6/7/14

டாலரை தவிர்க்கும் முயற்சிகள்! -பிரபாத் பட்நாயக் (05/07/2014ல் தீக்கதிரில் வெளியான கட்டுரை)




வளர்ச்சியடைந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், தேவைப்படும் போதெல்லாம், பாசிச சக்திகளைப் பயன்படுத்துவது உண்டு. இன்று அதனை உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராகச் செய்திருக்கின்றன. அத்தகைய சதிகளை எதிர்த்து ரஷ்யா நடவடிக்கையில் இறங்கிய போது, ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதற்கு பதிலடியாக, ரஷ்ய அதிபர் புடின், உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். டாலர் என்ற ரிசர்வ் நாணயம் (உலகப் பொது நாணயம்) இல்லாமலேயே நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் வர்த்தகம் செய்து கொள்வதே அவரது திட்டம்.
எந்தெந்த நாடுகளெல்லாம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகி உள்ளனவோ, அல்லது அவற்றை எதிர்த்துத் துணிந்து நிற்கின்றனவோ, அவற்றோடு அத்தகைய இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வதற்கு ரஷ்யா தயாராகி வருகிறது. அத்தகைய ஒப்பந்தங்களில் பணப்பட்டுவாடா அமெரிக்க டாலரிலும் இருக்காது, ஐரோப்பிய யூரோவிலும் இருக்காது. மாறாக, இரு தரப்பு ஒப்பந்த நாடுகளின் நாணயங்களிலேயே இருக்கும். சீனா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளையுமே அதிபர் புடின் இதில் அதிகம்நம்புகிறார். அடுத்துவரும் 30 ஆண்டுகளுக்கு 400 பில்லியன் டாலர் அளவிலான எரிவாயுவினை சீனாவிற்கு சப்ளைசெய்வதென ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த மே மாதம் 21ம் நாள் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம், பணப்பரிவர்த்தனை டாலரில் இல்லை என்பதுதான்.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் புதிதல்ல!
‘இந்தியாவிற்கு இது போன்ற ஒப்பந்தங்கள் புதியவை அல்ல. பல ஆண்டு களாக முந்தைய சோவியத் யூனியனுடனும், கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளுடனும் இந்தியா செய்து கொண்ட இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் இது போன்றவையே. ஒரு குறிப்பிட்ட செலாவணி மதிப்பு மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலைகளின் அடிப்படையில் இந்தியா செய்து கொண்ட அத்தகைய ஒப்பந்தங்களில், பணப் பரிவர்த்தனையில் டாலரின் பங்கு எதுவுமில்லை. தற்போது புடின் சோவியத் யூனியன் காலத்திய அதேசெயல் முறையைத்தான் கையிலெடுத்துள்ளார்.

இதனால் லாபம் என்ன?
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், 30 டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு கொண்ட ‘ஏ’ என்ற ஒரு நாடு ‘பி’ என்ற மற்றொரு நாட்டிற்கு 100 டாலர் மதிப்பிற்கான பண்டங்களை ஏற்றுமதி செய்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது, அந்த ‘ஏ’ நாடு தனதுகையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணியான 30 டாலர், அத்துடன் தான் ஏற்றுமதி செய்த பண்டமதிப்பான 100 டாலர் என இரண்டையும் சேர்த்து, 130 டாலர் அளவிற்குத்தான் ‘பி’ நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். அதே நேரம் அவரவருடைய சொந்த நாணயங்களில் இந்த ஒப்பந்தம் நடைபெறும் என்றால், கூடுதலாக பண்டங்களை ‘ஏ’ நாட்டால் ‘பி’ நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். ஒரு வேளை அவை இரண்டும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி பொருளாதாரத் தடைகளின் காரணமாக டாலர் என்ற ரிசர்வ் நாணயத்தை பெற முடியாத நாடுகளாக இருந்தால், இது மாதிரியான இருதரப்பு ஒப்பந்தங்கள், அவர்களுடைய வர்த்தகத்தை கணிசமாக உயர்த்த உதவும்.

அரிதாகும் அந்நியச் செலாவணி!
வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் காரணமாகவும் சில நாடுகளுக்கு ரிசர்வ் நாணயம் கிடைக்காமல் போகலாம். அது தவிர, பொருளாதார மந்தம் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் கிராக்கி குறையும் போது, அந்நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்கள் குறைகின்றன. இதனாலும், சில நாடுகளுக்கு ரிசர்வ் நாணயம் கிடைப்பது அரிதாகி விடக் கூடும். அந்தப் பிரச்சனையை இந்த ரஷ்ய பாணி இரு தரப்பு ஒப்பந்தங்கள் தீர்த்து வைக்கின்றன. இதில் ஈடுபடும் நாடுகள் பரஸ்பரம் மற்றவர்களின் நாணயங்களை ரிசர்வ் நாணயம் போன்றே ஏற்றுக் கொள்வதால், நடைமுறையில் இவர்களது அந்நியச் செலாவணி கையிருப்பும், வர்த்தகமும் விரிவடைகின்றன.

டாலரைத் தவிர்த்தல்!
இன்றைய உலகில் டாலரே ரிசர்வ் நாணயமாக இருக்கும் சூழலில் அதைவிடுத்து பிற நாட்டு நாண யங்களையும் ரிசர்வ் நாணயங்களாக ஏற்றுக் கொள்ளும் இந்த முறையினை ரஷ்யர்கள் பரிவர்த்தனையில் “டாலரைத் தவிர்த்தல்” (De-dollarisation) என்று அழைக்கின்றனர். இதனை ஊக்கப் படுத்துவதற்காக, ரஷ்யக் கம்பெனிகள் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு வர்த்தகத்தை ரஷ்ய நாணயமான ரூபிளிலேயே செய்ய வேண்டும் என்று, அண்மையில் ரஷ்யா சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

நீண்ட கால விளைவுகள்!
உலக ரிசர்வ் நாணயமான டாலர் அமெரிக்காவின் உள்நாட்டு நாணய மாகவும் இருப்பதால், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அதை எளிதில் அச்சிட்டுக் கொள்ள முடிகிறது. தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எவ்வளவு பெரிதானலும், டாலரை அச்சிட்டு அதனை ஈடு செய்து கொள்ள முடிகிறது. பின்னர் இப்படி அச்சடித்த டாலர்களை வைத்து அரசின் கருவூலப் பத்திரங்கள் போன்ற நிதிச் சொத்துக்களை வாங்கி, அதன் மூலம் பணத்தை பொருளாதாரத்திற்குள் புழக்கத்தில் விடுகிறது. பிற நாடுகள் அமெரிக்க டாலர் களைத் தவிர, வட்டி தரக் கூடிய டாலர் சொத்துக்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அந்தச் சொத்துக்களை அவர்களுக்கு விற்று, தான் அச்சடித்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. ஃபெடரல் ரிசர்வைப் பொறுத்த அளவில், இந்த இரண்டுமே ஒன்றுதான். பிற நாடுகள் விரும்புவது டாலர் என்றாலும், வட்டி தரும் வேறு நிதிச் சொத்து என்றாலும் அமெரிக்க நடப்புக் கணக்கிற்கு அதனால், எந்தப் பாதகமும் ஏற்படுவது இல்லை.

இரண்டு சூழல்களிலுமே
ஒரு வேளை நாம் ஏற்கனவே சொன்னபடி சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனைகளில் டாலர் தவிர்க்கப்படும் என்றால், அமெரிக்கா இப்படி டாலரை அச்சடித்து தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எளிதாகச் சரி செய்து கொள்ள முடியாது. டாலருக்கான கிராக்கி அவ்வாறு குறையும் போது, தேவைக்கு அதிகமாக டாலர் அச்சடிக்கப்பட்டால் டாலரின் மதிப்புமோசமாக வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அத்தகைய சூழலில் சொத்துடைமையளர்கள் தங்களுடைய சொத்துக்களை, தங்கம், வெள்ளி போன்ற பண்டங்களிலோ, பிற வடிவங்களிலோ மாற்றிக் கொள்ளவே விரும்புவார்கள்.
அதனை நோக்கியே செயல்படுவார்கள். அப்படி செய்யும்போது 1970களின் துவக்கத்தில் ஏற்பட்டது போன்று, பணவீக்கம் அதிகரித்து விடும். வேறு வழியில்லாமல் அமெரிக்கா தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைத்துக் கொண்டால், தனது மக்களின் நுகர்விற்காக அமெரிக்கா இன்று இறக்குமதி செய்யும் பண்டங்களின் அளவுகுறையும். அந்த அளவிற்கு அமெரிக்க மக்களின் வாழ்க்கைகத் தரமும் வீழ்ச்சியடையும். இராணுவச் செலவுகளையும் சுருக்க வேண்டிய தேவையின் காரணமாக, அமெரிக்காவின் இராணுவ பலமும் குறையும்.
அத்தகைய நிலை ஏகாதிபத்தியத்தின் தலைவனான அமெரிக்காவிற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இரண்டு சூழல்களிலும் நெருக்கடி கடுமையாகி, அதனால் முதலாளித்துவ உலகமும், அமெரிக்க மேலாதிக்கமும் ஆட்டம் காண நேரிடும். டாலர் ரிசர்வ் ஏற்பாட்டிலிருந்து எந்த நாடேனும் விலகி, வேறு நாணயங்களுக்குச் சென்றால், அமெரிக்கா அதை கடுமையாக எதிர்கொள்ளும் என்பது அறிந்ததே. இராக் தனது எண்ணெய் வர்த்தகப் பரிவர்த்தனையை டாலரிலிருந்து யூரோவிற்கு மாற்றத் திட்டமிட்டதுதான் இராக் ஆக்கிரமிப்பிற்கு முக்கியமான காரணம் என்று இன்றைக்கும் ஒரு சந்தேகம் உள்ளது.

சீனாவின் தேவை!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளான ரஷ்யாவிற்கும், ஈரானுக்கும் டாலரைத் தவிர்க்கும் இயல்பான தேவை உள்ளது. சீனாவிற்கு அத்தகைய தேவை வேறு வகையில் உள்ளது. ஆனால், அதில் சிக்கலும் உள்ளது. பெருமளவிலான தனது நடப்புக் கணக்கு உபரியின் காரணமாக, சீனா ஆகப்பெருமளவில் டாலரையும், டாலர் மதிப்பிலான சொத்துகளையும் குவித்து வைத்திருக்கிறது. அனைத்தையும் டாலர் மதிப்பிலேயே வைத்துக் கொள்ளும் அபாயத் தினை மனதில் கொண்டு, மெள்ள மெள்ள அதை தங்கமாகவும், யூரோவாகவும் மாற்றிக் கொண்டு வருகிறது. அண்மைக் காலங்களில் யூரோவின் மதிப்பு சற்றுவலுப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தங்க இறக்குமதியில் இந்தியாவைப் போல தனியார் என்று இல்லாமல், சீன அரசாங்கமே அதைச் செய்கிறது.

சீனாவின் சங்கடம்!
டாலரைத் தவிர்க்கும் நடவடிக்கை, டாலரின் மதிப்பை வீழ்த்தி விடும். டாலர் மதிப்பில் சொத்துக்களைக் குவித்திருக்கும் சீனாவிற்கு இதனால், மூலதனஇழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. மரத்தில் தான் அமர்ந்திருக்கும் கிளையினையே வெட்டிய மகாகவி காளி தாசனின் கதையாக அது ஆகிவிடும். எனவே தான் சீனா சத்தமில்லாமல் இரகசியமாக, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாமல் டாலரிலிருந்து வேறு வடிவத்திற்கு மாறுகிறது. இந்தப்புரிதலுடன் தான், ரஷ்ய - சீன ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் நிலை!
இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்ந்து அமெரிக்காவிற்கு அடிபணிந்து செல்வதாகவே உள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீறுவதற்கு நிர்ப்பந்தம் ஏற்படும் போது, இது தற்காலிக நடவடிக்கை தான் என்று கூறி, அமெரிக்காவின் அனுமதியைப் பெற்ற பின்னரே, இந்தியா அதைச் செய்கிறது. ஒருவேளை தடைகளை உடைத்து ஈரானுடன் வர்த்தகம் செய்வது என்று இந்தியா முடிவு செய்தால், தடை மீறிய வர்த்தகத்திற்கு காப்புறுதி வழங்க நம் நாட்டின் பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குக் கூட அதற்கான பலம் இல்லை.
ஏனெனில், அவையெல்லாம் இன்றைக்கு, மேற்கத்திய இன்சூரன்ஸ் கம்பெனிகள் தரும் மறு காப்பீட்டினை நம்பி நிற்க வேண்டிய நிலையில் உள்ளன. தடை மீறிய வர்த்தகம் என்று தெரிந்தால் மேற்கத்திய கம்பெனிகளிடமிருந்து அதற்கான மறு காப்பீடு கிடைக்காது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலமே அதற்குத் தீர்வு காண முடியும். அப்போது தான் குறைந்தபட்ச தன்னதிகாரத்தினை காப்பாற்றிக் கொள்ள இயலும். மேற்கத்திய கம்பெனிகளை நாடி மறுகாப்பீடு செய்வதைத் தவிர்க்க வேண்டுமெனில், பொதுத் துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளின் வலிமையினை அதிகரிக்கும் வகையில், கணிசமான அரசு முதலீடு தேவைப் படுகிறது. ஆனால், அதையெல்லாம் செய்வதற்கு, அதாவது, பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கு அடிபணியும் நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்வதற்கு இந்தியா தயாரில்லை.

சோவியத் யூனியனும்
ரஷ்யாவும் ஒன்றல்ல!
ரஷ்ய அதிபர் புடினின் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அவசரப்பட்டு நாம் எந்த முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. ரஷ்யச் செல்வந்தர்கள் மேற்கத்திய வங்கிகளில் அநேகமாக டாலர் வடிவிலேயே சொத்துக்களை வைத்திருக்கின்றனர். டாலரைத் தவிர்க்கும் முயற்சியினை ரஷ்யக் கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்தகைய வர்க்க எதிர்ப்பினை புடின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என்னதான் அமெரிக்க எதிர்ப்பு கொண்டதாக இருந்தாலும், புடினின் ரஷ்யாவும் சோவியத் யூனியனும் ஒன்றல்ல. நாளைக்கே புடின், மேற்கத்திய நாடுகளிடம் சரணடைந்து, டாலர் தவிர்ப்பு நடவடிக்கையினைக் கைவிட்டாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

தமிழில் : ஆர்.எஸ். செண்பகம், திருநெல்வேலி.

6/6/14

தஸ்தயேவ்ஸ்கியின் அப்பாவியின் கனவு

‘அவர்கள் தீயவர்களாக மாறிய பிறகு சகோதரத்துவத்தையும் மனிதாபிமானத்தையும் பற்றி பேசத் தொடங்கி இக்கருத்துக்களை புரிந்து கொண்டனர். அவர்கள் குற்றவாளிகளாக மாறிய பிறகு நீதி என்ற கருத்தைக் கண்டுபிடித்தார்கள். நீதியை நிலை நிறுத்துவதற்காக பெரிய சட்டப்புத்தகங்களை கோட்பாடுகளை எழுதிக் கொண்டார்கள். இச்சட்டங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு தூக்கு மேடையை நிறுவினார்கள், அவர்கள் எதை இழந்துவிட்டார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் தெளிவில்லாத நினைவு மட்டுமே இருந்தது. ஒரு காலத்தில் தாங்கள் கபடமில்லாதவர்களாக, மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இருந்திருக்க முடியும் என்ற எண்ணமே அவர்களுக்கு சிரிப்பைக் கொடுத்தது. அவர்கள் அது ஒரு கனவு என்றார்கள், அதை பிம்பங்களிலும் உருவங்களிலும் அவர்களால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை. ஆனால் விசித்திரமும், அதிசயமும் என்னவென்றால் அவர்கள் தங்களுடைய முந்தைய மகிழ்ச்சியை கட்டுக்கதை என்று சொன்னார்கள்’.
‘இந்தப் பூமியில் வாழ்கின்ற திறமையை இழந்துவிடாமலேயே மனிதர்கள் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தீமையை மனிதனின் இயற்கையான நிலைமை என்பதை நான் நம்ப முடியாது. அதை நான் நம்பமாட்டேன்’.
“வாழ்கையைப் பற்றிய உணர்வு வாழ்க்கையை காட்டிலும் உயர்வானது, மகிழ்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவு மகிழ்ச்சியைக் காட்டிலும் உயர்வானது. இதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். நான் போராடுவேன். எல்லோரும் விரும்பினார்கள் என்றால் அனைத்தையும் உடனடியாகச் செய்துவிட முடியும்”.–‘அப்பாவியின் கனவு’
 ஆசிரியர்: #ஃபியோதர்_தஸ்தயேவஸ்கி (தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் நூலில் இருந்து).

5/6/14

மாற்றம் அல்ல, தொடர்ச்சியே!

அக்கீல் பில்கிராமி கொலம்பியா பல்கலைக்கழகத் தத்துவத் துறை அறிஞர் 

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களின் பின்னணியில், புதிய பிரதமர் மோடி “இந்தியாவின் அரசியல் பிரபஞ்சத்தினையே முற்றிலும் மாற்றி அமைக்கப் போகிறார்” என ‘கார்டியன்’ ஏட்டில் அஷூதோஷ் வர்ஷினி என்ற விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலப் பாசாங்கு வார்த்தைகள் கூட அரசியல்வாதிகளுக்கு இத்தகைய தொரு மலிவான வழியில் புகழ் தோற் றத்தினைக் கொடுத்து விடுகின்றன. தேர்தல் காலத்தில் அச்சிலும், திரை யிலும் மோடியும் அவரது பாசாங்குப் பேச்சுக்களும் இல்லாமல் எந்த ஊடகஇருந்தது? மாறிவரும் இன்றைய நவீனகால பொது வாழ்க்கையின் பிரதிபலிப் பின் ஒரு பகுதியே இது. இந்தத் தோற் றத்தினைப் பெறுவதற்கு மோடி எடுத்துக் கொண்ட கடுமையான முயற்சிகள், கார்ப் பரேட்டு நிறுவனங்களும், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் இதற்காக செலவிட்ட நிதி என அனைத் தும் சேர்ந்து மோடிக்கு நாடு முழுவதும் இத்தகைய தோற்றத்தினை மக்கள் மத்தியில் உருவாக்கி விட்டது என்னவோ உண்மை.



தன்னடக்கப் பாசாங்கு


மோடியின் தந்திரம் பலித்து விட்டது. நாட்டின் மிக உயர்ந்த பதவியினை அவர் அடைந்து விட்டார். ஆனால், அவர் இப்போது நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தனது இயல்பான தன்மையினை மறைத்து, மிகவும் தன்னடக்கப் பாசாங்குடன், ஏழை மக்களைப் பற்றியும், உழைக்கும் மக்களைப் பற்றியும் மிகவும் அக்கறையுடன் பேசத் தொடங்கியுள்ளார். இவர் தொடரப் போகும் கொள்கைகளால் எந்த மக்கள் மேலும் வறுமைக்குள்ளும் பாதுகாப்பற்ற வாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படப் போகின்றனரோ, அந்த மக்கள் குறித்து இப்போது மிக்கப் பரிவுடன் பேசி வருகிறார். தேர்தலுக்கு முன்பு மோடியை எதிர்த்தவர்களில் சிலர் கூட, அவர் ஏதாவது நல்லது செய்யக் கூடும் என்று நம்புகின்ற இன்றைய நிலையில், இதைச் சற்று அழுத்தமாக கூற வேண்டியத் தேவை உள்ளது எனக் கருதுகிறேன்.

மெத்தனம் கூடாது

ஒரு ஜனநாயகத்தில் தேர்தல்கள் குறித்து இரண்டு விஷயங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு, அந்த முடிவுகள் ஒருவருக்கு அச்சமளிப்பதாக இருப்பினும், எந்த காரணத்தைக் கொண்டும் வாக்களித்த மக்கள் மீது குற்றம் சொல்லக் கூடாது. இதைத் தாண்டி பெருந்தன்மையுடன் பேசுவதற்கு இதில் வேறொன்றுமில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து விமர்சனபூர்வமாக கணிப்புகளைச் செய்யும் அம்சத்தில் மட்டும் அசட்டையாக இருந்து விடக் கூடாது. அவப்பெயர் கொண்ட ஒருவர் வெற்றி பெற்று விட்டதனாலேயே, அந்த வெற்றியினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் தனது சித்தாந்த நம்பிக்கைகளையும், இயல்புக் குணாதிசயங்களையும் மாற்றிக் கொள்வார் என்று முடிவுக்கு வந்து விடக் கூடாது. அத்தகைய மெத்தனப் போக்கு தீயது. அது நமது நம்பிக்கைகளையும் போராட்டங்களையும் பாழ்படுத்தி விடும்.

பாசிசம் என்பது என்ன?

1930-40களில் ஐரோப்பாவில் இருந்த நிலைமைகளை மனதில் கொண்டு, அந்த அடிப்படையில், இன்று காலத்திற்குப் பொருந்தாத வகையில், மோடியை ‘பாசிஸ்ட்’ என்று அழைப்பது அறிவீனம் என, மோடி எதிர்ப்பாளர்கள் குறித்து சில அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். அப்படியானால், பாசிசம் என்பது தான் என்ன? பாசிசத்திற்கு இரண்டு முக்கிய குணாம்சங்கள் உண்டு. ஒன்று, தனது நாட்டிற்குள்ளேயே அந்நிய எதிரிகள் என்று ஒரு பகுதியினரை அடையாளப்படுத்துவது. (ஜெர்மனியில், யூதர்கள், நாடோடிஜிப்சிகள் இவ்வாறு அடையாளப்படுத்தப் பட்டனர்). இரண்டு, தேசத்தின் நலன்களையும், கார்ப்பரேட் நலன்களையும் இரண்டறக் கலப்பது. பாசிசம் என்பது அது தான் என்று பாசிசத்திற்கு முசோலினி அளித்த அந்த புகழ் பெற்ற விளக்கம் அந்தவிமர்சகர்களுக்கு நினைவுக்கு வரவில்லை போலும். முஸ்லிம்கள் குறித்த விஷயத்தில் மோடியின் கடந்த கால வரலாறு, அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் என இவ்விரண்டையும் பொருத்திப் பார்த்தால் மோடி யார் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா என்ன?.

பசப்பல்கள்!


மாற்றம் குறித்தும், இந்தியாவின் புதிய எதிர்காலம் குறித்தும் மோடி விடுக்கும் அறிக்கைகளை பசப்பல்கள் என்று நான் கூறுவதற்கு அழுத்தமான காரணங்கள் உண்டு. மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் பின்பற்றிய கொள்கைகளைத் தான் மோடியும் தொடரவுள்ளார். ஒரேஒரு மாற்றம் என்னவெனில், பி.ஜே.பிஅந்தக் கொள்கைகளை சற்று சாமர்த்தியமாக நிறைவேற்றும். தற்போதைக்கு, பொருளாதார அரங்கினை விட்டு விடுங்கள். உதட்டளவில் மதச்சார்பின்மை பேசிக் கொண்டாலும், இந்திரா காந்தியும், பின்னர் ராஜீவ் காந்தியும் இந்திய அரசியலில் பெரும்பான்மைவாத, வகுப்புவாத அம்சங்களை நுழைத்தனர். பின்னர் பி.ஜே.பி அதை எவ்வாறு அவற்றின் தர்க்கரீதியான எல்லைக்கு வெற்றிகரமாக எடுத்துச் சென்றது என்பது நாம் அறிந்தது தானே?

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், உணவுப் பாது காப்புத் திட்டம் என்பனவெல்லாம் ஐ.மு.கூ அரசின் திட்டங்களே எனினும், அதனைச் சரியாக நிறைவேற்றாமல், அது அவற்றைக் கிடப்பில் போட்டு விட்டது. ஆனால், பி.ஜே.பி இது போன்ற விஷயங்களில் சாதுரியமாக நடந்து கொள்ளும். மோடியின் ‘குஜராத் மாடலுக்கும்’, சந்திரபாபு நாயுடுவின் ‘ஆந்திரா மாட லுக்கும்’ இடையில் என்ன வேறுபாடு? சென்ற முறை சந்திரபாபு நாயுடு ஆட்சியின் முடிவில் என்ன ஏற்பட்டது? பெருநகர் அடிப்படியிலான வளர்ச்சி என்ற பெயரில் சாமானிய மக்களின் நலன்களைக் காவு கொடுத்ததன் விளைவாக ஆந்திராவில் அன்று சந்திரபாபு நாயுடுவின் கட்சி தோற்றது மட்டுமல்ல, அந்த மாநிலமே இன்று இரண்டு துண்டுகளாகப் பிளக்கப்பட்டு விட்டதே?.

ஊழல் ஒழிந்து விடுமா?

காங்கிரஸ் ஆட்சியில் உருவான பெரும் ஊழல்களை எல்லாம் ஒழித்து விடுவோம் என பி.ஜே.பி கூறுவதும் மற்றொரு பசப்பலேயாகும். இதற்கு முந்தைய கால கட்டத்தில் இதே பி.ஜே.பி ஊழல் குறித்த அம்சத்தில் எப்படி நடந்து கொண்டது என்பது நாம் அறிந்தது தானே? கடந்த இருபது ஆண்டுகளில் ஊழல் இந்திய முதலாளித்துவத்தின் உள்கட்டுமானமாக மாறியிருக்கும் நிலையில், அதை ஒழிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதைப் பொறுத்த மட்டில், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது பிரச்சனையே அல்ல.

முஸ்லிம் இளைஞர்கள்!

இந்தத் தேர்தல் காலத்தில், படித்த முஸ்லிம் இளைஞர்களின் மனநிலை, பிற பொதுவான முஸ்லிம் மக்களின் மன நிலையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தது என, ‘பைனான்ஷியல் டைம்ஸ்’ (22.05.2014) ஏட்டில் ஒரு விமர்சகர் எழுதியிருக்கிறார். மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்கு சாதகமான மனநிலையில் அவர்கள் இருந்தனர் என்றும் கூறுகிறார். இது ஏறக்குறைய ஜின்னா காலத்தில் இருந்தே, அதாவது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடர்கிற நிலைமை தான். ஒன்றுபட்ட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள், குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் படித்த இளைஞர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டவர்களாக இருந்தனர்என முன்பு மௌலானா ஆசாத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். இப்போதும் கூட, மோடி பெரும்பான்மை வாதத்தில் நம்பிக்கை கொண்டவர் எனினும், பெருநகர் அடிப்படையிலான வளர்ச்சி என்று வரும் போது வேலை வாய்ப்புக்கள் உருவாகலாம் என்ற நப்பாசை அவர் களுக்கு இருந்திருக்கக் கூடும். 

இது என்ன புதிதா?

பெருநகர் அடிப்படையிலான வளர்ச்சி என்பது ஒன்றும் புதிதல்ல. இதைத்தானே முந்தைய அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கூறி வந்தார்? 2008 மே மாதம் டெஹல்கா ஏட்டிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய நாட்டின் 85 சதவீதத்தை நகரங்களாக மாற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். இந்திய நாட்டில், ஆயிரக்கணக்கான வருடங்களாக விவசாயத்தை நம்பி வாழும் கிராமப்புற மக்களின் வாழ்க்கையினை ஒரேயடியாக மாற்றி விடுவது அவ்வளவு எளிதா என்ன? வறுமையில் வாடும் அந்த மக்களின் வாழ்நிலையினை மேலும் மோசமாக்குவதன் மூலம் தான், இந்தச் சீர்திருத்தத்தினை இன்று அவர்கள் தொடங்க முடியும்.

நவீன தாராளவாதமும், அதிருப்தியும்!

மாற்றம் குறித்த வாக்குறுதிகள் ஒன்றும் புதிதல்லவே. 2004 தேர்தல் களை சற்று நினைத்துப் பாருங்கள். ‘ஒளிரும் இந்தியா’ என பி.ஜே.பி கூறிய பசப்பல் வார்த்தைகளை எவரும் அன்று நம்பவில்லை. ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது. பத்து ஆண்டுகளாக நடைபெற்ற மோசமான ஆட்சியின் பின்னணியில், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் அவ்வளவு வலு வாகவும் இல்லை. அது மக்களிடம் எடுபடவுமில்லை. நவீன தாராளவாதக் கொள்கைகளே அனைத்து அவலங்களுக்கும் காரணம் என்ற உண்மையினை மக்கள் புரிந்து கொள்ளாதவாறு தடுக்கும் வகையில் ஊடகங்களின் செயல்பாடுகள் அமைந்து விட்டன. அந்த நோக்கில் செயல்படும் பல பண்டிதர்கள், விமர்சகர்களின் சேவகமும் இதன் பின்னணியில் இருந்தது. நாட்டு நடப்புக்கள் குறித்த குறைந்தபட்ச விவரங்களும், நேர்மையான பரிசீலனையும் இருந்தால் இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

நேர்மையான அரசியல் கட்சிகள்!

அதே வேளையில், இந்த நிலைமை தான் எப்போதும் தொடரும் என விரக்தி அடையத் தேவையில்லை. நவீன தாராளவாதக் கொள்கைகளை எதிர்க்கும் நேர்மையான அரசியல் கட்சிகள் தங்களது பலவீனத்தைக் களைந்து, தங்களது அரசியல் சக்தியினையும், அரசியல் உறுதியினையும் ஒன்று திரட்டிப் போராடும் நிலை தோன்றினால் அது சாத்தியமானதே. இன்றைய சூழலில், அது உடனடியாக சாத்தியமில்லை என்பது போலத் தோன்றக் கூடும். ஆனால், இன்று வரை கடைப்பிடிக்கப் பட்டிருக்கும் கொள்கைகளும், நாளையும் மோடி தொடரவிருக்கிற மேலும் கடுமையான நவீன தாராளவாதக் கொள்கைகளும், உண்மையான மாற்றத்திற்கான சூழ்நிலையினையும், அதற்காகப் போராடும் உத்வேகத்தினையும் கண்டிப்பாக உருவாக்கி விடும்.

வழி காட்டும் அரசியல் எது?

இது ஒன்றும் நடக்க முடியாதது அல்ல. உலகின் சில பகுதிகளில் இது ஏற்கனவே தொடங்கி விட்டது. தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் அது எழுச்சி பெற்று வருகிறது. ஆனாலும், சர்வதேச ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்து வருகின்றன. கடுமையான எதிர்மறைச் சூழலுக்கிடையிலும் அந்நாடுகளின் மக்கள் நடத்தும் இயக்கங்களின் பின்னணியில், இன்று மாற்றுக் கொள்கைகளை அமலாக்கும் அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரு கின்றன. அந்த அரசுகள், சர்வதேச நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தங்களையும் மீறி, எளிய மக்களின் வாழ்நிலையை சிறிது சிறிதாக உயர்த்தி வருகின்றன. இந்தப் பின்னணி சில கேள்விகளை எழுப்புகிறது. மக்கள் அத்தகைய அரசு களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வழிகாட்டிய அரசியல் எது? மக்களை அணிதிரட்டும் வகையில் மக்கள் மத்தியில் அந்த அரசியல் எவ்வாறு கட்ட மைக்கப்படுகிறது? நவீன தாரளவாதக் கொள்கைகளின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகாமல், அதை அந்த அரசுகள் எப்படி எதிர்த்து நிற்கின்றன? அத்த கைய அரசியலையும், அரசியல் பொரு ளாதாரத்தையும் அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், மேற்கண்ட கேள்வி களுக்கான உரிய விடைகளையும் தேடிக் கண்டுணர்தல் இன்று மிகவும் அவசியம்.

தொகுப்பு:இ.எம். ஜோசப் நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 30.05.2014