5/6/14

மாற்றம் அல்ல, தொடர்ச்சியே!

அக்கீல் பில்கிராமி கொலம்பியா பல்கலைக்கழகத் தத்துவத் துறை அறிஞர் 

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களின் பின்னணியில், புதிய பிரதமர் மோடி “இந்தியாவின் அரசியல் பிரபஞ்சத்தினையே முற்றிலும் மாற்றி அமைக்கப் போகிறார்” என ‘கார்டியன்’ ஏட்டில் அஷூதோஷ் வர்ஷினி என்ற விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலப் பாசாங்கு வார்த்தைகள் கூட அரசியல்வாதிகளுக்கு இத்தகைய தொரு மலிவான வழியில் புகழ் தோற் றத்தினைக் கொடுத்து விடுகின்றன. தேர்தல் காலத்தில் அச்சிலும், திரை யிலும் மோடியும் அவரது பாசாங்குப் பேச்சுக்களும் இல்லாமல் எந்த ஊடகஇருந்தது? மாறிவரும் இன்றைய நவீனகால பொது வாழ்க்கையின் பிரதிபலிப் பின் ஒரு பகுதியே இது. இந்தத் தோற் றத்தினைப் பெறுவதற்கு மோடி எடுத்துக் கொண்ட கடுமையான முயற்சிகள், கார்ப் பரேட்டு நிறுவனங்களும், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் இதற்காக செலவிட்ட நிதி என அனைத் தும் சேர்ந்து மோடிக்கு நாடு முழுவதும் இத்தகைய தோற்றத்தினை மக்கள் மத்தியில் உருவாக்கி விட்டது என்னவோ உண்மை.



தன்னடக்கப் பாசாங்கு


மோடியின் தந்திரம் பலித்து விட்டது. நாட்டின் மிக உயர்ந்த பதவியினை அவர் அடைந்து விட்டார். ஆனால், அவர் இப்போது நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தனது இயல்பான தன்மையினை மறைத்து, மிகவும் தன்னடக்கப் பாசாங்குடன், ஏழை மக்களைப் பற்றியும், உழைக்கும் மக்களைப் பற்றியும் மிகவும் அக்கறையுடன் பேசத் தொடங்கியுள்ளார். இவர் தொடரப் போகும் கொள்கைகளால் எந்த மக்கள் மேலும் வறுமைக்குள்ளும் பாதுகாப்பற்ற வாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படப் போகின்றனரோ, அந்த மக்கள் குறித்து இப்போது மிக்கப் பரிவுடன் பேசி வருகிறார். தேர்தலுக்கு முன்பு மோடியை எதிர்த்தவர்களில் சிலர் கூட, அவர் ஏதாவது நல்லது செய்யக் கூடும் என்று நம்புகின்ற இன்றைய நிலையில், இதைச் சற்று அழுத்தமாக கூற வேண்டியத் தேவை உள்ளது எனக் கருதுகிறேன்.

மெத்தனம் கூடாது

ஒரு ஜனநாயகத்தில் தேர்தல்கள் குறித்து இரண்டு விஷயங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு, அந்த முடிவுகள் ஒருவருக்கு அச்சமளிப்பதாக இருப்பினும், எந்த காரணத்தைக் கொண்டும் வாக்களித்த மக்கள் மீது குற்றம் சொல்லக் கூடாது. இதைத் தாண்டி பெருந்தன்மையுடன் பேசுவதற்கு இதில் வேறொன்றுமில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து விமர்சனபூர்வமாக கணிப்புகளைச் செய்யும் அம்சத்தில் மட்டும் அசட்டையாக இருந்து விடக் கூடாது. அவப்பெயர் கொண்ட ஒருவர் வெற்றி பெற்று விட்டதனாலேயே, அந்த வெற்றியினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் தனது சித்தாந்த நம்பிக்கைகளையும், இயல்புக் குணாதிசயங்களையும் மாற்றிக் கொள்வார் என்று முடிவுக்கு வந்து விடக் கூடாது. அத்தகைய மெத்தனப் போக்கு தீயது. அது நமது நம்பிக்கைகளையும் போராட்டங்களையும் பாழ்படுத்தி விடும்.

பாசிசம் என்பது என்ன?

1930-40களில் ஐரோப்பாவில் இருந்த நிலைமைகளை மனதில் கொண்டு, அந்த அடிப்படையில், இன்று காலத்திற்குப் பொருந்தாத வகையில், மோடியை ‘பாசிஸ்ட்’ என்று அழைப்பது அறிவீனம் என, மோடி எதிர்ப்பாளர்கள் குறித்து சில அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். அப்படியானால், பாசிசம் என்பது தான் என்ன? பாசிசத்திற்கு இரண்டு முக்கிய குணாம்சங்கள் உண்டு. ஒன்று, தனது நாட்டிற்குள்ளேயே அந்நிய எதிரிகள் என்று ஒரு பகுதியினரை அடையாளப்படுத்துவது. (ஜெர்மனியில், யூதர்கள், நாடோடிஜிப்சிகள் இவ்வாறு அடையாளப்படுத்தப் பட்டனர்). இரண்டு, தேசத்தின் நலன்களையும், கார்ப்பரேட் நலன்களையும் இரண்டறக் கலப்பது. பாசிசம் என்பது அது தான் என்று பாசிசத்திற்கு முசோலினி அளித்த அந்த புகழ் பெற்ற விளக்கம் அந்தவிமர்சகர்களுக்கு நினைவுக்கு வரவில்லை போலும். முஸ்லிம்கள் குறித்த விஷயத்தில் மோடியின் கடந்த கால வரலாறு, அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் என இவ்விரண்டையும் பொருத்திப் பார்த்தால் மோடி யார் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா என்ன?.

பசப்பல்கள்!


மாற்றம் குறித்தும், இந்தியாவின் புதிய எதிர்காலம் குறித்தும் மோடி விடுக்கும் அறிக்கைகளை பசப்பல்கள் என்று நான் கூறுவதற்கு அழுத்தமான காரணங்கள் உண்டு. மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் பின்பற்றிய கொள்கைகளைத் தான் மோடியும் தொடரவுள்ளார். ஒரேஒரு மாற்றம் என்னவெனில், பி.ஜே.பிஅந்தக் கொள்கைகளை சற்று சாமர்த்தியமாக நிறைவேற்றும். தற்போதைக்கு, பொருளாதார அரங்கினை விட்டு விடுங்கள். உதட்டளவில் மதச்சார்பின்மை பேசிக் கொண்டாலும், இந்திரா காந்தியும், பின்னர் ராஜீவ் காந்தியும் இந்திய அரசியலில் பெரும்பான்மைவாத, வகுப்புவாத அம்சங்களை நுழைத்தனர். பின்னர் பி.ஜே.பி அதை எவ்வாறு அவற்றின் தர்க்கரீதியான எல்லைக்கு வெற்றிகரமாக எடுத்துச் சென்றது என்பது நாம் அறிந்தது தானே?

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், உணவுப் பாது காப்புத் திட்டம் என்பனவெல்லாம் ஐ.மு.கூ அரசின் திட்டங்களே எனினும், அதனைச் சரியாக நிறைவேற்றாமல், அது அவற்றைக் கிடப்பில் போட்டு விட்டது. ஆனால், பி.ஜே.பி இது போன்ற விஷயங்களில் சாதுரியமாக நடந்து கொள்ளும். மோடியின் ‘குஜராத் மாடலுக்கும்’, சந்திரபாபு நாயுடுவின் ‘ஆந்திரா மாட லுக்கும்’ இடையில் என்ன வேறுபாடு? சென்ற முறை சந்திரபாபு நாயுடு ஆட்சியின் முடிவில் என்ன ஏற்பட்டது? பெருநகர் அடிப்படியிலான வளர்ச்சி என்ற பெயரில் சாமானிய மக்களின் நலன்களைக் காவு கொடுத்ததன் விளைவாக ஆந்திராவில் அன்று சந்திரபாபு நாயுடுவின் கட்சி தோற்றது மட்டுமல்ல, அந்த மாநிலமே இன்று இரண்டு துண்டுகளாகப் பிளக்கப்பட்டு விட்டதே?.

ஊழல் ஒழிந்து விடுமா?

காங்கிரஸ் ஆட்சியில் உருவான பெரும் ஊழல்களை எல்லாம் ஒழித்து விடுவோம் என பி.ஜே.பி கூறுவதும் மற்றொரு பசப்பலேயாகும். இதற்கு முந்தைய கால கட்டத்தில் இதே பி.ஜே.பி ஊழல் குறித்த அம்சத்தில் எப்படி நடந்து கொண்டது என்பது நாம் அறிந்தது தானே? கடந்த இருபது ஆண்டுகளில் ஊழல் இந்திய முதலாளித்துவத்தின் உள்கட்டுமானமாக மாறியிருக்கும் நிலையில், அதை ஒழிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதைப் பொறுத்த மட்டில், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது பிரச்சனையே அல்ல.

முஸ்லிம் இளைஞர்கள்!

இந்தத் தேர்தல் காலத்தில், படித்த முஸ்லிம் இளைஞர்களின் மனநிலை, பிற பொதுவான முஸ்லிம் மக்களின் மன நிலையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தது என, ‘பைனான்ஷியல் டைம்ஸ்’ (22.05.2014) ஏட்டில் ஒரு விமர்சகர் எழுதியிருக்கிறார். மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்கு சாதகமான மனநிலையில் அவர்கள் இருந்தனர் என்றும் கூறுகிறார். இது ஏறக்குறைய ஜின்னா காலத்தில் இருந்தே, அதாவது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடர்கிற நிலைமை தான். ஒன்றுபட்ட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள், குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் படித்த இளைஞர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டவர்களாக இருந்தனர்என முன்பு மௌலானா ஆசாத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். இப்போதும் கூட, மோடி பெரும்பான்மை வாதத்தில் நம்பிக்கை கொண்டவர் எனினும், பெருநகர் அடிப்படையிலான வளர்ச்சி என்று வரும் போது வேலை வாய்ப்புக்கள் உருவாகலாம் என்ற நப்பாசை அவர் களுக்கு இருந்திருக்கக் கூடும். 

இது என்ன புதிதா?

பெருநகர் அடிப்படையிலான வளர்ச்சி என்பது ஒன்றும் புதிதல்ல. இதைத்தானே முந்தைய அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கூறி வந்தார்? 2008 மே மாதம் டெஹல்கா ஏட்டிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய நாட்டின் 85 சதவீதத்தை நகரங்களாக மாற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். இந்திய நாட்டில், ஆயிரக்கணக்கான வருடங்களாக விவசாயத்தை நம்பி வாழும் கிராமப்புற மக்களின் வாழ்க்கையினை ஒரேயடியாக மாற்றி விடுவது அவ்வளவு எளிதா என்ன? வறுமையில் வாடும் அந்த மக்களின் வாழ்நிலையினை மேலும் மோசமாக்குவதன் மூலம் தான், இந்தச் சீர்திருத்தத்தினை இன்று அவர்கள் தொடங்க முடியும்.

நவீன தாராளவாதமும், அதிருப்தியும்!

மாற்றம் குறித்த வாக்குறுதிகள் ஒன்றும் புதிதல்லவே. 2004 தேர்தல் களை சற்று நினைத்துப் பாருங்கள். ‘ஒளிரும் இந்தியா’ என பி.ஜே.பி கூறிய பசப்பல் வார்த்தைகளை எவரும் அன்று நம்பவில்லை. ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது. பத்து ஆண்டுகளாக நடைபெற்ற மோசமான ஆட்சியின் பின்னணியில், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் அவ்வளவு வலு வாகவும் இல்லை. அது மக்களிடம் எடுபடவுமில்லை. நவீன தாராளவாதக் கொள்கைகளே அனைத்து அவலங்களுக்கும் காரணம் என்ற உண்மையினை மக்கள் புரிந்து கொள்ளாதவாறு தடுக்கும் வகையில் ஊடகங்களின் செயல்பாடுகள் அமைந்து விட்டன. அந்த நோக்கில் செயல்படும் பல பண்டிதர்கள், விமர்சகர்களின் சேவகமும் இதன் பின்னணியில் இருந்தது. நாட்டு நடப்புக்கள் குறித்த குறைந்தபட்ச விவரங்களும், நேர்மையான பரிசீலனையும் இருந்தால் இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

நேர்மையான அரசியல் கட்சிகள்!

அதே வேளையில், இந்த நிலைமை தான் எப்போதும் தொடரும் என விரக்தி அடையத் தேவையில்லை. நவீன தாராளவாதக் கொள்கைகளை எதிர்க்கும் நேர்மையான அரசியல் கட்சிகள் தங்களது பலவீனத்தைக் களைந்து, தங்களது அரசியல் சக்தியினையும், அரசியல் உறுதியினையும் ஒன்று திரட்டிப் போராடும் நிலை தோன்றினால் அது சாத்தியமானதே. இன்றைய சூழலில், அது உடனடியாக சாத்தியமில்லை என்பது போலத் தோன்றக் கூடும். ஆனால், இன்று வரை கடைப்பிடிக்கப் பட்டிருக்கும் கொள்கைகளும், நாளையும் மோடி தொடரவிருக்கிற மேலும் கடுமையான நவீன தாராளவாதக் கொள்கைகளும், உண்மையான மாற்றத்திற்கான சூழ்நிலையினையும், அதற்காகப் போராடும் உத்வேகத்தினையும் கண்டிப்பாக உருவாக்கி விடும்.

வழி காட்டும் அரசியல் எது?

இது ஒன்றும் நடக்க முடியாதது அல்ல. உலகின் சில பகுதிகளில் இது ஏற்கனவே தொடங்கி விட்டது. தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் அது எழுச்சி பெற்று வருகிறது. ஆனாலும், சர்வதேச ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்து வருகின்றன. கடுமையான எதிர்மறைச் சூழலுக்கிடையிலும் அந்நாடுகளின் மக்கள் நடத்தும் இயக்கங்களின் பின்னணியில், இன்று மாற்றுக் கொள்கைகளை அமலாக்கும் அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரு கின்றன. அந்த அரசுகள், சர்வதேச நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தங்களையும் மீறி, எளிய மக்களின் வாழ்நிலையை சிறிது சிறிதாக உயர்த்தி வருகின்றன. இந்தப் பின்னணி சில கேள்விகளை எழுப்புகிறது. மக்கள் அத்தகைய அரசு களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வழிகாட்டிய அரசியல் எது? மக்களை அணிதிரட்டும் வகையில் மக்கள் மத்தியில் அந்த அரசியல் எவ்வாறு கட்ட மைக்கப்படுகிறது? நவீன தாரளவாதக் கொள்கைகளின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகாமல், அதை அந்த அரசுகள் எப்படி எதிர்த்து நிற்கின்றன? அத்த கைய அரசியலையும், அரசியல் பொரு ளாதாரத்தையும் அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், மேற்கண்ட கேள்வி களுக்கான உரிய விடைகளையும் தேடிக் கண்டுணர்தல் இன்று மிகவும் அவசியம்.

தொகுப்பு:இ.எம். ஜோசப் நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 30.05.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக