பார். ஆனால் இன்றும் - சந்தானம் தாண்டி சூரி காலம் வரையிலும்- இவர்களது அனுகுமுறையில் மாற்றமில்லாது தொடர்வது சற்றே கவலைக்குரிய(!) ஒன்றுதான்.




"ஒழுக்க" உபதேசங்கள்




ஒழுக்கத்துக்கும் தொழில்நுட்பத்திற்கும் 'முடிச்சு' போடுவதென்பது இங்கு காலங்காலமாக தொடர்ந்து அரங்கேறி வரும் ஒரு காமெடிதான். இது வந்தால், அது போய்விடும், அது வந்தால் இது போய்விடும் எனும் அடித்தளமற்ற பழமைவாத பிதற்றல்கள் ஓர் தொடர்கதையே. உதாரணத்திற்கு செல்போன் என்றதுமே, உடனே அதனால் ஏற்பட வாய்ப்பிருக்ககூடிய எதிர்மறையான விஷயங்களையே பட்டியலிடுவார்கள் 'பழமையிஸ்ட்கள்'. சாதகம், பாதகம் என்பது சகலத்திலும் உண்டு என்பதை சமயத்தில் வசதியாக மறந்துவிடுகிறார்கள். கம்ப்யூட்டர் வரத் துவங்கிய காலத்திலிருந்தே இவர்களுக்கு இதே 'புராணம் தான்'. அவ்வகையில் இந்தியாவில் 'பாதகப் பட்டியல்களே' புதிய தொழில்நுட்பத்திற்கான வரவேற்பு எனப் புரிந்துகொள்ளலாம்.




'தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கற்பிதங்கள்'


செல்போன் வந்ததிலிருந்தே நெடுநேரம் இனையத்தை பயன்படுத்துகிறான் என்பது முதல் குற்றச்சாட்டு. இணையம் என்பது எங்கோ எட்டாத தொலைவில் இருந்த காலம்போய், இன்று விரல் நுனிக்கு எட்டியிருப்பது, நிச்சயம் முன்னேற்றம் தான். முன்பெல்லாம் பல நூல்நிலையங்களில் தேடியும் கிடைத்திராத பல நூல்கள், இன்று கூகுள் செய்தால் PDF ஆகவும், 'கிண்டில்'லும் தாராளமாகக் கிடைக்கின்றன. இது அவனுக்கான குறிப்புகளை எடுக்கவும்,கல்விக்கும் பயன்படாதா?

இதை,எதையும் கணக்கிலெடுக்காது, மட்டையடியாக சிலர் இணையத்தினால் தான்,பாலியல் காணொளிகள், படங்கள் எனப் பார்த்து 'கெட்டுக் குட்டி சுவர்' ஆகிறார்கள் என 'சான்றிதழ்' அளிப்பார்கள். அவர்களிடம் கேட்க ஒன்றே ஒன்றுதான் உள்ளது. பாலியல் குறித்த(PORNOGRAPHY SITES) இணையதளங்கள் பெருமளவில் இன்று பெறுகியிருக்கிறது என்றாலும், இணையம் என்பது இதற்கு மட்டும்தான் பயன்படுகிறதா? செல்போன், இணையம் அதன் வரவு, வளர்ச்சி எல்லாம் ஒரு இருபது ஆண்டுகளாகத்தான், அதற்கு முன்பு இருந்தவர்க்கு எல்லாம் பாலியல் குறித்த எவ்வித புரிதலும் இல்லையா? அல்லது இணையம் வந்தபிறகுதான் பாலுறவு குறித்த அறிவே உதித்ததா? எந்த நாகரிகத்தில் வாழ்வபராயினும், ஓர் வயது முகிர்வுக்குப் பிறகு, எதிர் பாலினத்தவரின் மீதான பாலியல் ஈர்ப்பென்பது வெகு இயல்பானது,இயற்கையானதும் கூட. ஆதிகாலத்திலிருந்தே நிலைமை இதுதான்,அப்போது என்ன இணையமா இருந்தது.

அடுத்து மணிக்கணக்கில் பேஸ்புக், டிவிட்டர்ல மூழ்கிக்கிடக்கிறான் என்பது. இந்தக் கேள்விகள் எல்லாம் நிரூபணமில்லாத பொதுப் புத்தியில் இருந்து எழக்கூடியவை. வெற்றுப் பேச்சுகளுக்கும், வெறும் கேலி கிண்டலுக்கு மட்டும் இன்று சமூகவலைதளங்கள் பயன்படுத்த படுவதில்லை, மாற்றுச் சிந்தனைகளுக்கும் அது வழிகோல்கிறது. சமூக-அரசியல்-பொருளாதார தளத்திலான விவாதங்களும், விழிப்புணர்வு மிக்க பல உரையாடல்களும் அன்றாடம் சமூக வலைதளங்களில் நடைபெறாமல் இல்லை. அரபு நாட்டில் ஏற்பட்ட இணையப் புரட்சி அளவிற்கு இல்லையாயினும் இதுவும் ஒரு நல்ல தொடக்கம் தானே. அதுக்கெல்லாம் இன்னும் டைம் எடுக்கும் பாஸு.




எப்போதும் "தொடர்பு" எல்லைக்குள்


எதையும் கொண்டாட்ட மனநிலையுடன் பார்க்கும் தலைமுறை இன்றைய தலைமுறை. எதையும் எளிதாக எடுத்துக், கடந்து செல்லும் மனநிலை இன்றைய மனநிலை. இவ்வாறு மேலதிகமாக எப்போதும் கொண்டாட்டம் நிரம்பிய சூழலில் திளைத்திருந்தாலும் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இல்லாமல் இருப்பது இல்லை. அனு நிமிடமும் தன்னைக் குறித்த பிரக்ஞையுடனே இருக்கிறான். ஃபேஸ்புக், டிவிட்டர்,வாட்ஸ்ஆப் என இன்றைய இளைஞன் மிகவும் 'பிஸியானவன்'. வெளியில் இருந்து அட்வைஸ் பண்ணுபவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை தான். தன் நண்பர்கள் குறித்த அனைத்து விஷயங்களும் இன்று இணையம் மூலம் ஒருவனுக்கு அத்துப்படி. ஒருவிதத்தில் சமூக வலைதளங்கள் அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்தற்கான ஜன்னலாகவும் இருக்கிறது. பெரும்பாண்மையான நேரத்தை இணையம் விழுங்கி விடுவதை உணர்ந்தாலும், அதிலிருந்து தன்னை தனித்துக் கொள்ள இன்றைய இளைஞன் விரும்பவில்லை, அதை அவன் சமூகத்திலிருந்தே தன்னை அன்னியப் படுத்திக் கொள்வதாகவே உணர்கிறான். வெகு விரைவில் அத்தியாவசிய பட்டியலில், இணையமும் இணையலாம்.




தனிமையா?அப்படின்னா!




தனிமை என்பது என்றும் நிரந்தரமான ஒன்றல்ல, அவ்வப்போது நேரும் ஓர் நிகழ்வு, தனிமை ஓர் அடர்த்தியான உணர்வு, அதன் இருப்பு என்பது காலச் சூழலைப் பொருத்து தான். முன்புபோல தற்போது தனிமை ஆட்படுதலுக்கான சூழல் குறைவு. வலிந்து ஒருவர்மேல் தினிக்கப்பட்டால் தான் உண்டு. எதிலும் மனதை தேக்கிக் கொண்டு, வருந்தும் நிலை இன்று இல்லை. ஏனெனில் எங்கும் எவருடனும், எப்போதும் நாம் தொடர்பில் இருந்து கொண்டேதான் இருக்கிறோம், ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டுமல்ல, பலருடனும். முகநூலை திறந்தால் நேரம் போவதே தெரியாமல் பதிதாய் வாசிக்க ஆயிரமாயிரம் பதிவுகள் எப்போதும் இறைந்து கிடக்கின்றன. பத்தாததுக்கு நம் வீடுகளை எப்போதுமே ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கிறது தொ(ல்)லைகாட்சி, இதைத்தவிர ஒருபெரும் மக்கள் கூட்டத்தை எப்போதும் தன் கைக்குள் தொடர்ந்து வைத்தபடியே இயங்கி வருகிறது சினிமா என்னும் பிரமாண்ட ஊடகம். இதையெல்லாம் தாண்டி தான் தனிமை எனும் உணர்வு நிலைக்குள் பிரவேசிக்க இயலும் என்பதே இன்றைய எதார்த்தம்.




வாசிப்பற்ற இளைஞர் சமூகமா?




"இன்றைய இளைஞர்கள், புத்தகங்கள் வாசிப்பதில்லை". இது இன்று பெரும்பாண்மையானோரின்-குறிப்பாக படைப்புத் தளத்தில் உள்ளோரின்- கருத்தாக உள்ளது. இதை எங்கிருந்து (அ )எந்தக் கருதுகோளின் அளவில் முன் வைக்கிறார்கள், ஏதேனும் 'புள்ளி' விபரத் தகவலா எனத் தெரியவில்லை. ஆனால், அச்சுப் புத்தக/சந்தை பிரதிகளின் விற்பனையின்(எண்ணிக்கை) அடிப்படையில் தான் இக்கூற்று எழுகிறது எனப் புரிந்துகொள்ளலாம். இணையதள சேவை இளைஞர்களிடத்தில் பல்கிப் பெருகியுள்ள இன்றைய காலத்தில், 'புத்தக விற்பனையை' மட்டும் வைத்து 'வாசிப்பு இல்லை அல்லது குறைந்து வருகிறது' என முடிவுக்கு வரலாமா என தெரியவில்லை.

ஆனால் இன்றைய இளைஞர்கள் நிறைய வாசிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. அதுவும் முந்தைய காலங்களை விட அதிகமாக. பக்கங்கள் அளவில் அத்தியாயங்கள்/தலைப்பு அளவில் அவை கனக்கிலடங்காது. மெய்நிகர் வாசிப்பே இன்றைய பரவலான கட்டம். அச்சு புத்தகங்களாக வாங்கி, வாசிப்பது வேண்டுமானால் இன்று குறைந்திருக்கலாம். ஆனால் வாசிப்பு குறையவில்லை. அது வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாளடைவில் இனையத்தில் வாசிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தப்படியே தான் உள்ளது. சமூக வலைத்தளங்களில் வாசிப்பது எல்லாம் இங்கு எந்தக் கணக்கிலும் அடங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு ஒரு நாளைக்கு எத்தனை வார்த்தைகள்,வரிகள் வாசிப்பார்களோ, அதைவிட அதிகமாகத்தான் இன்று வாசிப்பின் நிலை இருக்கிறது, அதாவது உயர்ந்திருக்கிறது.




        "உலகம் என்றும் நம்மருகே"




உலகத்தோடு நாம் ஒருசேர இயங்க, நம்மை மேம்படுத்திக்கொள்ள, தொழில்நுட்பம் தான் உதவுகிறது. அது உலகத்தை நம் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டது. அதன் பல கூறுகள் வாழ்வில்,மறுக்கமுடியாதளவில் நீக்கமற நிறைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவில் நிகழ்த்திய மாற்றங்கள் ஏராளம். நாம் கற்பனை கூட செய்திராத பல சாகசங்களை அது நிகழ்த்தி உள்ளது. இந்த 21ஆம் நூற்றாண்டு மனிதர்களுக்கு அளித்த ஆகப்பெருங்கொடை நவீன கைப்பேசி. அது பெருங் கூரையின் கீழ் அனைத்து மக்களையும் இணைக்கிறது, நாடு, இனம்,தேசம் கடந்து.


(விகடன் மாணவர் பயிற்சி திட்டத்திற்கு அனுப்பியக் கட்டுரை)