27/3/20

புதுமைப்பித்தனின் "ஆற்றங்கரைப் பிள்ளையார்" குறித்த ஒரு வாதம்

(புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சிறுகதைக் குறித்தும் பிரத்தியேகமான, சமூகவியல், அரசியல்-இயங்கியல், வளர்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் விவாதிப்பதென சிறு விழைவு. அதற்கான முதல் முயற்சி).  

                 சிறுகதையை வாசிக்க தொடுக  



ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் சதுர்த்தியன்று சமூக வலைத்தளத்தில் அதன் பரவலாக்கம் குறித்த அழகியல் பூர்வமான காரணத்தை நான் பகிர்ந்ததால், நண்பர்கள் சிலர் கடிந்து கொண்டனர். பிள்ளையார், அதன் வடிவிலாகட்டும், உருவகமாகட்டும் சிறந்த படைப்பிற்குரிய பல அம்சங்களை கொண்டுள்ளது. ஏனோ அதன் மீதான வசீகரம் சிறு வயது முதல் இருந்து வந்ததற்கான காரணம் மெல்ல மெல்ல சமீப காலங்களில் தான் புலப்படுகிறது. யானைத் தலையும், மனித உடலும், சில இடங்களில் விகார தோற்றமும் பல இடங்களில் காட்சிபடுத்தப்படும் பாலகன் தோற்றமும் என கற்பனை வளமும் மரபின் வலிமையையும் ஒரு சேரத்தக்க இயங்கும் வகையில் அவ்வுருவம் தக்கவைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் விசாலத்தின், மாண்பின், அதன் வலிமையின் சான்றாக பொருட் கொள்ளத்தக்கதாக உள்ளது, யானை. ஒரு சமூகமாக கூட்டாக இயங்குவதிலும், அடிப்படை தேவைகளுக்காக பல தொலைவு பயணம் செய்வத்திலுமென ஆதி மனிதனுக்கான பல படிப்பினைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சுருக்கமாக, இயற்கையின், அதன் படைபாக்கத்தின் அதிசயிக்கத்தக்க பிரம்மாண்ட உருவகம். மனிதனுக்கு விளங்கிக்கொள்ள முடியாத வியப்பாக இயற்கை எப்படி இருந்ததோ அதே போன்றதொரு விளைவை தான் யானையும் உண்டாக்கி இருக்கும் என விழைகிறேன். அதனைக் கைகொண்டால் இயற்கையின் ஒரு பேருருவை கைகொண்டதன் மகிழ்வை, பெரும் ஆற்றலை ஆட்கொண்டதன் உணர்வை மனிதன் அடையப்பெருவதோடு, தனது ஆதிக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதிலும் ஆர்வம் பெறுவான். அவ்வாறான கைகொள்ளளின் ஆதார உருவகச் சான்று தான் பிள்ளையாரா? இன்றுவரை கோயில்களில் பல்வேறு காரணங்களுக்காக யானைகளை இருத்தி வைத்து இருக்கும் வழக்கத்தை மேலே குறிபிட்ட வாதத்தின் அடிப்படையில் விளக்கத் துணியலாமா?  





ஒரு விஷயத்தில் இருந்து அதன் இயல்பான அடுத்த படிநிலையை கடப்பதை "இயற்கை" என பெயர்க்காரணம் கொள்வதும் மனிதனின் இன்னொரு வகை ஆதிக்கம் தானா என ஐயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இந்த அர்த்தப்படுத்திகொள்ளுதலின் சிக்கலே  "வளர்ச்சி" எனும் கருத்தாக்கத்தை இயற்கையுடன் ஐக்கியபடுத்திக் கொள்வதுதான். இந்த சிந்தனை, பொருளியல் வாதத்திற்கு பிறகான, சமீபத்திய வரவாக இருந்தாலும் இத்தகைய பொருளியல் அடிப்படியிலான படிநிலை வாதம் சமூகத்தை எந்தளவுக்கு வழிநடத்தியுள்ளது என்பதை ஆராய ஆர்வம் கூடாமல் இல்லை. தொடர்ந்து நகர்வது தான் "இயற்கை" எனில் ஏன் இயற்கைக்கு மீள் வருகை புரிய வேண்டுமென உலகம் முழுவதுமுள்ள சூழலியல் செயல்பாட்டாளர்கள் அறை கூவுகிறார்கள்? இயற்கை குறித்த இருமைவாதங்களான ஸ்தூலத் தன்மை மற்றும் நெகிழ்வுப்போக்கில் எது பொருட்கொள்ளத்தக்கது? ஏனெனில், ஒரு கணம் சிந்தித்து பார்த்தால் சற்றேறக்குறைய கடந்த ஒரு நூற்றாண்டில், உலகத்தை மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது, "மாற்றம் ஒன்றே மாறாதது" எனும் இயங்கியல் வாதம் தான். இயற்கை மீதான இதன் தாக்கம் சொல்லில் அடங்காதெனினும் அதேவேளையில் மானிட சமூகத்தை ஆற்றுப்படுத்தும் நோக்கில் மனித நம்பிக்கைகள் ஸ்தூல உருவம் கொண்டனவா? இல்லையெனில் நகரத்தை தாண்டியுள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அழித்து கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில், நகர விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் பங்கேற்ப்புடன், கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தியை எப்படி புரிந்துகொள்வது?   




புதுமைப்பித்தனை படிப்பது ஒரேநேரத்தில் உற்சாகமிக்க செயல்பாடாகவும், தீவிர பயிற்சியாகவும் இருக்கிறது. "ஆற்றங்கரை பிள்ளையார்" எனும் கதை, உள்ளபடியே சிறார்க்கதை தோற்றத்துடன்(Parable) கவனத்தில் கொள்ள வேண்டிய மிகப்பெரும் கேள்விகளை தன்னுள் கொண்டுள்ளது. தத்துவ தேடலுக்குரியதாகவும், சமகால நடப்புகள் தொடர்பான விவாதப் புள்ளிகளுடனும் அமைந்துள்ளது.  தமிழ் சிறுகதை உலகை வடிவமைத்தவரும், தீர்மானித்தவருமான புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையும், சிந்தனைமரபின் நீட்சியையும் பூண்டுள்ளன.




காலம் குறித்த தரநிர்ணயப் படுத்துதலை எள்ளிநகையாடி, "கி.மு.'க்கள் எட்டாத சரித்திர அடிவானம்" என தொடங்கும் கதை, பிள்ளையார் உருவகத்தை முன்வைத்து சரித்திர பிரக்ஞையுடன் சமயம்-அரசு-ஆதிக்கம்-பன்முக பண்பாட்டுச்சூழல்-படிநிலை மாற்றம் குறித்த பெரும் விவாதத்தை நடத்த முன்வருகிறது, அதுவும் எளிமையான சிறார் கதைக்கே உரிய மொழியுடன். சமயச் சார்பான மொழி அவர் வாழ்ந்த காலத்தில் வழமையானதொரு போக்குதான் என "சந்தேகத்தின் பலனை" அளிக்க முன்வந்து வாசிக்க துவங்கினாலும், அப்படியானதொரு சார்பின்றி கதையை நகர்த்தி மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறார். நாகரீகத்தை நதியுடன் ஒப்பிடுவது, சமயத்தை மரத்தோடு ஒப்பிடுவது, சமூகத்தை மேடையாக விழைவது(நாமனைவரும் நடிகர்கள் எனும் விளக்கத்திற்காகவா?), பெரும் மாற்றங்களை, படையெடுப்புகளை இயற்கை பேரிடருடன் ஒப்பிடுவது, இஸ்லாமிய, ஆங்கிலேய படையெடுப்பை முறையே ரோஜா மற்றும் விவிலியத்துடன் ஒப்பிடுவது என ஆர்வத்தை தூண்டும் விவாதப் புள்ளிகள் ஆங்காங்கே விரவி கிடக்கின்றன. சில தரப்புகளை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில், நேரடியாக கதையை படிப்பதனால் மட்டுமே முழுமையுணர்வை சென்று சேரவும், இவ்விவாதத்தில் பங்களிக்கவும் முடியும் எனக் கருதுகிறேன். (கதைக்கான இணைய சுட்டி






அரச மரம் என்பது "ராஜ தர்மம்" எனவும், வேப்ப மரம் "சமய தர்மம்" எனக் கதையின் ஆரம்பத்தில் வரும் கூற்று விளக்கத்திற்கான தேவையின்றியே அமைந்திருகிறது. குறிப்பாக நம் நாட்டில், ஆரம்பத்தில் இருந்தே  இவ்விரண்டுக்குமிடையே நிலவும் இறுக்கமான பிடிப்பு அனைவரும் அறிந்ததே. சமூகத்தின் மீதான, அதன் பிரதிநிதியான தனிமனிதன் மீதான இவற்றின் சுமையே புதுமைப்பித்தனின் பிரதான கவலையாக தொனிக்கிறது. வேப்ப மரத்தின் வேர்கள் பிள்ளையாரின் வயிற்றை சுற்றியும், கால்கள் எங்கும் நகரமுடியா வண்ணம் பற்றிக்கொண்ட அரச மரத்தின் வேர்களும், இவ்விரண்டிற்கும் இடையே மாட்டிக் கொண்ட பிள்ளையாரின் தலையுமென அதை வெளிப்படுத்திச் செல்கிறார். இத்தகைய "கஷ்ட காலம்" வருவதற்கு முன் இரு மரங்களின் செழிப்பான வளர்ச்சியினால், அதன் நிழலின் குளிர்ச்சியில் பிள்ளையார் இன்பித்து இருந்துள்ளதாக கதை குறிப்பிடும் காலகட்டம் எதுவாக இருக்கும் எனும் கேள்விக்கு ஒரு தெளிவு கிடைத்தபாடில்லை. நவீனத்துவரான புதுமைப்பித்தன், மதங்களற்ற சமூகத்திலும், தனி மனித முதன்மை வாதத்திலும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்திருக்க கூடும் என்னும் அதே வேளையில் சமயங்களின் தாக்கத்திலும் தெளிவு கொண்டவராகவே இருக்கிறார். 




கதையில் நிகழும் இஸ்லாமிய வருகையை, "தாடி வைத்த, உடைவாள் தரித்த கைலிக் கட்டிய கிழட்டு மனிதன்" வருகையுடன் கட்டியம் கொள்கிறார். இறந்த பசுமாட்டின் தோலும், சேமித்து வைக்கப்பட்ட இறைச்சியுமென, மாற்று பண்பாட்டு "வெறித்தலுக்குறிய" கூறுகளுடன் சித்தரிப்புகள் கதையில் வெளிப்படுகின்றன.  எதிர்மறை எண்ணங்களினால் வெளிப்பட்ட படிமங்கள் என இவற்றை புறந்தள்ளிவிட எந்த நியாயமும் இருப்பதாக தெரியவில்லை. "உடைவாள்" குறித்த பிம்பம், வன்முறை வெறியாட்டத்தையும், படையெடுப்புகளையும் சுட்டுவதாகவே உள்ளன. ஒவ்வொரு குழுமத்துக்கும் இடையே உள்ள தனித்தன்மையைச் சுட்டும் அதே தருணத்தில் வகைமாதிரிகளை கட்டமைக்கும் எந்த முயற்சியும் கதையில் நிகழவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் நிலவிய அரசியல் சரிகளுக்கு (Political Correctness) ஏற்ப அத்தகைய சித்தரிப்புகள் ஒற்றுப்போய் இருப்பதற்கு வாய்ப்பிருந்தும் புதுமைப்பித்தன் அவ்வாறு முயலவில்லை என்பது வியப்பிற்குரியது. முகலாய, துருக்கிய இஸ்லாமியர்களின் வருகையை மட்டுமின்றி "மேற்கு சமுத்திரத்தின் இடரால்" ஏற்பட்ட வெள்ளையர்களின் வருகையையும் எளிமையான படிமங்களோடே அணுகுகிறார். எ.கா: "வெண்மையான, தங்க கம்பிகள் போன்ற தலைமுடியுடன், தாடியும், நீண்ட அங்கியுமாய், தோல் பையினுள் வாளும், கருப்பு அட்டை போட்ட ஒரு பெரிய புத்தகமும், சிலுவையும் வைத்திருந்தான்".  




மேற்குறிப்பிட்ட உருவகங்களை தாண்டி பண்பாட்டுக் குறிப்புகளே பெரும் ஆர்வத்தை மூட்டுகின்றன. திடீரென ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் மேடையை வந்தடைந்த "தாடிவைத்த கைலி உடுத்தியக் கிழவன்" மாமிசத்தை மட்டும் கொண்டு வரவில்லை, ஒரு ரோஜா மலரையும் கொண்டு வருகிறான். மாட்டு தோலை "பிள்ளையாருக்கு" போற்றியதோடு நில்லாமல் அருகிலேயே கொண்டு வந்த ரோஜாவை நட்டு இருபெரும் மரங்களுக்கு இடையே ஒரு சிறு செடியையும் வளர்க்கிறான். மேடையில், மரங்களுக்கிடையில் அழகாக வளர்கிறது ரோஜா செடி. 




சிறுவயதில் என் வீட்டின் அருகாமையில் வசித்துவந்த சாமிகிரி சித்தர் என்பவர், ஒவ்வொரு மாலையும் விளையாட்டு திடலில் எங்களைக் கடந்து போகும்போது பத்தடி தூரத்திலிருந்தே சுண்டி இழுக்கும் விதமாக அத்தர் அணிந்து இருந்ததை நினைவிற்கு கொண்டு வராமல் கதையின் இந்த பகுதியைக் கடந்து வர முடியவில்லை.  கதையில் வரும் ஒரு வரி, "மரக் கன்றுகள், செடியின் பரப்பை தாண்டி வேறு புல்பூண்டுகளும் முளைத்தன",ஒட்டுமொத்த சாரத்தையும் விவரித்து விடுகின்றது.       




புத்தரும், ஜீனரும் மற்றும் சங்கரன், ராமானுஜன், மத்வன் என பிள்ளையாரின் நிலை கண்டு "மேடைக்கு" பலரும் உதவ முன்வந்தும் நிலைமை சீரான பாடில்லை. அதிலும் பிள்ளையாரின் வருத்தத்திற்கும், கடும் சொற்களுக்கும் ஆளான புத்தரின் நிலையோ சோகத்திற்கு இடமானது. நிலைப் பெற்று இருக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும் போது அது "ரோஜாக்களை" மற்றுமல்ல "முட்களையும்" சேர்த்தே வாரி வரும். சமகால வாதக்களங்கள் பல இத்தகைய நுணுக்கங்களுக்கு இடமளிப்பது இல்லை. பண்பாடு எப்போதும் இருமைவாதங்களின் கொதிகலனாகவே இருந்து வந்திருக்கின்றன. எவர் நல்லவர், யார் தீயவர், எது நல்லது, எது கெட்டது, நல்ல இஸ்லாமியர், தீய/தவறான இஸ்லாமியர் என வரையறைகளை விதிக்கும் கருவியாக பண்பாடு இருப்பதை புதுமைப்பித்தனும் கவனத்தில் கொண்டு இருப்பது அவரது மேதமையைக் காட்டுகிறது. 




இறுதியாக சமகாலத் தன்மையுடன் விளங்கும் சில விவாதப் புள்ளிகளுடன் என் தரப்பை நிறைவு செய்கிறேன். ஆங்கிலேயர்கள் குறித்த பல்வேறு விமர்சன சொல்லாடல்கள் நம்மிடையே புழங்கிவந்தாலும், சிறு அளவிலேனும் ஆக்கப்பூர்வ அணிந்துரைகள், ஆதரவு மொழிகள் இல்லாமல் இல்லை. "கருப்பு தோல் அட்டைப் போட்ட ஒரு பெரிய புத்தகம்" எனும் உருவகத்தின் ஊடே புதுமைப்பித்தன் மேற்குறிப்பிட்ட இரண்டாம் தரப்பின்பால் கவனத்தைக் கோருகிறாரா என ஐயப்பட தோன்றுகிறது. ஏனெனில் காலனிய அரசாங்கத்தின் கல்வி பரவலாக்கத்தால் மிகப்பெரும் பலனை, அறிவு விரிவாக்கத்தை தமிழகம் அடைந்தது.  இன-மைய-தேசியம், அரசியல் தளத்தில் வலுப்பெற்று வரும் இக்காலத்தில் அக்குழுமச் சார்பினர் காலனிய அரசாங்கத்தின் நேர்மறை விளைவுகளை முன்வைப்பவர்களை சிறுமைப் படுத்தும் போக்கு வளர்ந்து வருவதும் இத்தைகைய விவாதத்திற்கு நியாயம் சேர்க்கிறது. கதையின் இறுதி அத்தியாத்தில், பல தரப்பட்ட மக்கள் குழுமி "மேடையில்" எது, எப்படி இருக்க வேண்டும் எனும் சச்சரவுகளில் ஈடுபட்டு வரும் தருணத்தில்,  நாம்- இனி வரும் காலங்களில்- வாழ்நாள் தோறும் முட்டி மோதி ஒருமித்த, இணக்கமான புரிதலுக்கு வழிகோல தவிக்கக் கூடிய ஒரு கேள்வியை கேட்கிறார் புதுமைப்பித்தன், "மரத்திற்கு பிள்ளையாரா, பிள்ளையாருக்கு மரமா?".                   

20/3/20

"அசுரவதம் இனி நடக்காது" கட்டுரை குறித்த இல. பூவிழியின் பார்வை.

விவாதத்திற்கு இடம்பெற்ற கட்டுரையின் சுட்டி: தொடுகை 




பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் அவர்களது கட்டுரை உயிர்மெய் வலைதளத்தில் நான் வாசிக்கப்பெற்றேன்.  அவர் தனது சிறு வயதில் தான் ஒரு சுவற்றில் கண்ட வாசகம் ஒன்றினை நினைவு வைத்து அதன் விளக்கமறிந்து அதனைப் போலவே தனது கட்டுரையின் பெயரையும் அமைத்துக்கொண்டார். அந்த வாசகம், “வாலி வதம் இனி நடக்காது”.

அவர் தனது கட்டுரையில் விளக்கியது அசுரன் திரைப்படம் மற்றும் அதன் கலாசாரப் பிரதியின் அர்த்த தளங்கள்.
கலாச்சாரப் பிரதி என்பது நாம் பின்பற்றி வந்த கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டாக மற்றும் அதன் அர்த்த தளங்கள் என்பது பலவகை அர்த்தங்கள் நிறைந்த தளமாக உள்ளது. 


நான் வாசித்ததில் அவர் முதலில் புராண இதிகாசங்களைப் பற்றி கூறுகிறார். மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய புராண இதிகாசங்கள் தேவர்கள் மற்றும் அரக்கர்களை மையமாக வைத்து உருவாக்கப் பெற்றவை. இதில் தேவர்களே நன்மை நிறைந்தவர்கள் எனவும் அசுரர்கள் அரக்க குணம் அதாவது தீய குணம் படைத்தவர்கள் என்னும் கருத்து அந்தக் காலத்தில் இருந்தே நிலவி வந்துள்ளது.

அதற்கு எதிர்கதையாடல் கூறும் விதமாக பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டதை பட்டியலிடுகிறார். கதையாடல் என்பது ஒரு கூற்றின் ஒரு முகத்தை கூறுவது. அதுவே எதிர்கதையாடல் என்பது கூற்றின் மறு தரப்பை எடுத்து காட்டுவது. அவ்வாறு எதிர்கதையாடல் என கூறுபடுவது அரக்கர்கள் என சித்தரிக்கப்படும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எழுப்பப்படும் குரல். அசுரன் திரைப்படம் சாகச நாயகனைக் கொண்டு யதார்த்த மற்றும் தார்மீக கதையாடலை கொண்டுள்ள விதத்தை போற்றுகிறார்.

பொதுவாக எதிர்கதையாடல் சொல்லும் திரைப்படத்தின் முடிவுகள் சோகம் நிறைந்ததாகவே முடிகபெற்று வந்தது. எடுத்துகாட்டாக சில திரைப்படங்களின் பெயரை பேராசிரியர் பட்டியலிடுகிறார். என்னளவில், அவ்வாறு முடியும் முடிவுகளை தகர்த்தெறிந்த படமாகவே அசுரன் திகழ்கிறது என்பது கட்டுரையின் உயிர்ப்பு.


***
விவாத மரபை ஊக்குவிக்கும் விதமாக தனிப்பட்ட தளத்தில் நடந்த உரையாடலை இங்கே பதிவிட்டுள்ளேன். 

கட்டுரையாளர் உயிர்தொழில்நுட்பம் மூன்றாமாண்டு படிக்கிறார். சமூக பண்பாட்டு நிகழ்வொன்ற்றைக் குறித்த அவரின் முதல் பங்களிப்பு இது.