14/2/15

கடந்து செல்லா காதல்....

கரைந்தோடும் நினைவுகளின் வழியே
கவிதை பாட, சொற்களைத் தேடுகிறேன்
என்றாவது ஒரு நாள்
சொற்கள் கிட்டலாம்
என் வலியை  உணர்த்தலாம்
எனில் உன் அன்பை போல
அதுவும் தற்காலிகமானதாக
இல்லாது இருத்தலே
போதுமானது
எனக்கு .

கண்களின் ஓரம்
கசிந்தோடும் கண்ணீரின் ஊடே
உன்னுடனான எனது அன்பை
மீட்க முயற்சிக்கிறேன்
நாள்தோறும்
தோற்றுத்தான் போனேன்
இன்றும்.

அன்பிற்கான தேடலின்போது ஆன
எனது தோல்விகள்
புதிதா என்ன

நீ கொடுத்த மலர்களை
மட்டுமல்ல
வீசிச்சென்ற முட்களையும் கூட
தாங்கியே நிற்கிறேன்
தயக்கமின்றி

மீளாதப் பொழுதுகள் பல
தாளாத தனிமையில்
வெம்மை படர்ந்த
அந்தி வெளியில் ,
அன்பிற்கான எனது
பிரயாசைகள்
தொடர்ந்து வண்ணமே
உள்ளன

நீ விட்டுச்சென்ற சுவடுகளோடு
அன்பிற்கான படிப்பினையாக
உன் நாட்கள் என
வாழ்வின் அடுத்த
படிநிலையை
மெல்ல கடக்கவே நினைக்கிறன்

எக்காலத்துக்கும் ஆன அன்பென
இவ்வுலகில் ஏதேனும் உண்டா, என 
எஞ்சி நிற்கும் கேள்வியோடே
தொடர்கிறேன்
எனது பயணத்தை
"அன்பு கிலோ எத்தனை?"
எனக் கேட்காத
உலகத்தை
நோக்கி ...